இருளும் ஒளியும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2024
பார்வையிட்டோர்: 600 
 
 

அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30

21. குமுறும் ஹிருதயம்

தபால் இலாகாவினருக்குச் சிரமம் வைக்காமல் செய்திகள் மின்னல் வேகத்தில் சாவித்திரியின் ஊருக்கு எட்டின. சாவித்திரிக்குப் பழைய சலுகைகள் அவ்வளவாக இப்பொழுது பிறந்த வீட்டில் இல்லை. கல்யாணத்துக்கு முன்பு தன்னோடு ஒட்டிக் கொண்டு, தான் கோபம் அடைந்தாலும் பாராட்டாத சீதா இப்பொழுது வேற்று மனுஷியாகக் காட்சி அளித்தாள். அவளுக்கு மட்டற்ற வேலைகள் கிடந்தன. ஹிந்தி வகுப்புக்குப் போக வேண்டும். பிறகு சங்கீதம் பயிலவேண்டும்; கலாசாலைக்குப் போக வேண்டும்; வீட்டில் அம்மாவுக்கு உதவியாக ஏதாவது செய்து முடித்தாக வேண்டும். சகோதரியிடம் மனம்விட்டுப் பேச என்ன இருக்கிறது? சாவித்திரியைவிட நான்கைந்து வயது சிறியவளான சீதா ஏன் அப்படி ஒதுங்கிச் செல்கிறாள்? சந்துரு, சாவித்திரியுடன் அதிகம் பேசுவதேயில்லை. ஆதியிலிருந்தே இருவருக்கும் ஒத்துக்கொள்கிறதில்லை. இருவரும் எதையாவது குறித்துத் தர்க்கம் செய்ய ஆரம்பித்தார்களானால் மணிக்கணக்கில் ஓயமாட்டார்கள்.

இதனிடையில் பாட்டி, தினம் தினம் ஏதாவது ஒரு புதுச் செய்தியைக் கொணர்ந்து தெரிவிப்பாள்.

“ஏண்டி! என்னவோ விழா நடத்தினானாமே உன் ஆம்படையான்? அமர்க்களப் பட்டதாம். அவள் இருக்கிறாளே ஒருத்தி, ஸரஸ்வதியோ, லக்ஷ்மியோ? பாட்டுக் கச்சேரி செய்தாளாம்! திறந்த வாய் மூடாமல் உன் கணவன் அவள் எதிரில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தானாம். போதாக்குறைக்கு ஊரிலே யிருந்து ஒரு பெண் வந்திருந்ததாம். நேற்று அங்கிருந்து வந்த கோபு வீட்டு ராமு என்னிடம் சொன்னான். உன் அம்மா காதில் விழுந்தால் சண்டைக்கு வருவாள். என்னாலேயே நீ கெட்டுப் போய் விட்டாயாம். அவள் தான் அதை வாய்க்கு வாய் சொல்லுகிறாளே” என்று பாட்டி யாரும் அருகில் இராத சமயம் பார்த்துச் சாவித்திரியிடம் தெரிவித்தாள்.

அன்று காலைப் பத்திரிகையில் வெளியாகி இருந்த செய்தியும் அதுவேதான். விழாவில் ஸரஸ்வதி கச்சேரி செய்யும் புகைப் படம், பிரமாதமாக வெளியாகி இருந்தது. ஒலிபெருக்கியின் முன்பு புதுப் பெண் ஒருத்தி நின்று தன் பவளவாய் திறந்து பாடிக்கொண்டிருந்தாள். ரகுபதி தலைவரைக் கைகூப்பி வணங்கி அழைத்துவரும் காட்சி மற்றொரு பக்கத்தில் வெளியாகி இருந்தது. சாவித்திரி, படங்களையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தபோது தான் பாட்டி வந்து மேற்கூறிய விதம் தெரிவித்தாள். பத்திரிகையில், நடந்தது நடந்தபடி வெளியாகி இருந்தது. அத்துடன் கூட்டியோ குறைத்தோ செய்திகளை வெளியிடும் சாமர்த்தியம் அதைக் கவனித்த நிருபருக்கு இல்லை! ஆனால், பாட்டிக்கு அந்தச் சாமர்த்தியம் அபாரமாக அமைந்திருந்தது. திறந்த வாய் மூடாமல் பாட்டை ரகுபதி ரஸித்தான் என்று கூறினாள். மனம் சரியில்லாமல் ரகுபதி விழா மண்டபத்துக்குள்ளே பெரும்பாலும் நிற்கவில்லை. இடையிடையே ஸரஸ்வதி அபூர்வ சங்கதிகளைப் பாடும் போதோ, ஆலாபனம் செய்யும்போதோதான் அவன் சற்று நின்று அவைகளை ரஸித்தான். பாதிக் கச்சேரியில், மனக் கோளாறினால் ஏற்பட்ட அயர்வைத் தாங்காமல் காரியதரிசி யிடம் பொறுப்பை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டான். ஒன்றுக்குப் பத்தாகப் பேசுவது சிலருடைய இயல்பு. கண்ணால் கண்டதை வெளியிடவே சிலர் தயங்குவார்கள்.

