கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 26, 2024
பார்வையிட்டோர்: 2,530 
 
 

(1988ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம்-1

ஊர் எல்லையில் காம்பவுண்டுச் சுவரில் தெரிந்த போஸ்டரில் –

‘ராஜபார்ட் ரங்கதுரை, கோமாளி சாமண்ணா,ஜில் ஜில் ரமாமணி ஆகியோர் நடிக்கும், ‘வள்ளித் திருமணம் ஸ்பெஷல் நாடகம். காதர் பாட்சா கால் ஆர்மோனியம். அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும். ஆட்ட காலசட்டத்தை அனுசரிப்பதே முறை” என்று கொட்டை எழுத்துக்கள் உரத்துக் கூறின. 

பாகவதர் மாதிரி ஜில்பாக் குடுமியுடன் கோமாளி சாமண்ணா கோணங்கித்தனமாக அந்த போஸ்டரில் சிரித்துக் கொண்டிருந்தான். 

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அவன் தன்னைப் பார்த்துச் சிரிப்பது போலத் தோன்றியது பாப்பாவுக்கு. அவள் வெட்கத்தோடு சிரித்துக் கொண்டாள். ‘ஐயே, மூஞ்சி. யைப் பாரு!’ 

சாலையோர வயல்களில் கரும்புச் சாகுபடி நடந்து கொண் டிருந்ததால் வெல்லப்பாகு வாசனை மூக்கைத் துளைத்தது. 

:அப்பா, கரும்புச்சாறு குடிக்கணும் போல இருக்கப்பா. கொடுப்பாங்களா?”

“வாங்கிட்டு வாரேன் கண்ணு.” 

வண்டி முழுதும் பச்சைப் புற்களை அடர்த்தியாய்ப் பரப்பி அதன் மீது சாயம் போன ஜமுக்காளத்தை விரித்திருந் தான் குமாரசாமி. 

அந்தப் புற்களைக் கை நிறைய அள்ளி மாட்டுக்கு முன் னால் போட்டதும், “இதோ வந்துர்ரேன் பாப்பா! இங்கேயே நில்லு” என்று சொல்லிக் கொண்டே சரிவில் இறங்கி நடந்தான் 

‘அம்மாடி!’ என்று பாப்பாவும் கீழே குதித்து மரத்துப் போன தன் கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டாள். 

குமாரசாமி இதற்குள் மண் குடுவை ஒன்றில் நுரை ததும் பக் கரும்புச் சாறு கொண்டு வந்து, “இந்தா, வடி கட்டி வாங்கியாந்திருக்கேன்” என்றுகொடுக்கவும் அதை ஆவலோடு வாங்கிக் குடித்த பாப்பா, “நெஞ்செல்லாம் இனிக்குதப்பா. “நீயும் கொஞ்சம் குடி!” என்றாள். 

“ஜாவாக் கரும்பாச்சே. அப்படித்தான் இனிக்கும்.”

அதைக் குடித்து முடித்ததும், “புறப்படுவமா?டயம் என்ன ஆச்சு? இருட்டுக்கு முன்னாலே நகைக் கடைக்குப் போயிர ணும்” என்றான். ‘வாச்’சைப் பார்த்த பாப்பா அஞ்சரை ஆகுது” என்றாள். அவள் எட்டாவது படிக்கும்போது அம்மா வாங்கிக் கொடுத்தது. இப்போது அம்மா இல்லை. 

அந்த ஒற்றை மாட்டு வண்டி ஏறத்தாழ நகர எல்லைக்குள் வந்துவிட்டிருந்தது. சாலை மரத்து அக்கூ பட்சிகள் மழையைக் கூவி அழைத்துக் கொண்டிருந்தன. 

“ரொம்ப இறுக்கமாயிருக்குதில்லே மழை வரும் போல….” என்று மகளிடம் சொல்லிக் கொண்டே, “ஹய்… ஹய்….!” என்று வண்டியை வேகமாகச் செலுத்தினான். 

மெயின் ரோடு நாற்சந்தியில் ஐந்து லாந்தரைச் சுற்றி வண்டியைத் திருப்புகிறபோது முனிசிபல் தெரு விளக்குகள் மஞ்சளாய்ச் சிணுங்கின. 

தைப்பூச விழாவோடு சந்தைக் கூட்டம் வேறு. 

திடீரென்று அதிர்ந்த திருவிழா வேட்டுச் சத்தத்தில் மிரண்ட மாட்டை இழுத்துப் பிடித்தான் குமாரசாமி. வண்டி யைச் சந்தை மைதானத்தில் கொண்டு நிறுத்தி தாழங்குடையை யும் சோற்று மூட்டையையும் பத்திரப்படுத்திவிட்டு, “வாம்மா போகலாம்” என்றான். 

ஓரத்தில் புதுப் பானைகள் மலையாய்க் குவிந்து கிடந்தன. இன்னொரு பக்கம் சாம்பல் பூசணிக்காய்கள். 

காடா விளக்கு ஒளியில் கண்ணாடி வளையல்களைப் பரப்பிக் கொண்டு பட்டை நாமம் தீட்டியிருந்த வளையல் வியாபாரி தெலுங்கு பேசிக் கொண்டிருந்தார். சுவர் ஓரமாக அடுப்பு வைத்து மசால் வடை வேகும் வாசனை போவோர் வருவோரைச் சுண்டி இழுத்தது. 

கைநிறைய வளையல்களை அடுக்கிக் கொண்டு, வாய் நிறைய மசால் வடையைத் திணித்துக் கொண்ட பாப்பா, “சோடா” என்றாள் அப்பாவிடம். சற்றே தூரத்தில் அரச மரத்தடியில் பொய்க்கால் குதிரை ஆட்டம் நடப்பதைப் பார்த்த அவள், “அங்கே போய் வேடிக்கை பார்க்கலாமா?” என்பது போல் கண்களால் கேட்டாள். 

“அதுக்கெல்லாம் நேரமில்லே. இப்ப முதல்ல நகைக் கடைக்குப் போய் உன் அம்மாவின் வளையல், காசு மாலை, கம்மல் அத்தனையும் வித்து. காசாக்கிடணும். தங்கம் நல்ல விலை போகுதாம். அப்புறம் இந்த ஊர்ல நம்ம உறவுக்காரப் பையன் ஒருத்தன் எலக்ட்ரிக் ஆபீஸ்ல வேலை செய்யறானாம். உன் அழகுக்கு ஏத்த பையனாம். அம்மா சொல்லிட்டுப் போயிருக்கா, உன்னை அவனுக்குத்தான் கட்டிக் கொடுக்க ணும்னு. அவன் விலாசம் கேட்டு வாங்கி வச்சிருக்கேன்.” 

“எனக்குக் கலியாணமும் வேணாம். ஒண்ணும் வேணாம்” என்றாள் பாப்பா. 

“அப்படின்னா?” 

“ராத்திரிக்கு டிராமா பார்க்கலாம்பா. வள்ளித் திருமணம்.”  

“முதல்லே வள்ளித் திருமணம். அப்புறம்தான் உன் திரு மணங்கறயா? நல்ல பெண்ணம்மா நீ! வா, ஐயர் கடைக்குப் போய் ஏதாச்சும் சாப்பிடலாம்.” 