பொங்கிவரும் அழுகையைச் சமாளிக்க முடியாமல் சிறிது நேரம் திகைத்துப்போய்க் கண்களில் பெருகும் நீருடன் உட்கார்ந்திருந்தாள் சாவித்திரி. ஒரு க்ஷணம் அவளுக்கு கணவனிடம் கோபித்துக்கொண்டு வந்ததே தவறோ என்று கூடத் தோன்றியது. ‘தவறு என்ன? நான் அங்கே இருக்க வேண்டும் என்று யார் அழுதார்கள்?’ என்று சற்று உரக்க வாய்விட்டுப் பேசிக்கொண்டாள்.

“என்ன சொல்லிக் கொள்கிறாயடி அம்மா?” என்று கேட்டுக் கொண்டே பேத்தியின் அருகில் வந்து நின்று அவள் முகத்தை உற்றுக் கவனித்தாள் பாட்டி. பிறகு, “நன்றாக இருக்கிறதே நீ இப்படி மாலை மாலையாகக் கண்ணீர் வடிக்கிறது? இப்படி அழுதால் உடம்புக்கு ஆகுமாடி சாவித்திரி? அசடுதான் போ” என்று கூறினாள்.

இவர்கள் இருவரின் பேச்சையும் சற்றுத் தொலைவில் மேஜை அருகில் உட்கார்ந்து காலேஜ் பாடங்களை எழுதிக்கொண்டிருந்த சீதா கவனித்தாள். பாட்டியின் அநுதாபத்தைக் கண்டதும் அவளுக்குக் கோபம் பற்றி எரிந்தது. ’இல்லாததையும், பொல்லாததையும் வந்து சொல்லிவிட்டு இப்பொழுது என்ன இழையல் வேண்டி யிருக்கிறது’ என்றுதான் சீதா கோபம் அடைந்தாள். ஆகவே, அவள் சாவித்திரியைச் சிரிக்க வைப்பதற்காகப் பாட்டியைப் பார்த்து. “ஏன் பாட்டி! பாட்டைக் காதால்தான் கேட்பார்கள். அத்திம்பேர் திறந்த வாய் மூடாமல் எப்படிப் பாட்டைக் கேட்க முடியும்?” என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டாள்.

“அடி அம்மா! நீ இங்கே இருக்கிறதை நான் பார்க்கவே இல்லையே. ஒன்றும் பாதியுமாகப் போய் உன் அம்மாவிடமும், அண்ணாவிடமும் கலகம் பண்ணி வைக்காதே. நான்பாட்டுக்கு எங்கேயோ விழுந்து கிடக்கிறேன். நீ சண்டையைக் கிளப்பி விடாதேடி அம்மா. உனக்குப் புண்யம் உண்டு!” என்று பாட்டி சீதாவைப் பார்த்து.

“ஆமாம். . . . . . ஆமாம். . . . . .பாட்டி, இதையெல்லலாம் நேரில் போய்ப் பார்த்துவிட்டு வந்திருக்கிறாள்! அதான் இவ்வளவு வக்கணையாகச் சொல்கிறாள். அதைக் கேட்டுவிட்டு நீயும் அழுகிறாய்!” என்று சாவித்திரியைக் கேலியாகப் பார்த்துக் கொண்டு கூறினாள் சீதா.

“ஆமாமடி பாட்டி ரெயிலேறிப்போய் இதெல்லாம் பார்த்துவிட்டு வருகிறாள்! வேறு வேலையே இல்லை பார் அவளுக்கு? உன் அத்திம்பேர் விஷயந்தான் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதே…”

சீதாவுக்கு அங்கே பேசிக் கொண்டு நிற்கப் பொழுதில்லை. காலேஜுக்கு நேரமாகி விட்டதால் அவள் புறப்பட்டுவிட்டாள்.

சீதா காலேஜுக்குப் போன பிறகு, ஊர் வம்புகளை ஒப்பிக்கும் வழக்கமான வேலையைப் பாட்டி நிர்ப்பயமாக நடத்தினாள். அவள், சாவித்திரியின் அருகில் வந்து, நேற்று கோவிலுக்குப் போயிருந்தேன். ராமுவைப் பார்த்தேன். அவன் உன்னைப் பற்றி விசாரித்தான். ”ஆமாண்டா அப்பா! சாவித்திரி இங்கே தான் இருக்கிறாள். அவளைக் கொண்டுவந்து விடும்படி சம்பந்தி வீட்டார் ஒரு வரிகூட எழுதவில்லையே. நீ அந்தப் பக்கம் போயிருந்தாயோ?” என்று கேட்டேன். ‘போயிருந்தேன் பாட்டி! அவர்கள் வீட்டிற்குப் போக வேண்டும் என்று நான் கிளம்பவில்லை. தற்செயலாக வழியிலேயே மாப்பிள்ளைப் பையனைச் சந்தித்தேன். ‘ஏண்டா அப்பா! நீ செய்கிறது நன்றாக இருக்கிறதா?’ என்று கேட்போம் என்று பார்த்தால் அங்கே ஏகப்பட்ட அமர்க்களம். அவன் தான் திறந்த வாய் மூடாமல் பாட்டைக் கேட்டுக்கொண்டு இருக்கிறானே. அவனை என்னத்தைக் கேட்கிறது?’ என்று ராமு சொன்னான். அவன் பொய்யா சொல்லப் போகிறான்?”

“சரி, சரி, போதும். இனிமேல் நீ யாரிடமும் எதையும் விசாரிக்க வேண்டாம். நடக்கிறபடி நடக்கட்டும் போ” என்று அலுப்புடன் கூறிவிட்டுச் சாவித்திரி அங்கிருந்து எழுந்து விட்டாள். எழுந்தவள் நேராகத் தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு காகிதத்தையும், பேனாவையும் எடுத்தாள். மளமளவென்று கணவனுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தாள். கோபத்தாலும், ஆங்காரத்தாலும் அவள் கைகள் நடுங்கின. பேனாவிலிருந்து அங்கங்கே இரண்டு சொட்டுகள் மசியும் காகிதத்தில் விழுந்தன. கடிதம் எழுதி முடித்ததும் அதை வாசிக்க ஆரம்பித்தாள்.

அன்புள்ள கணவருக்கு என்றோ, ஆருயிர்க் காதலருக்கு என்றோ கடிதம் ஆரம்பிக்கப் படவில்லை.

“நமஸ்காரம். பத்திரிகைகளில் வெளியாகி இருந்த புகைப் பட்டங்கள் மிகவும் அபாரம்! கட்டிய மனைவி ஒருத்தி இருக்கிறாள் என்பதை மறந்துவிட்டு உங்களுடைய கலை வேஷம் நன்றாக இருக்கிறது! அந்த இன்னொரு பெண் யார் என்பதை எனக்குத் தெரிவிப்பீர்களா?”

கடிதம் பைத்தியக்காரத்தனமாக எழுதப்பட்டது. ஆத்திரத்தில், அவசரத்தில் என்ன எழுதுகிறோம் என்பதைக் கவனியாமல் எழுதப்பட்டது. சாவித்திரிக்குப் பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது. ‘நாம் ஏன் அவருக்குக் கடிதம் எழுதவேண்டும்? கடிதம் எழுதி அவர் சொந்த விஷயங்களில் தலையிட நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இருவரையும் பலமாகப் பிணைக்கும் கணவன்-மனைவி என்கிற பந்தத்தைத் தவிர வேறு என்ன உரிமையுடன் அவரைக் கேட்க முடியும்?’ என்று ஒன்றும் புரியாமல் கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்துக் கீழே போட்டாள் சாவித்திரி. குமுறும் ஹிருதயத்தைக் கையில் அழுத்தியவாறு தேம்பித் தேம்பி அழுதாள் அவள். இந்த நிலையில் பிரமை பிடித்தது போல் அவள் வெகுநேரம் உட்கார்ந்து இருந்திருக்க வேண்டும்.

அறைக் கதவை யாரோ லேசாகத் தட்டினார்கள். சாவித்திரி எழுந்து கதவைத் திறந்ததும் மங்களம் வாயிற்படியில் நின்றிருந்தாள். “சாப்பிடாமல் மணி பன்னிரண்டு அடிக்கப் போகிறதே!” என்று அன்புடன் அவளை அழைத்தாள் மங்களம். அழுது ரத்த மெனச் சிவந்திருக்கும் மகளின் கண்களைப் பார்த்ததும் அந்தத் தாயுள்ளம் பாகாய்க் கரைந்தது. கையைப்பற்றி ஆசையுடன் அழைத்துப்போய் சமையலறையில் உட்கார்த்தி அன்புடன் உணவைப் பரிமாறினாள் மங்களம்.

22. தங்கத்துடன் ரகுபதி

அடுத்த நாள் அலமுவும், தங்கமும் ஊருக்குப் புறப்படுவதாக இருந்தார்கள். வீட்டைச் சுற்றிச் சுற்றி வளைய வரும் தங்கம் ஊருக்குப் போய்விட்டால் வீடு வெறிச்சோடிவிடும். தெருவில் முத்து முத்தாக யார் கோலம் போடுவார்கள்? பூஜைக்கு விடியற் காலை யார் மலர் கொய்து வைப்பார்கள்? ஸரஸ்வதி அவ்வேலைகளைச் செய்தாலும், தங்கம் செய்வதில் தனியான தொரு அழகைக் கண்டு ரசித்தான் ரகுபதி. “அத்தான்! உங்களுக்கு மிளகு வடை என்றால் ஆசையாமே” என்று கரகரவென்று அந்தப் பலகாரத்தைச் செய்து தட்டில் வைத்துக் கொண்டுவந்து வைத்தாள் தங்கம், ஒரு நாள். எல்லோருடைய மனதையும் தான் கவர வேண்டும்; எல்லோருக்கும் தான் இனியவளாக நடந்துகொள்ள வேண்டும் என்கிற ஆசையுடன் அனைவரும் மெச்சும்படியாக நடந்து கொண்டாள் அவள்.