“எனக்குப் பசி இல்லை. கரும்புச் சாறும் மசால்வடையும் நெஞ்சைக் கரிக்குது… நீங்க சாப்பிடுங்க.’ 

இருவரும் ஐயர் கிளப்பை நோக்கிச் செல்லும்போது, அரிக்கன் விளக்கு வாங்கணும்னு சொன்னீங்களே, அத பாருங்க, அந்தக் கடையிலே….” என்றாள் பாப்பா. 

வண்டியைத் தெரு ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் அரிக்கன் விளக்கு ஒன்றை விலை பேசி வாங்கி அதில் நாடா போட்டு, ‘குரங்கு மார்க்’ கெரஸினும் ஊற்றிக்கொண்டார்கள். 

பாண்டு வாத்தியம் இசைக்க, ஆகாச வேட்டுகள் முழங்க, தண்டமாலையும் தங்க ஆபரணங்களும் மத்தாப்பு வெளிச்சத் தில் தகதகக்க, ஊரே குதூகலத்தில் எக்களிக்க தைப்பூச் உற்சவர் ஏக தடபுடலாய் வீதிவலம் போய்க் கொண்டிருந்தார். 

கூட்டம் அலைமோதிக் கொண்டு நகர்ந்தபோது, இளமை யின் பூரிப்பில் பதினேழைக் கடந்து நின்ற பாப்பாவின் அழகை மத்தாப்பூ வெளிச்சத்தில் கண்டு மயங்கிய வாலிபர்கள் அவளையே கண்கொட்டாமல் பார்த்தார்கள். 

“பாப்பா, சாமி பார்த்தது போதும், வா. இந்த ஆசாமிங்க கண்ணிலிருந்து தப்பிப் போயிரலாம்” என்று அழைத்தான் குமாரசாமி. 

நகைக் கடைக்குப் போய் அம்மாவின் நகைகளைக் கல்லில் உரசி,மாற்றுப் பார்த்து, குந்துமணி எடை போட்டுப் பணம் வாங்குவதற்குள் மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. ‘டிராமா வுக்கு லேட்டாயிடுத்தே!’ 

குமாரசாமியின் இடுப்பில் இப்போது நகைகளுக்குப் பதிலாக நூறு ரூபாய் நோட்டுகளாய் மாறி இருந்தன. அடிக்கொரு தடவை இடுப்பைத் தொட்டுப் பார்த்துக்கொண்டவன் ஐயாயிரம் எதிர்பார்த்தேன். ஆறாயிரமாக் கெடச்சுட்டுது என்று காவிப் பற்களைக் காட்டினான். 

“உரக்கப் பேசாதீங்க. எவனாவது பிக்பாக்கெட் அடிச்சுடப் போறான்.” 

“அவன் பொழைச்சுருவானா அப்புறம்?” என்று மீசை யைத் தடவியவன், “இனிப்பு ஏதாச்சும் சாப்பிடறயாம்மா. ஜாங்கிரி, மைசூர்ப்பாகு!” எதிரில் பெட்ரமாக்ஸ் விளக்கில் பிரகாசித்த மிட்டாய்க் கடையைக் காட்டினான். 

“வேணாம்.”

”காராசேவு?” 

“ஊஹூம், டிராமா போவம்.” 


சூரியகுளம் தகரக்கொட்டகையில் வள்ளித்திருமணத்தை முன்னிட்டு வாசலில் சரிகைத் தொப்பிக்காரர்கள் பாண்டு வாசித்துக் கொண்டிருந்தார்கள். தெரு ஓரம் சாய்ந்திருந்த வேப்ப மரக்கிளைகளில் கலர் மின்சார பல்புகள் நிர்வாணமாய் எரிந்து கொண்டிருந்தன. 

திருவிழாவுக்கு வந்திருந்த கிராமத்து மக்கள் அத்தனை பேரும் நாடகம் பார்க்க ‘ஜே ஜே’ என்று நெரிசலாய் நின்றார் கள். அந்தக் கூட்டத்தில் எப்படியோ முண்டி அடித்துப் புகுந்து டிக்கட் பொந்தில் கையை விட்டு இரண்டு முதல் வகுப்பு டிக்கட்டுகளை வாங்கி வந்துவிட்டான் குமாரசாமி. 

ஒன்பது மணி என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் நாடகம் பத்தரை மணிக்குத்தான் ஆரம்பமாயிற்று. 

திரைக்குள்ளேயிருந்து சாம்பிராணி மணம் வீச, “ஜெய ஜெய கோகுல பாலகா ….” என்று காதர் பாட்சா கணீரென்று குரலெடுத்துப் பாட அந்தக் குரலும் ஹார்மோனிய நாதமும் கொட்டகையை நாத வெள்ளத்தில் மிதக்கச் செய்தன. 

“கோகுலாட்டமிக்கும் குலாம் காதருக்கும் என்ன சம் பந்தம்னு கேட்பாங்களே, பார்த்தியா பாப்பா ! இப்பபாடறவரு காதர் பாட்சா சாயபு – பாட்டு ‘கோகுல பாலகா!’ வேடிக்கையா இல்லை?” 

பாப்பாவின் கவனமெல்லாம் எப்போது திரை விலகும். எப்போது கோமாளி சாமண்ணாவைப் பார்க்கலாம் என்பதிலேயே இருந்தது. மாலையில் போஸ்டரில் பார்த்த அந்த ஆசை முகம் அடிக்கடி அவள் நினைவில் தோன்றித் தோன்றி… 

கடைசியாகத் திரை விலகி சாமண்ணா மேடைக்கு வந்தான். 

வரும்போதே கண்களைச் சுழற்றினான். சார்லி சாப்ளின் மாதிரி கால்களைத் தொட்டி போல் வளைத்தான். பிரம்பைச் சுழற்றினான். குல்லாயைப் பிரம்பால் தூக்கித் தலைக்கு மேல் சுழற்றினான். குளுகுளுவென்று கொட்டகை முழுதும் சிரித்தது! அவனுடைய ஒவ்வொரு அசைவுக்கும் கைதட்டலும் ஆரவார மும் பிரமாதப்பட்டது. 

‘மாடி மேலே மாடி 
அதன் மேலே ஒரு லேடி
அவளும் நானும் ஜோடி.’ 

என்று பாடிக் கொண்டே ஆர்மோனியத்தின் அருகில் வந்து நின்றான். 

காதர்பாட்சா அந்த மெட்டிலேயே சரளி வாசித்தார். சாமண்ணா சுழன்று சுழன்று ஆடி, தலைகீழாக ஒரு பல்டி அடித்து அந்த வேகத்திலேயே எழுந்து நின்றபோது கொட்டகை அதிர்ந்தது. 

“ஒன்ஸ்மோர்!” என்ற விஸில் சத்தம்! சாமண்ணாவுக்கு உற்சாகம் தாங்கவில்லை. மறுபடியும் அந்தர் பல்டி! 

அடுத்த காட்சியில் வள்ளி வேடத்தில் வரப் போகும் ஜில் ஜில் ரமாமணி இப்போது லேடி வேடத்தில் வந்து நின்றாள். சாமண்ணாவுக்கு எதிர்ப் பாட்டுப் பாடினாள். சிருங் காரமாய் அவனைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சினாள். 

சாமண்ணாவை அவள் அணைத்துக் கொஞ்சியது பாப்பா வுக்குப் பிடிக்கவில்லை. ‘இந்தப் பொறாமை உணர்வு தனக்கு ஏன் வர வேண்டும்? யாரோ ஒரு கூத்தாடிப் பையனை யாரோ ஒரு கூத்தாடிப் பெண் தொட்டால் அதைக் கண்டு நான் ஏன் பெருமூச்சு விட வேண்டும்?’ பாப்பாவின் உள் மனம் கேட்டது. 

அவனுடைய அந்தக்கோணங்கி மேக்கப்’ புக்குப்பின்னால் ஓர் அழகு இருந்தது. கண்களில் வசீகரம் தெரிந்தது. அந்தக் காலத்து நாகரிகமான பாகவதர் ஜில்பாக் குடுமியே அவனுக்கு ஒரு கவர்ச்சியைத் தந்தது. 

அரிதாரம் பூசி மேக்கப் மூலம் அவன் தன் வயதை உயர்த்திக் காட்டியிருந்தபோதிலும் அந்த முகத்தில் இருபது வயதின் இளமை ஒளிந்திருந்தது. நாடகம் முடிந்ததும் அவனை நேரில் பார்த்து நாலு வார்த்தை பாராட்டிப் பேச நினைத்தாள் பாப்பா. 

நாடகம் சூடு பிடித்து சுவாரசியமாகப் போய்க் கொண் டிருந்த கட்டத்தில் திடீரென்று வானம் பொத்துக் கொண்டது போல் பேய்மழை கொட்டத் தொடங்கியது. கனத்த மழைத் துளிகள் தடதடவென தகரக் கொட்டகை மீது விழும் சத்தத் தில் நாடக பாத்திரங்களின் பேச்சு அமுங்கிப் போகவே, தரை மகா ஜனங்கள் விசில் அடித்து கலாட்டா செய்தனர். ‘பணம் வாபஸ் கொடு” என்று சில குரல்கள். “ஆட்ட கால சட்டத்தை அனுசரிப்பதே முறை’ என்று பதிலுக்குச் சில குரல்கள். தொடர்ந்து பெய்த மழை காரணமாகக் கொட்டகை யின் கூரை ஒழுகத் தொடங்கி, அடுத்த சில நிமிடங்களுக்குள் கீழே வெள்ளம் புரளவே எல்லோரும் அவசரம் அவசரமாக எழுந்து வெளியே ஓடத் தொடங்கினர். 

பாப்பாவும் குமாரசாமியும் மழைக்கு அஞ்சி வாசல்படிக்கட் டில் நின்றனர். 

குமாரசாமி தான் வைத்திருந்த ஈச்சங்குடையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, “நீ இங்கே நில்லு பாப்பா. நான் போய் வண்டி கொண்டாரேன்” என்று வேகமாக நடந்தான். 

நாடகத்துக்கு வந்த கூட்டம் கரைந்து கொண்டிருந்தது. இதற்குள் அரிதாரத்தை அழித்துக் கொண்டு முகத்தைத் துடைத்தபடியே வெளியே வந்து நின்றான் சாமண்ணா. படியில் நின்று கொண்டிருந்த பாப்பா தன் தந்தை சென்ற திசையி லேயே பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென்று தத்திக் குதித்த தவளை ஒன்று அவள் பாதத்தில் பட்டு சில்லென்று உறைக்கவே, பயந்து போய் ‘ஆத்தாடி!’ என்று அலறிக் கொண்டே பின்பக்கம் சாய்ந்தாள். படிக்கட்டில் தவறி விழப் போன அவளை சாமண்ணா சட்டென்று தன் கைகளால் தாங் கிக் கொண்டு, “தவளைக்கா இப்படிப் பயந்துட்டீங்க?” என்று சிரித்தான். பாப்பாவுக்கு நெஞ்சம் படபடத்தது. வெட்கத்தில் முகம் சிவந்தவளாய், ‘மன்னிச்சுருங்க’ என்று கூறி விலகிக் கொண்டாள். 

“பரவாயில்லை. ஆனால் பாவம்! தவளைதான் ரொம்பப் பயந்துருச்சு!” என்று ஜோக்கடித்தான் சாமண்ணா. பாப்பாவுக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை. நாணத்தோடு அவன் முகத்தைப் பார்த்தாள். 

‘இந்த அழகு முகமா இத்தனை கோணங்கி செய்யுது!’ என்று எண்ணிக் கொண்டாள். 

“நீங்க முன் வரிசையில்தானே உட்கார்ந்திருந்தீங்க? கூட உட்கார்ந்திருந்தவர் யாரு? உங்க அப்பாவா?” 

“ஆமாம்; அதோ வண்டி கொண்டாரப் போயிருக்கார். இப்ப வந்துருவார்.” 

“சாரல் அடிக்குது, இப்படித் தள்ளி வந்து நில்லுங்க.”

“உங்க நடிப்பும் பேச்சும் ரொம்ப தமாஷாயிருந்தது. பாழாப் போன இந்த மழை வந்து கெடுத்துட்டுது” என்று சொல்ல நினைத்தாள். ஆனால் பேச்சு வரவில்லை. 

”எந்த ஊரு?”

“பூவேலி.” 

“இப்ப கிராமத்துக்கா போறீங்க?'” 

“இல்லை. ராத்திரிக்கு எங்கயாவது லாட்ஜில தங்கிட்டு காலம்பற கிராமத்துக்குப் போலாம்னு பாக்கறோம்.”

“மணி பன்னிரண்டு ஆகப் போகுது. மழை வேறே. லாட்ஜில் இந்த நேரத்துல எங்க இடம் கிடைக்கப் போகுது? திருவிழாவாச்சே! உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா ராத்திரி என் வீட்டிலேயே தங்கிட்டுப் போகலாம்.” என்று அழைத்தான் சாமண்ணா. 

“அப்பாவைக் கேளுங்க.” 

குமாரசாமி வண்டியைக் கொண்டு வந்து நிறுத்திய போது பாப்பாவும் சாமண்ணாவும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, “அடடே, நீங்களா! ரொம்ப சிரிப்பா நடிக்கிறீங்களே!” என்றான். 

“அப்பா! நம்மை இவர் வீட்டுக்குக் கூப்பிடறாரு.லாட்ஜிலே இடம் கிடைக்காதாம். ராத்திரி தங்கிட்டுப் போகலாம்னு சொல்றாரு….” 

“தம்பிக்கு எதுக்கு சிரமம்?” 

“சிரமம் ஒண்ணும் இல்லீங்க…?”

“நீ என்னம்மா சொல்றே?” 

பாப்பா பேசாமலிருந்தாள். அதில் அவள் சம்மதம் தெரிந்தது. 

“சரி, தம்பி! உங்களுக்குத் தொந்தரவு இல்லேன்னா வாரோம். ஏறிக்குங்க” என்றான். 