“பாவம்! நல்ல இடமாகப் பார்த்துக் கொடுத்தால் – பெண் சௌக்கியமாக வாழ்வாள். அவசரப்பட்டு எங்காவது பாழுங் கிணற்றில் தள்ளுகிற மாதிரி தள்ளி விடாதீர்கள்”. அலமு என்று ஸ்வர்ணம் தன் நாத்தனாரிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாள்.

அன்று நடு மத்தியான்னத்தில் மாடியில் நாற்காலியில் சாய்ந்து யோசனையில் ஆழ்ந்திருந்தான் ரகுபதி. இன்று இல்லாவிடில் நாளை வருவாள் அல்லது கடிதமாவது எழுதுவாள் என்று தினம் தினம் எதிர்பார்த்து ஏமாந்து போகவே, ரகுபதியின் மனத்தில் ஒருவித அசட்டு எண்ணம் – சபல புத்தி தலை எடுக்க ஆரம்பித்தது. சர்க்கரையைவிட்டு இனிப்பை எப்படிப் பிரிக்க முடியாதோ, அம்மாதிரி தாம்பத்திய அன்பினால் இருவரின் உள்ளங்களும் பிரிக்க முடியாதபடி ஒன்றிய நேசம், சாவித்திரிக்கும், ரகுபதிக்கும் ஏற்படவில்லை. மிக மிகக் குறுகிய காலத்துக்குள் அவனுடைய வாழ்க்கை சுசந்து வழிந்தது. ‘இளம் மனைவியுடன் ஆனந்தமாக வாழ்க்கை நடத்தப்போகிறோம்’ என்று: அவன் கட்டிய கோட்டை தகர்ந்து விழுந்தது. அதனால், மனம் ஓடிந்து போயிருந்த அவன் மனக்கண் முன்பு தங்கம் தோன்றி மறைந்துகொண்டிருந்தாள். அவளிடம் அவனுக்கு அலாதியான ஒருவித பாசம் ஏற்படுவதை உணர்ந்தான். ‘நாளைக்கு அவள் இங்கிருந்து போய்விடுவாள். நானும் அவளுடன் கிராமத்துக்குப் போய்விடுகிறேன். பிறகு?’ என்று யோசித்தான் ரகுபதி, ’பிறகு என்ன? அந்தக் கர்வம் பிடித்தவளுக்குப் படிப்பினையாக ஆடம்பரமில்லாமல், ஒருவருக்கும் சொல்லாமல் தங்கத்தைக் கல்யாணம் செய்து கொண்டுவிடுகிறேன். என்னை யார் என்ன செய்யமுடியும்?’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான்.

கீழே ஸரஸ்வதி பைரவி ராகத்தில் அருணாசலக் கவியின் ‘யாரோ இவர் யாரோ’ என்கிற கீர்த்தனத்தில் சரணத்தைப் பாடிக்கொண்டிருப்பது கேட்டது. ‘அந்த நாளில் சொந்தம் போல உருகினார்’ – சாதாரணமாக இந்த இடத்தை – ஸரஸ்வதி நான்கைந்து தடவைகள் பாடினாள். ரகுபதிக்கு மிகவும் பிடித்தமான பாட்டுதான். ஆனால் இன்றோ அவனுக்கு ஸரஸ்வதியின் பேரில் கோபம் வந்தது. சாவித்திரிக்கும், அவனுக்கும் இந்த ஜன்மத்தில் மட்டும் இல்லை; அந்த நாளில், கடந்த பிறவிகளிலிருந்தே தொடர்பு இருக்கிறது என்பதை ஸரஸ்வதி பாட்டின் மூலம் எச்சரிக்கிறாளோ என்று தோன்றியது!

‘சட்! இவள் யார் என் சொந்த விஷயத்தில் தலையிட’ என்று முணு முணுத்தான் ரகுபதி. இதற்குள் மாடிப்படிகளில் ’தடதட’ வென்று தங்கம் இரைக்க இரைக்க ஏறி ஓடி வந்தாள். நிதானமாக ஸரஸ்வதி அவள் பின்னால் வந்து நின்றாள். தங்கம் ஸரஸ்வதியைத் திரும்பிப் பார்த்து. “அக்கா! நான் கேட்கட்டுமா?” என்று கேட்டாள்:

“கேளேன். யார் கேட்டால் என்ன?” என்றாள் ஸரஸ்வதி சிரித்துக்கொண்டே.