சாமண்ணா முன்பக்கமாவே வண்டிக்குள் புகுந்து குமாரசாமி பக்கத்தில் உட்கார, பாப்பா பின்பக்கமாய் முனையிலேயே உட்கார்ந்து அடைப்புக் கம்பியைச் செருகிக் கொண்டாள். 

“எப்படிப் போகணும் தம்பி? வழி சொல்லுங்க!”

“தெற்கால திருப்பி ஓட்டுங்க. அதோ தெரியுது பாருங்க ஒரு லாட்ஜ், அதுக்குப் பின் சந்துதான். அங்கே ஒரு சின்ன மாடி வீடு தெரியும். அதுதான் என் வீடு.”

“மாடி மேலே யாராச்சும் லேடி இருக்காங்களா?” என்று கண் சிமிட்டினான் குமாரசாமி 

“யாரும் இல்லீங்க, நான் ஒண்டிக் கட்டைதான்.என் அப்பா அம்மா சின்ன வயசிலேயே காலமாயிட்டாங்க. அதிகம் படிக்கல. கூத்தாடியாயிட்டேன்.” 

“அப்படிச் சொல்லாதீங்க. கலைஞனாயிட்டேன்னு சொல்லுங்க.” 

“ஆமாம். இந்தக் கலைஞன் அரை வயிற்றுச் சோற்றுக்கு தினம் தினம் அந்தர் பல்டி அடிக்க வேண்டியிருக்குது!” 

“சோறு சாப்பிட்டீங்களா?” 

“இனிமே எங்கே சாப்பிடறது? ஏகாதசிதான்.” 

“‘நாங்க சாப்பாடு கொண்டாந்திருக்கோம். சாப்பிடறீங்களா?”

“புளியோதரையா?”

“எப்படித் தெரியும்?”

“அதான் மணக்குதே!” 

வாசலை அடையும் போது மழை வேகம் தணிந்திருந்தது. படிக்கட்டுகளின் அடிவாரத்தில் படுத்திருந்த பசி நாய் ஒன்று எழுந்து நின்று ‘படபட’ வென்று காதடித்து வாலைக் குழைத்தது. 

“ஜிம்மி!” என்று அழைத்தவன், “எப்பவும் இங்கத்தான் கிடக்கும். நான் அரைப்பட்டினி, இது முழுப்பட்டினி!” என்று சிரித்துக் கொண்டே போய்க் கதவைத் திறந்தான் சாமண்ணா. பாப்பா வலது காலை எடுத்து வைத்து அந்த வீட்டிற்குள் சென்றாள். 

அத்தியாயம்-2

“கொஞ்சம் நில்லுங்க – நான் போய் முதல்லே லைட்டைப் போடறேன். அப்புறம் நீங்க வரலாம். இது எனக்குப் பழக்கப்பட்ட இருட்டு!” என்று கூறி நாலே எட்டில் மாடிக் கதவை அடைந்து பூணூலில் கோத்திருந்த சாவியால் பூட்டைத் திறந்த சாமண்ணா ஸ்விச்சைப் போட்டதும் அழுக்கு பல்பு ஒன்று சோகமாய்ச் சிரித்தது. 

“அட, எலக்ட்ரிக் விளக்கு!” என்று வியந்து கொண்டே பின்னோடு வந்து நின்றான் குமாரசாமி. 

“சத்தம் போட்டுச் சொல்லாதீங்க ஓட்டல்காரர் காதிலே விழுந்தா ‘ஓசி வீட்டுக்கு விளக்கு வேறு கொசுறா?’ன்னு ‘கட்’ பண்ணிடச்சொல்வார். இது அவர் வீடு” என்றான் சாமண்ணா.

“அப்படின்னா இந்த வீட்டுக்கு வாடகை கிடையாதா?”

“ஊஹூம், இதை ஓட்டல்ல வேலை செய்யறவங்களுக்கு விட்டு வச்சிருந்தார். இப்ப அவங்க எல்லாரும் காலி பண்ணிட்டாங்க.” 

“ஏன்?” 

“ஒரு ஸர்வர் திடீர்னு இங்கே தூக்கு மாட்டிக்கிட்டு செத்துட்டானாம். ஏதோ காதல் விவகாரமாம். மத்த பசங்க பயத்துலே காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க. அப்புறம் பேய் பிசாசு இருக்கும்னு யாருமே குடி வரலை இங்கே. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி, நான் மாட்டிக்கிட்டேன். அந்த ஓட்டலுக்கு தினமும் சாப்பிடப் போவேன். ஒருநாள் அந்த ஓட்டல்காரரிடம் ஏதாவது வாடகைக்கு ரூம் கிடைக்குமான்னு கேட்கப் போக, அவர் ‘வாடகை ஒண்ணும் தர வேணாம். பாவம், உன்னைப் பார்த்தா ஏழையாத் தெரியுது. சும்மாவே இருந்துக்க’ என்றார்.” 

“ஓட்டல்காரர் ரொம்ப நல்ல மனுசன்னு தோணுது.” 

“நீங்க ஒண்ணு. சோழியன் குடுமி சும்மா ஆடுமா? அவருக்கு ஒரு பெண் இருக்குது. இன்னும் கல்யாணம் ஆகல்லே. அரைப் பைத்தியம். பௌர்ணமி, அமாவாசையிலே முழுசாயிடும். அந்தப் பைத்தியத்தை என் தலையில கட்டப் பார்க்கிறார் ஓட்டல்காரர். அதுக்காகத்தான் இதெல்லாம். ஒரு கல்லிலே ரெண்டு மாங்காய்!”

“இங்கே தனியா இருக்க பயமா இல்லையா?”

“எனக்கென்ன பயம்?” 

“ஆவி கிவி…” 

“ஆவியாவது கீவியாவது? எமனைக் கண்டாலே பயப்பட மாட்டேன் நான்!” 

“எமனைப் பார்த்திருக்கீங்களா?” 

“சத்தியவான் சாவித்திரி நாடகம் போடறமில்ல.அதிலே தினம் தினம் எமனைப் பார்த்து பயம் தெளிஞ்சு போச்சு!” 

பத்துப் பதினைந்து பேர் தாராளமாய்ப் படுத்துத் தூங்கும் அளவுக்கு நீளமான ஹால். அதை ஒட்டி ஒரு சின்ன ரூம். 

நுழைந்ததுமே, அந்த வீட்டையும் அங்குள்ள சாமான்களையும் நுணுக்கமாய் கவனித்துக் கொண்டாள் பாப்பா. 

சுவரில் கணேஷ் காப்பி கம்பெனி பிள்ளையார் படம். 

கதவில்லாத அலமாரியில் கோதைநாயகி, வடுவூர் ஐயங்கார் நாவல்கள், அமிர்தாஞ்சன் டப்பா, பாதி வரை எரிந்து அணைந்து போன ஊதுவத்தி. அதிலிருந்து விழுதாய் ஊசாலாடிய ஒட்டடைச் சாம்பல். 

மூலையில் மண் பானை வைத்து அதன் மீது அலுமினியத் தம்ளர். 

“நீங்க ஐயர்தானே?” என்று தயங்கிக் கேட்டான் குமாரசாமி.

“எப்படிக் கண்டுபிடிக்சீங்க?” 

“பூணூலில் சாவி மாட்டியிருக்கீங்களே!” 

பாப்பா ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டு நின்றாள். 

தூரத்தில் டீக்கடை வெளிச்சம் தெரிந்தது. தேய்ந்து போன கிராமபோன் ரிகார்டில் ‘கோடையிலே இளைப்பாறி’க் கொண்டிருந்தார் எஸ்.ஜி.கிட்டப்பா. 

ஜன்னலை ஒட்டினாற்போல் பெரிய காலி மனை. சுவர் ஓரத்தில் வேப்ப மரம். இன்னொரு பக்கம் ஓட்டலுக்குச் சொந்தமான உருட்டுக் கட்டைகளும் பிளந்த விறகுகளும் குவிக்கப்பட்டிருந்தன. அதன் மீது பரங்கிக் கொடிகள் அடர்ந்து படர்ந்து மஞ்சளாய்ப் பூத்திருந்தன. அருகே இரண்டு கழுதைகள் அசையாமல் நிழல் சித்திரமாய் நிற்க, நாலைந்து தவளைகள் ஜலதோஷக் குரலில் சமீபத்திய மழையை வாழ்த்திக் கொண்டிருந்தன. 

“சாப்பிடுவோமா,தம்பி!” என்று குமாரசாமி கேட்க, பாப்பா சட்டென்று அந்த இடத்தைப் பெருக்கி இலை போட்டுப் புளியோதரையை எடுத்து வைத்தாள். 

சாமண்ணா சாப்பிட அமர்ந்தான்.

“சங்கோசப்படாதீங்க தம்பி! இது உங்க வீடு!” என்றான் குமாரசாமி. 

“வீடு ஓட்டல்காரருடையது. சாப்பாடு உங்களுடையது!” என்று சிரித்தான் சாமண்ணா. 

“தமாஷப் பேசறீங்களே! தம்பிக்கு எப்ப கல்யாணம்?” 

“இந்தக் கூத்தாடிக்கு யாருங்க பெண் கொடுப்பாங்க? கொடுத்தாலும் அரைப்பைத்தியம், முழுப்பைத்தியம் இப்படித்தான் வரும்…” 

பாப்பா அவன் இலையில் இன்னும் கொஞ்சம் புளியோதரை வைத்தாள். 

“போதும். அவ்வளவையும் எனக்கே போட்டுடாதீங்க.”

“நிறைய்ய்ய இருக்குங்க. நீங்க சாப்பிடுங்க” என்றாள் பாப்பா.

“உங்களை ஒண்ணு கேட்கணும்னு நினைச்சேன், கேட்கலாமா?”

“தாராளமாக் கேளுங்க…” 

“நாடகம் ஆரம்பிக்கறதுக்கு முந்தி சாப்பிடற வழக்கமில்லையா?” 

“சில நாளைக்குச் சாப்பிடுவேன். சில நாளைக்குக் காசு இருக்காது. நாடகத்திலே ஒரு சீன்ல நான் நாலு ஆரஞ்சு, அஞ்சு பலாச்சுளை அரை டஜன் வாழைப்பழம் அவ்வளவையும் அப்படியே விழுங்கறாப்பல ஒரு காட்சி வரும். ஜனங்க அதை ரொம்ப ரசிப்பாங்க. இன்னைக்கு மழை வந்து நாடகம் பாதியிலே நின்னு போச்சா? அதனால் அந்த சீன் இல்லாமப் போயிட்டுது. நான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாத ஆளுங்க” என்றான். 

திடீரென்று அந்த அழுமூஞ்சி பல்பு அணைய பாப்பா விரைந்து அந்த அரிக்கன் விளக்கை ஏற்றி வைத்தாள். 

“இதுக்குத்தான் வீட்டிலே ஒரு பெண் பிள்ளை இருக்கணுங்கறது…” என்றான் குமாரசாமி. 

“டிராமாவிலே என் சீன் வர்றப்பத்தான் மழை வந்து கெடுக்கும். சாப்பிடறப்போ விளக்கு அணைஞ்சு போகும். லாட்டரி டிக்கெட் வாங்கினால் முதல் பரிசுக்கு அடுத்த நம்பர் என்னுடைய நம்பராயிருக்கும். சின்ன வயசிலேயே அப்பா அம்மாவை இழந்து அனாதையா ஊர் ஊரா அலைஞ்சேன். கடைசியிலே டிராமாக் கம்பெனியிலே சேர்ந்தேன். அங்கேயும் கோமாளி வேஷம்தான். அரைப்பட்டினிதான். என் வாழ்க் கையே ஒரு நாடகமாப் போச்சு. மொத்தத்திலே நான் ஒரு கத்தரி யோகக்காரன்” என்று விரக்தியோடு சொன்னான் சாமண்ணா. 

“கவலைப்படாதீங்க. சீக்கிரமே நல்ல காலம் பொறக்கும்” என்றான் குமாரசாமி. 

அப்போது மீண்டும் அந்த மின்விளக்கு எரிய ஹால் பிரகாசமாயிற்று. “பார்த்தீங்களா!” 


காலையில் காகம் கரையும் முன்பே எழுந்துவிட்ட பாப்பா அந்த வீட்டையும் வாசலையும் பெருக்கிச் சுத்தப்படுத்தி விட்டு, சர்மண்ணா படுத்துள்ள அறையைப் பெருக்கலாமா?” என்று எட்டிப் பார்த்தாள். 

அவன் அசையாமல் தூங்கிக் கொண்டிருந்தான். 

‘அப்பா கூட. இன்னும் எழுந்திருக்கலையே! இவங்க எழுந்திருப்பதற்குள் குளியல் வேலையை முடித்துவிடலாம்’ என்று எண்ணியவளாய் பாத்ரூமுக்குள் சென்றபோது கதவு மக்கர் செய்தது. காலின் கீழே கிடந்த செங்கல்லைத் தள்ளிக் கதவுக்கு முட்டுக் கொடுத்து, சடுதியில் குளியலை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள். குமாரசாமி வேப்பங்குச்சி ஒடித்துப் பல்-விளக்கிக் கொண்டிருந்தான். 

“அப்பா, அவர் எழுந்துட்டாரா பாருங்க.”

குமாரசாமி அறையில் எட்டிப் பார்த்து ‘தம்பி!’ என்று குரல் கொடுக்க, சர்மண்ணா எழுந்து உட்கார்ந்தான். அவன் கண்கள் சிவந்திருந்தன. “உடம்பெல்லாம் வலிக்குது, தலைவலி தாங்க முடியலே…” என்றான். 

“டாக்டரை அழைச்சுட்டு வரட்டுமா?”

“வேணாங்க. சூடா காப்பி சாப்பிட்டா எல்லாம் சரியாப் போயிடும். இதுக்கெல்லாம் டாக்டரைக் கூப்பிட்டா கட்டுப்படி யாகுமா?’ 

அவனைத் தொட்டுப் பார்த்த குமாரசாமி, “உடம்பு சுடுதே!” என்றான். 

பாப்பா பதறிப் போய், “அப்பா, நீங்க சீக்கிரம் போய்க் காப்பி வாங்கிட்டு வாங்க” என்றாள். 