“போ அக்கா! எனக்கு வெட்கமாக இருக்கிறது. நீயே கேட்டுவிடு” என்றாள் தங்கம் லஜ்ஜையுடன்.

”என்ன கேட்பதற்கு இவ்வளவு பீடிகை?” என்று ரகுபதி அவர்களை வினவிவிட்டு, இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.

“ஒன்றுமில்லை அத்தான். தங்கம் பாட்டுக் கச்சேரியே அதிகம் கேட்டதில்லையாம். டவுனில் இன்று ஏதோ கச்சேரி இருக்கிறதாக நேற்றுச் சொன்னாயே; அதற்கு அவளும் வருகிறாளாம். இவ்வளவு தான் விஷயம்” என்றாள் ஸரஸ்வதி.

”அப்பா! இவ்வளவுதானா? என்னவோ சுயம்வரத்துக்கு ஏற்பாடு பண்ணுகிறமாதிரி அல்லவா வெட்கமும், நாணமும் நடுவில் வந்து விடுகிறது? என்னவோ என்று பார்த்தேன். வரட்டுமே. நீயுந்தான் வாயேன்” என்று அழைத்தான் ரகுபதி இருவரையும்.

தங்கம் சந்தோஷ மிகுதியினால் மறுபடியும் மாடிப்படிகளில் ’தடதட’ வென்று வேகமாக இறங்கினாள். இடுப்பின் கீழே புரளும் பின்னல், இப்படியும் அப்படியும் ஆடி அசைவதையே கவனித்துக் கொண்டிருந்தான் ர்குபதி.

“என்ன அத்தான் பார்க்கிறாய்? தங்கம் இப்படி ஓடுகிறாளே என்றுதானே பார்க்கிறாய்? அந்தப் பெண் எதையும், எந்த வேலையையும் இப்படித்தான் ஓடி ஓடிச் செய்கிறாள். பாவம்” என்று ஸரஸ்வதி கூறிவிட்டு அங்கிருந்து கீழே சென்றாள்.

சாயந்தரம் நாலு மணிக்கு மூவரும் கச்சேரி கேட்பதற்கு நகரத்துக்குப் புறப்பட்டார்கள். ஸரஸ்வதி ஆரஞ்சு வர்ணப் புடைவையும். கறுப்பு ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். தங்கம் மருதாணிச் சிவப்பில் ஸரஸ்வதியின் பட்டுப் புடைவையை உடுத்தி இருந்தாள். சங்கு போன்ற கழுத்தில் கரியமணிச்சரம் இரட்டை வடம் பூண்டு, நெற்றியில் பிறை வடிவத்தில் திலகமிட்டிருந்தாள் தங்கம், கைகளில் ‘கலகல’ வென்று ஒலிக்கும் சிவப்புக் கண்ணாடி வளையல்கள். தேர்ந்த ஓவியனின் சித்திரத்திலிருந்து உயிர் பெற்று வந்த பாவையாகத் தோன்றினாள் அவள். ‘அதிக அழகு அதிருஷ்டத்தைக் குறைத்துவிடும்’ என்று யாரோ சொல்லியிருப்பதை நினைத்துப் பார்த்தான் ரகுபதி. ‘அதான் இந்தப் பெண் இப்படி ஏழ்மையில் வாடிப்போகிறாளோ’ என்றும் எண்ண மிட்டான்!

“ஜாக்கிரதையாகப் போய் வாருங்கள்” என்று ஸ்வர்ணம் கூறியதும் ஸரஸ்வதி, “என்ன அத்தான்! நீ ‘ரெடி’ தானே?” என்று கேட்டாள்.

இதுவரையில் தங்கத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ரகுபதி திடுக்கிட்டுத் திரும்பி, “ஓ!” என்று கூறிவிட்டுப் புறப்பட்டான்.

“போகிறபோது நடந்து போய் விடலாம். வரும்போது இருட்டிவிடும். பஸ் பிடித்துதான் ஆகவேண்டும். என்ன சொல்கிறாய் தங்கம்?” என்று கேட்டான் ரகுபதி.

“ஐய்ய! உன் யோசனை பலமாக இருக்கிறதே! வியர்க்க விறுவிறுக்க வேர்வை சொட்டி வழிய வெயிலில் நடந்து போய்த் தான் சங்கீதத்தை அனுபவிப்பார்களோ? வருகிறபோது நடந்து வரலாம் அத்தான். ‘ஜிலு ஜிலு’ வென்று குளுமையாக இருக்கும், சிரமமும் தெரியாது” என்று அவன் கூறியதை ஆட்சேபித்தாள் ஸரஸ்வதி.

“உன் யோசனை அதைவிட அருமையாக இருக்கிறது. இரவு வேளையில் தனியாகச் சிறிசுகளை அழைத்துக்கொண்டு நடந்து வருகிறதாவது? அதுவும் உன் கால் இருக்கிற வலுவுக்கு நீ நடந்து வரவேண்டும் என்று ஆசைப்படுகிறாயே, ஸரஸு?” என்று ஸ்வர்ணம் கோபித்துக்கொண்டாள். ஆகவே, மூவரும் பஸ்ஸில் போய் வருவது என்று தீர்மானித்துப் புறப்பட்டார்கள்.

அன்று கச்சேரிக்குச் சென்றிருந்த மூவரின் உள்ளங்களும் வெவ்வேறு கற்பனையில் மூழ்கி இருந்தன. ரகுபதியின் மனம் ஓர் இடத்திலும் நிலைக்காது அலை பாய்ந்து கொண்டிருந்தது.’அங்கு வந்திருக்கும் தம்பதிகளைப் பார்த்துப் பெருமூச்செறிந்தான். அவன் மட்டும் எத்தனை காலம் தனிமையை அனுபவிப்பது? இந்தக் கேள்வி அவன் மண்டையைக் குடைந்து எடுத்து அவன் தலையை வலிக்கச் செய்தது. சங்கீதம், நாத ரூபமாக இறைவனை வழிபடும் சாதனம் என்பதை அவன் அந்த நிமிஷம் மறந்து விட்டான். பாடகி பாடும் ஒவ்வொரு பாட்டும் அவனுக்குப் போதையை உண்டு பண்ணியது. ‘ஆறுமோ ஆவல், ஆறுமுகனை நேரில் காணாது’ என்று பாடகி பாடும்போது அவன் மது அருந்தியவனின் நிலையை அடைந்துவிட்டான். மேடையில் அமர்ந்து பாடும் பாடகி தங்கமாக மாறினாள். கச்சேரிக் கூடம் அவன் வீடாக மாறியது. அந்த வீட்டில் தங்கம் ஒருத்தி உட் கார்ந்து பாடுவதாகவும், அதை அவன் மட்டும் ரஸிப்பதாகவும் கற்பனை செய்து கொண்டான் ரகுபதி!

தங்கம் சிறிது நேரம் பாட்டை ரஸித்தாள். பிறகு அங்கே கூடியிருக்கும் பெண்மணிகளின் நடை, உடை, பாவனைகளைப் பெரிதும் கவனிக்க ஆரம்பித்தாள். வயலிலே கிராமத்தில் வேலை செய்யும் பெண்கள் போட்டுக்கொள்ளும் சொருக்குக் கொண்டையைக்கூட அல்லவா இந்த நகரத்தில் நாகரிகமாகப் போற்றுகிறார்கள் என்று நினைத்தாள். ஒய்யாரமாக ஒருத்தி வந்தாள். அடர்ந்த கூந்தலை அள்ளி வளைத்து உச்சந்தலையில் கொண்டை போட்டுக் கொத்துக் கொத்தாக ரோஜா மலர்களைச் செருகி இருந்தாள். கழுத்திலே நாலைந்து முத்துச் சரங்கள். காதில் மாங்காய் வடிவத்தில் செய்த தோடுகள். தோளில் சரிந்து விழும் உயர்ந்த மைசூர் ‘ஜார்ஜெட்’ புடைவை. தங்கம் வாயைப் பிளந்து கொண்டு அவளையே பார்த்தாள். மற்றொரு பெண் வந்தாள், அடக்கமாகத் தலையைக் குனிந்து கொண்டு. காஞ்சீபுரம் பட்டுப் புடைவை உடுத்தி, ஜடைக் குஞ்சலம் ஊசலாட, வைரங்கள் மின்ன, அமரிக்கையாய்த் தலைப்பைப் போர்த்திக்கொண்டு வந்து உட்கார்ந்தாள். பல ரகங்களில் உடை அணிந்து வரும் பெண்களைப் பார்ப்பதில் தான் தங்கம் பெரிதும் தன் பொழுதைக் கழித்தாள் எனலாம். ஸரஸ்வதி ஆடாமல், அலுங்காமல் பாடகியின் இசை இன்பத்தில் மூழ்கி இருந்தாள். வேறு எதிலும் அவள் மனம் செல்லவில்லை. இத்தகைய தெய்வீகக் கலைக்குத் தன் வாழ்நாளை அர்ப்பணம் செய்வதைவிட வேறு பயன் தரக்கூடியது ஒன்றுமில்லை என்று நினைத்து ஆனந்தப்பட்டாள் அவள்.

அவள் சிந்தனையைக் கலைத்து மெதுவான குரலில் ரகுபதி, “ஸரஸு! எனக்கு உடம்பை என்னவோ செய்கிறது. வீட்டுக்குப் போகலாம் வருகிறாயா?” என்று கூப்பிட்டான். மூவரும் எழுந்து வெளியே வந்தார்கள்.

“உடம்பு சரியில்லை என்றால் ‘டாக்ஸி’ வைத்துக்கொண்டு போகலாமே, அத்தான்” என்றாள் ஸரஸ்வதி. பயத்தால் அவள் முகத்தில் முத்துப்போல் வியர்வைத் துளிகள் அரும்பி இருந்தன.