குமாரசாமி படி இறங்கிப் போனதும், “தலையை ரொம்ப வலிக்குதா?” என்று கேட்டுக் கொண்டே சாமண்ணா அருகில் போய் அவன் நெற்றியைப் பிடித்து விட்டாள். 

சர்மண்ணாவுக்கு அது இதமாக, ஆறுதலாக, இனிமையாக இருந்தது. வலியெல்லாம் குறைந்து விட்டது போல் தோன்றியது. 

அந்த ஜுர வேகத்தில் பாப்பாவின் கரங்களைத் தன் கைகளால் பற்றிக் கொண்டு; “பாப்பா! நீ எப்பவும் இந்த மாதிரி என்னோடேயே இருக்கணும் போல இருக்குது. என்னைத் தனியா விட்டுட்டுப் போயிட மாட்டியே…?” என்று அவளைத் தன் பக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டான். 

“ஐயோ, விடுங்க என்னை” என்று வெட்கத்தோடு திமிறிக் கொண்டாள் பாப்பா. அவள் கைகள் நடுங்கின. கண்களில் பயமும் படபடப்பும் தெரிந்தன. 

“கோவமா, பாப்பா?”

அவள் பதில் எதுவும் கூறாமல், “அமிர்தாஞ்சனம் கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள். 

“உம்” என்றான். 

அவள் அமிர்தாஞ்சனம் எடுத்து வந்து அவன் நெற்றியில் தேய்த்தாள். 

“உன்னோடு பழகினது கொஞ்ச நேரம்தான். ஆனாலும் ரொம்ப நாளாப் பழகின மாதிரி தோணுது. உன் அளவுக்கு என்னிடம் அன்பு காட்டினவங்க, ஆதரவாப் பேசினவங்கன்னு இதுவரை யாருமே கிடையாது. என் வாழ்க்கையிலே நீ ஒருத்திதான் முதல் முதல்…”

அவள் மௌனமாக இருந்தாள். 

“நான் நேற்று ராத்திரி ஒரு வேடிக்கையான கனவு கண் டேன். அதைச் சொல்லட்டுமா?” 

“சொல்லுங்க.” 

“திடீர்னு நான் செத்துப் போயிடறேன். எனக்காக யாருமே அழலே. ‘சாமண்ணா, நீ செத்துப் போயிட்டயா’ன்னு நாலைஞ்சு பேர் மட்டும் அழறாங்க. அவங்க யார்னு பார்த்தா அத்தனை பேரும் சாமண்ணா!” 

“அப்புறம்?” 

“நாலு பேர் என்னைச் சுடுகாட்டுக்குத் தூக்கிட்டுப் போறாங்க… அந்த நாலு பேர் யாருன்னு பார்க்கிறேன்.” 

“யார் அது?”

“அவங்களும் நானேதான். நாலு சாமண்ணா என்னைத் தூக்கிட்டுப் போறாங்க…” 

“அப்புறம்?” 

“நெருப்புச் சட்டி தூக்கறவன், கொள்ளி வைக்கிறவன், எலும்பு பொறுக்கறவன், பால் விடறவன், அஸ்தி கரைக்கி றவன் எல்லாமே நான்தான். ரொம்ப வேடிக்கையாயில்லே.” 

“ரொம்பப் பரிதாபமாயிருக்குங்க.”

“இப்ப எனக்காகக் கண்ணீர் விட நீ ஒருத்தி இருக்கேங்கற நினைப்பே எனக்கு எவ்வளவு ஆறுதலாயிருக்கு தெரியுமா?”

“பாப்பா, சுடச்சுட காப்பி கொண்டு வந்திருக்கேன்” என்று கூஜாவைக் கொண்டு வைத்தான் குமாரசாமி. 

“இந்தாங்க காப்பி. இதைக் குடிங்க. தலைவலி பறந்துரும்” என்றாள் பாப்பா. 

“பல் விளக்கலையே…!” என்று இழுத்தான் சாமண்ணா.

“யானை பல்லா விளக்குது?” என்று குமாரசாமி கேட்க, சாமண்ணா சிரித்துக் கொண்டே காப்பியை வாங்கிக் குடித்தான். தன்னுடைய அத்து மீறிய செயலுக்காகப் பாப்பா தன் மீது கோபப்படவில்லை. அப்பாவிடமும் அது பற்றிச் சொல்ல வில்லை என்று எண்ணும்போது அவனுக்கு வியப்பாகவும் ஆறுதலாகவும் இருந்தது. 

காப்பியைக் குடித்து முடித்ததும் அவன் உடம்பெல்லாம் ஒரு முறை குப்பென்று வியர்த்துக் கொட்டியது. 

“ஜுரம் விட்டுப் போச்சு போல இருக்கு” என்று சிரித்தாள் பாப்பா. 

“தம்பி, அப்ப நேரமாகுது. மழைக்கு முன்னே நாங்க புறப்படறோம். உடம்பைப் பார்த்துக்குங்க. பூவேலிக்கு ஒரு முறை வந்துட்டுப் போங்க…” என்றான் குமாரசாமி. 

அந்த நேரம் ‘சாமண்ணா’ என்று யாரோ கூப்பிடும் குரல் கேட்டு, “யார் பாருங்க, காதர் பாட்சா மாதிரி தெரியுது” என்றான் சர்மண்ணா. 

காதர் பாட்சாவேதான்! 

“தம்பி! இன்னும் கொஞ்ச நாளைக்கு நாடகம் கிடையாதாம்’ என்று சொல்லிக் கொண்டே வந்தார் காதர். 

“ஏனாம்?”

“இந்த மழை அடியோட நின்னப்புறம்தான் மறுபடி நாடக மாம். லெட்டர் போட்டப்புறம் வந்தாப் போதுமாம். நம்மை யெல்லாம் அவங்கவங்க ஊருக்குப் போகச் சொல்லிட்டார் காண்ட்ராக்டர். எல்லாருக்கும் சம்பளம் பட்டுவாடா பண்ணிக்கிட்டிருக்காரு. நீயும் போய் வாங்கிக்க!” என்றார் காதர். 

“என்ன சொல்றே காதர் நீ? சம்பளத்தை வாங்கிக்கிட்டு. நான் எங்கே போவேன்? எனக்கு ஊரார், உறவினர் யாரும் கிடையாதே!” என்று பாப்பாவைப் பரிதாபமாய்ப் பார்த்தான் சாமண்ணா. 

அத்தியாயம்-3

“தம்பி, அப்படின்னா என்ன செய்யப் போறீங்க? டிராமா தான் இல்லையாமே. எங்களோடு பூவேலிக்கு வந்துடுங்களேன்,” பாப்பாவின் முகத்தைப் பார்த்து, “என்னம்மா, நான் சொல்றது சரிதானே?” 

அவள் சாமண்ணாவின் முகத்தைப் பார்த்தாள். சாமண்ணா சொன்னான். 

“நீங்க ஏதோ டிராமாவுக்கு வந்தீங்க. வந்த இடத்திலே தற்செயலா என்னைப் பார்த்தீங்க. மழைக்குத் தங்கினீங்க. சாப்பாடு போட்டீங்க, காப்பி வாங்கி வந்து கொடுத்தீங்க. இதுக்கெல்லாம் நான் ரொம்பக் கடமைப்பட்டிருக்கேன். இப்ப நான் வரலையேன்னு வருத்தப்படாதீங்க.” 