“அப்படி பயப்படும்படி ஒன்றுமில்லை ஸரஸு. லேசாகத் தலையை வலிக்கிறது.. உன்னை பஸ்ஸில் ஏற்றிவிட்டு நானும் தங்கமும் காற்றாட நடந்து வருகிறோம். அம்மாவைக் கவலைப்பட வேண்டாம் என்று சொல்” என்றான் ரகுபதி.

23. சாலை வழியே

நகரத்திலிருந்து ரகுபதியின் வீட்டிற்கு இரண்டு மைல்களுக்குமேல் இருக்கும். சாலையில் இரண்டு பக்கங்களிலும் ஓங்கி உயர்ந்து வளர்ந்த அசோக மரங்கள் கப்பும் கிளைகளுமாகத் தழைத்து நின்றன. பகல் வேளைகளில் சூரியனின் வெப்பம் தெரியாமலும், இரவில் நிலாக் காலங்களில் பசுமையான இலைகளின் மீது நிலவின் கிரணங்கள் தவழ்ந்து விளையாடுவதாலும் அச்சாலை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அங்கொன்றும், இங்கொன்றுமாகக் கட்டப்பட்டிருக்கும் பங்களாக் களிலிருந்து வீசும் மலர்களின் மணமும் சாலையில் லேசாகப் பரவுவதுண்டு. ஸரஸ்வதியைப் பஸ் ஏற்றிவிட்டுத் தங்கத்துடன் திரும்பிய ரகுபதி சிறிது நேரம் வரையில் ஒன்றுமே பேசவில்லை. வளைந்து செல்லும் அந்த அழகிய சாலையில் அவ்வப்போது ஒன்றிரண்டு கார்களும், வண்டிகளும் போய் வந்து கொண்டிருந்தன.

தங்கம் இதுவரையில் ஓர் ஆடவனுடன் தனித்து இரவு வேளையில் எங்கும் சென்றதில்லை. மனம் பயத்தால் ‘ திக் திக்’ கென்று அடித்துக்கொள்ள, ரகுபதியைவிட்டு விலகி நாலடி முன்னாலேயே அவள் சென்றுகொண்டிருந்தாள். ரகுபதிக்கும், அவன் எதற்காகத் தங்கத்தைத் தனியாக அழைத்து வந்தான் என்பதும் புரியவே இல்லை. ‘ஸரஸ்வதி என்ன நினைக்கிறாளோ? வீட்டில் அலமு அத்தையும், அம்மாவும் என்ன சொல்வார்களோ’ என்றும் பயந்தான். மருட்சியுடன் அடிக்கடி அவனைத் திரும்பிப் பார்த்த தங்கம் ஒருவழியாக, “அத்தான்! உங்களுக்குத் தலைவலி குறைந்திருக்கிறதா? என்னையும் ஸரஸு அக்காவுடனேயே அனுப்பி இருக்கலாமே?” என்று கேட்டாள்.

ரகுபதி ஆவலுடன் அவள் முகத்தைப் பார்த்தான். ஒருவிதக் களங்கமும் இல்லாமல் விளங்கும் அந்த அழகிய வதனத்தில் உலாவும் இரண்டு பெரிய கண்களைக் கவனித்தான். வில்லைப்போல் வளைந்து இருக்கும் புருவங்களைக் கவனித்தான். எப்போதும் சிரிப்பதுபோல் இருக்கும் அவள் அழகிய அதரங்களைக் கவனித்தான். கானல் நீர் தொலைவில் பளபளவென்று மான்களுக்குத் தெரிவதில்லையா? நெருப்புப் பறக்கும் கடுங் கோடையில் தெளிந்த நீர்ப் பிரவாகம் பொங்கிப் பெருகுகிறது என்று எண்ணித்தானே மான் கூட்டங்கள் அங்கு விரைகின்றன? சாவித்திரி தன் வாழ்வில் ஏற்படுத்திய பள்ளத்தைத் தங்கத்தால் தங்கத்தின் அன்பினால் – நிரவமுடியும் என்று ரகுபதி ஏமாற்றம் அடைந்திருக்க வேண்டும். தன்னையே விழுங்கிவிடுவதைப்போல் கவனிக்கும் ரகுபதியைத் தங்கம் பார்த்தாள்.

“என்ன அத்தான்! அப்படிப் பார்க்கிறீர்களே? என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வந்தார்களே புமான்கள்! அவர்கள் யாருங்கூட இப்படிப் பார்க்கவில்லையே என்னை! . முதலில் எங்கள் வீட்டுக் கூரையைப் பார்த்தார்கள். பிறகு கீழே அவர்கள் உட்கார விரித்திருப்பது, பழைய ஜமக்காளமா அல்லது விலையுயர்ந்த ரத்தினக் கம்பளமா என்பதைக் கவனித்தார்கள். அப்புறம், எங்கள் வீட்டு ‘டிபனை’க் கவனித்தார்கள். பிறகு, ‘மணப் பெண் வந்திருக்கிறாள். பாருங்கள் ஸ்வாமி! என்று அவர்கள் கவனத்தை என்பேரில் திருப்புவதற்கு நான் ஏதாவது பாடி ஆகவேண்டும். இதுவரையில் கவனிப்பதற்கு அவகாசம் இல்லாமல் இருந்தவர்களுக்குத் திடீரென்று என் மீது கருணை பிறந்துவிடும். ஒரு அம்மாள் என் அருகில் வந்து பரபர வென்று பின்னலிட்டிருக்கும் என் கூந்தலை அவிழ்த்து மறுபடியும் பின்னுவாள். ‘இதென்ன ஆச்சரியம்?’ என்று நான் அதிசயப் பட்டபோது எனக்கு இருப்பது நிஜமான கூந்தலா அல்லது செயற்கையா என்று கண்டுபிடிப்பதற்காகத்தான் இவ்வளவும் என்று தெரிந்தது! இதெல்லாம் ஒன்றுமில்லாமல் இருக்கும் போது நீங்கள் எதற்கு அத்தான் என்னை இப்படிப் பார்க்க வேண்டும்?” – இப்படிக் கூறிவிட்டு தங்கம் ‘கலகல’ வென்று சிரித்தாள்.

ரகுபதியின் முதுகில் யாரோ சாட்டையால் அடிப்பது போல் இருந்தது. தங்கத்தின் சிரிப்பொலியைக் கேட்டு. ‘ஒருவேளை தனக்கு ஏற்பட்டிருந்த பலவீனத்தைத் தங்கம் கண்டுபிடித்து விட்டாளோ?’ என்று நினைத்துப் பயந்து போனான். அவன் மெதுவான குரலில் அவள் அருகில் நெருங்கி, “தங்கம்! நாளைக்கு நீ ஊருக்குப் போகிறாயே. ஏன் இப்பொழுதே போக வேண்டுமா? இன்னும் கொஞ்சநாள் இருந்துவிட்டுப் போயேன்” என்றான்.

தங்கம் கபடமில்லாமல் சிரித்துக்கொண்டே, “எதற்காக அத்தான் என்னை இருக்கச் சொல்லுகிறீர்கள்? நான் இருப்பதால் உங்களுக்குச் சந்தோஷம் ஏற்படுகிறதா? ஒருவேளை சாவித்திரி மதனி ஊரிலிருந்து வருகிறாளா? அவளைப் பார்த்து விட்டுப் போகச் சொல்லுகிறீர்களா என்ன?” என்று கேட்டாள்.

ரகுபதி மறுபடியும் திடுக்கிட்டான். ‘என்ன? இந்தப் பெண்ணுக்கு மனோதத்துவம் தெரிந்திருக்கிறதா? இதுவரையில் இன்று வரையில் – நிஷ்களங்கமாக இருந்த மனத்தில் களங்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை எப்படிக் கண்டுபிடித்தாள் இவள்? ஒருவேளை நாம்தான் தத்துப்பித் தென்று நடந்து கொண்டு விட்டோமோ’ என்று ரகுபதி மனத்தைக் குழப்பிக்கொண்டிருந்த சமயம், தங்கம் அவன் அருகில் நெருங்கி, “சாவித்திரி மதனிக்கும் உங்களுக்கும் ஏதோ மனஸ்தாபமாமே? எங்கள் ஊரில் பேசிக்கொண்டார்கள். உங்களிடம் கோபித்துக்கொண்டுதானே மதனி பிறந்தகம் போயிருக்கிறாள்? அப்படித்தானே அத்தான்? போகிறது. கோபத்தையெல்லாம் மறந்துவிடுங்கள். வரப் போகிற தீபாவளிப் பண்டிகைக்கு வேட்டகம் போய் மதனியை அழைத்து வந்துவிடுங்கள். ஊருக்குத் திரும்பும்போது எங்கள் ஊருக்கு வாருங்கள், அத்தான்” என்று அவனை அன்புடன் அழைத்தாள்.

தங்கம் சாதாரணப் பெண் தான். அறிஞர்கள் கற்றிருக்கும் ஜோதிஷ சாஸ்திரமும், மேதாவிகள் படித்திருக்கும் மனோதத்துவமும் அவளுக்குத் தெரிய நியாயமில்லை. வான வெளியைப்போல் பரிசுத்தமானதும், தெளிந்த நீரைப்போன்ற களங்கமற்ற மனத்தைப் படைத்த தங்கம் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்துப் பெண். பெரிய பெரிய சாஸ்திரங்களையும், படிப்புகளையும் அவள் எப்படிக் கற்றிருக்க முடியும்?

மறுபடியும், அமைதியான சாலை வழியாகத் தங்கமும், ரகுபதியும் மெதுவாக நடக்க ஆரம