“உனக்கு உடம்பு சரியில்லாதப்போ தனியா விட்டுட்டுப் போறது மனசுக்கு அவ்வளவு சமாதானமா இல்லே…!அதான் யோசிக்கறோம்.” 

“பரவாயில்லைங்க. என் வாழ்க்கையில இதெல்லாம் சகஜ மாயிட்டுது. பட்டினியும் கிடப்பேன். பாயசமும் சாப்பிடுவேன்! பெரிய பெரிய குடும்பத்துப் பெண்களெல்லாம் நாடகம் பார்க்க வருவாங்க. பார்த்துட்டு என்னைப் புகழ்ந்து பேசுவாங்க. விருந்துக்கு அழைப்பாங்க. சில பெண்கள் வலிய வந்து என்னோடு சிரிச்சுப் பேசி சிநேகமாப் பழகறதும் உண்டு. ஆனால் நாடகக் கம்பெனி அடுத்த ஊருக்குப் போயிட்டா, அத்தோடு எல்லாம் நின்னு போயிடும்.” 

“எங்க சிநேகத்தையும் அந்த மாதிரி நினைச்சுராதீங்க. தொடர்ந்து இருக்கும்” என்றாள் பாப்பா. 

“ரொம்ப சந்தோஷம். இப்ப லாட்ஜுக்குப் போய் ஏதாவது சாப்பிட்டுட்டுப் போகலாம் வாங்க. இந்த நேரத்துக்கு சூடா இட்லி கிடைக்கும் மல்லியப் பூ மாதிரி” சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு புறப்படத் தயாரானான் சாமண்ணா. 

வண்டி அம்பாள் லாட்ஜ் வாசலில் போய் நின்றது. வாசலில் குடுகுடுப்பைக்காரன் உடுக்கை அடித்துக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தான். “வழிவிட்டு நில்லுப்பா” என்று உள்ளே போனவர்கள் ஒரு மூலையில் இருந்த கடப்பைக் கல் டேபிளைத் தேடிச் சென்று உட்கார்ந்தார்கள். அலம்பி விட்ட தால் தரையெல்லாம் ஈரம் காயாமலிருந்தது. 

கல்லா மேஜைக்கு மேலே லட்சுமி, சரஸ்வதி, பாலாஜி படம். மீட்டர் பெட்டிக்கு மேல் சிகப்பு பல்ப் வெளிச்சம். எதிர் சுவரில் ஓட்டல்காரர் போட்டோ என்லார்ஜ்மெண்ட். 

மீசை வைத்த பால்காரரும் மளிகைக் கடைக்காரரும் பொங்கல், வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு சின்னப் பெண் கல்லா மேஜை ஓரம் காப்பிக் கூஜாவுடன் பார்சலுக்குக் காத்திருந்தாள். 

ஸில்க் ஜிப்பாவுக்குள் தங்க செயின் தெரிய ஓட்டல் ஐயர் உள்ளே வந்து கல்லாவில் அமர்ந்தார். 

மூலையில் உட்கார்ந்திருந்த சாமண்ணாவையும் அவன் பக்கத்தில் இருப்பவர்களையும் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே காலணா, அரையணா நாணயங்களைத் தனித் தனியாக மேஜை மீது அடுக்கி வைத்தார். 

பில் பணம் கொடுக்க சாமண்ணா எதிரில் வந்து நின்ற போது, “எட்டரையணா மூணு பேர்” என்று உள்ளிருந்தபடியே கட்டைக் குரலில் கூவினான் சர்வர். 

ஓட்டர் ஐயர், “இவாள்ளாம் யாரு?” என்று சாமண்ணாவிடம் கேட்டார். 

“நாடகம் பார்க்க வந்தாங்க. வெளியூர். மழைக்காக ராத்திரி இங்கே தங்கிட்டு இப்ப ஊருக்குப் போறாங்க.”

“இன்னிலேர்ந்து நாடகம் இல்லையாமே!”

“ஆமாம். சம்பளம் வாங்கத்தான் போய்ட்டிருக்கேன். அப்புறம் வந்து பேசறேன்” என்று அவசரமாகப் புறப்பட்டான் சாமண்ணா. ஐயர் பாப்பாவையே உற்று உற்றுப் பார்த்தார். அவர் பார்வையில் சந்தேகம் இருந்தது. 

‘இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கேனே! எங்கே? எப்போது?’ என்று இருபது வருஷங்களுக்கு முன் தேடினார். 

“ஆமாம். அதே முகம். அதே ஜாடை! தாசி அபரஞ்சி மகளாயிருப்பாளோ?”


நாடகக் கொட்டகை வரை வண்டியிலேயே போய் இறங்கிக்கொண்ட சாமண்ணா அவர்கள் இருவரையும் ஊருக்கு அனுப்பிவிட்டு, காண்ட்ராக்டர் வருகைக்காகக் காத்திருந்து சம்பளத்தை எண்ணி வாங்கிக் கொண்டபோது மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டது. நோட்டும் சில்லறையுமாகக் கிடைத்த இருபத்தேழு ரூபாயில் புருஷோத்தமன் ஷாப்பில் ஒரு சோப்பும் மூலைக் கதர்க் கடையில் ஒரு ரெடிமேட் சட்டையும் வாங்கிக் கொண்டான். வாடகை சைக்கிள் பிடித்து லாட்ஜுக்கே திரும்பிப் போய் இன்னொரு காப்பி சாப்பிட்டான். 

ஓட்டல் முதலாளி சுதேசமித்திரனில் ‘மிராசுதார் துயர’த்தில் மூழ்கியிருந்தார். சாமண்ணாவைக் கண்டதும் “வா சாமண்ணா! ராத்திரி அவங்க உன்னோடதான் தங்கியிருந்தாங்களா?” என்று விசாரித்தார். 

“ஆமாம்.” 

“உனக்கு அவங்களை ரொம்ப நாளாத் தெரியுமோ?”

“ஊஹூம்.நேத்துதான்; டிராமாவுக்கு வந்தப்பதான்…”

“அந்தப் பெண்ணை நான் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. ஆனா எங்கேன்னு தெரியல்ல. அப்புறம்தான் ஞாபகம் வந்தது. தாசி அபரஞ்சி முகம் அப்படியே உரிச்சு வச்சிருக்கு. அவள் மகளாய்த்தான் இருக்கணும்! அந்தக் காலத்திலே அபரஞ்சி அழகிலே மயங்காதவங்க கிடையாது….” என்றார். 

சாமண்ணாவுக்கு இது அதிர்ச்சியைத் தந்தது. ‘அபாண்டமாயிருக்குமோ?’ ஆனாலும் உணர்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாமல், “அப்படியெல்லாம் இருக்காது….” என்றான்.

“நீ அவளைக் கல்யாணம் செய்துக்கப் போறதாக் கேள்விப் பட்டேனே!” என்று கேலியாகச் சிரித்தார். 

“யார் சொன்னாங்க?” 

சிரித்தார். “எனக்கு அப்பப்ப எல்லா நியூஸும் வந்துடும் சாமண்ணா! காலையில காதர் பாட்சா வீட்டுக்கு வந்திருந்தான். 

“நினைச்சேன். அவனுக்கு மண்டை வெடிச்சுடுமே. அவன் வெச்ச வத்திதானா இது? நான் அவளைத்தான் கல்யாணப் செய்துக்கப் போறேன்.” 

“ஏண்டா இதுக்குத்தான் உனக்கு இலவசமா வீடு கொடுத்து வைச்சிருக்கனா? பாவம், ஏழைப் பையனாச்சே, பிராமணப் பிள்ளையாயிருக்கியே, எதிர்காலத்துலே எனக்கும் ஒத்தாசையாயிருப்பியே என்று என் மகளை உனக்குக் கொடுத்து உன்னை வீட்டோடு மாப்பிள்ளையா வச்சுக்கலாம்னு நினைச்சேன். நீ என்னடான்னா அந்தத் தேவடியாச் சிறுக்கியை…” 

“என்ன சொன்னீங்க? நாக்கை அடக்கிப் பேசுங்க.”

“தேவடியாச் சிறுக்கின்னு சொன்னேன். கூத்தாடிப் பயலுக்கு வேற எந்தப் பெண் கிடைப்பாள்…?” கேலியாக எக்காளமிட்டார். 

சாமண்ணாவுக்கு ரோசம் பொத்துக் கொண்டது. ஆவேசத்தில் உடல் படபடத்தது. “என்னடா சொன்னே, ஓட்டல்காரப் பயலே! உடம்பு எப்படி இருக்கு? பணத்திமிரா?” என்று எம்பி அவர் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்தான். 

செயலற்றும் பிரமித்து நின்ற ஓட்டலகாரர் கன்னத்தைத் தடவிக் கொண்டு, “டேய், அவனைப் பிடிங்கடா, உதைங்கடா!” என்று கூப்பாடு போட்டு சிப்பந்திகளை அழைத்தார். யாரும் கிட்டே வரவில்லை. “ஐயருக்கு நல்லா வேணும்!” 

சாமண்ணா அங்கே நிற்காமல் அடுத்த கணம் சைக்கிளிள் ஏறி மாயமாய் மறைந்துவிட்டான். 

அன்று பகல் எங்கெங்கோ அலைந்துவிட்டு அறையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த சாமண்ணா கீழே நாய் குரைக்கும் சத்தம் கேட்கவே யாரோ வருகிறார்கள் என்பதை ஊகித்தான். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும் எழுந்து போய்க் கதவைத் திறந்தான். அங்கே இரண்டு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள். 

“கொஞ்ச நாளைக்கு முன்னே யாரோ ஒருத்தன் தற்கொலை பண்ணிக்கிட்ட வீடுதானே இது?” 

“ஆமாம், அதுக்கென்ன இப்போ?” 

“இல்லே, அப்ப ஒருமுறை இங்கே வந்திருந்தோம். இப்ப நாங்க வந்தது அது சம்பந்தமா இல்லை. இது வேற கேஸ். உங்களைத்தான் தேடி வந்திருக்கோம்”. 

“என்னையா? என்ன சங்கதி?” 

“இந்த வீட்டைச் சோதனை போடச் சொல்லி உத்தரவு.”

“எதுக்கு?” 

“உங்க பேர்ல அம்பாள் லாட்ஜ் முதலாளி கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கார். அவர் மகளுடைய தங்கச் சங்கலியைக் காணலையாம். நீங்கதான் எடுத்துட்டு வந்திருக்கணும்னு சந்தேகப்படறார். தெஃப்ட் கேஸ்….” 

“அடப்பாவி! இது அக்கிரமம்! அந்த அயோக்கியன் என் மீது வீணாப் பழி போடறான். நான் யார்னு தெரியாதா உங்களுக்கு? நீங்க அந்த ஓட்டல்காரன் பேச்சை நம்பறீங்களா? அவன் பெண்ணை, அந்தப் பைத்தியத்தை நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்னு தெரிஞ்சதும் இப்படி என் மேலே திருட்டுக் கேஸ் ஜோடிச்சிருக்கான்.” 

“உங்களை எங்களுக்கு நல்லாத் தெரியுங்க. அதான் டிராமாவிலே தினம் பாக்கறமே! ஆனாலும் எங்க டூட்டி. மேலிடத்து உத்தரவு.” 

“நல்லாப் பாருங்க. உள்ளே வாங்க.”

முதலில் அலமாரியிலுள்ள புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து உதறினார்கள். மடிக்கப்பட்ட இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் கீழே விழுந்தன. 

“இது ஏது ரூபாய்? இங்கே எப்படி வந்தது?”

“ஐயோ, எனக்குத் தெரியாது. சத்தியமாத் தெரியாது. எனக்கும் இந்தப் பணத்துக்கும் சம்பந்தமே இல்லை. என் சம்பளப் பணத்தை இதோ பாக்கெட்டில் வச்சிருக்கேன்” என்று பணத்தை எடுத்துக் காட்டினான். 

“அப்ப இந்த இருநூறு ரூபாய் உங்களது இல்லையா?”

“நிச்சயமா இல்லே.” 

“ம்… அந்தத் தகரப் பெட்டியைத் திறந்து பாருப்பா…”

“தாராளமாப் பாருங்க.” 

டிராமா போஸ்டர், சில கடிதங்கள், வேட்டி கட்டைகளைத் தவிர அதில் வேறெதுவும் தென்படவில்லை. 

ஒரு கான்ஸ்டபிள் பாத்ரூமுக்குள் போய்த் தேடினான். அங்கிருந்த சோப்புப் பெட்டியைத் திறந்து பார்த்த அவன், “இதோ, இதில் இருக்குங்க செயின்!” என்று சத்தமாகச் சொன்னான். 

“எனக்கு ஒண்ணுமே தெரியாது. இதெல்லாம் ஓட்டல்காரர் சூழ்ச்சி. நான் இல்லாதபோது கொண்டு வச்சிருக்கார்” என்று அலறினான் சாமண்ணா.

“நீங்களே நேரே வந்து இன்ஸ்பெக்டர்கிட்டே சொல்லிடுங்க. ஸ்டேஷனுக்கு வரீங்களா?” 

“இந்த ஊரில் மானம் மரியாதையோடு இருந்துகிட்டிருக்கேன். நான் ஒரு கலைஞன். உங்களோடு தெருவிலே வந்தால் நாலு பேர் என்ன நினைப்பாங்க. நீங்க இப்படி என்னை அவமானப்படுத்தலாமா?” 

“நாங்க என்னங்க செய்ய முடியும்? நீங்க இன்ஸ்பெக்டர் ஐயாகிட்ட வந்து பேசிக்குங்க. உங்களுக்கு அவமானமா இருந்தா தனியாவே போய் இன்ஸ்பெக்டரைப் பாருங்க. அதிலே எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. நாங்க போய் ஓட்டல்லே காபி சாப்பிட்டுட்டு பின்னோடயே வந்துடறோம். நீங்க போய்க்கிட்டு இருங்க” என்றனர். 

சாமண்ணா சைக்கிளில் புறப்பட்டான். 

– தொடரும்…

– ஆப்பிள் பசி (நாவல்), முதற் பதிப்பு: 1988, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *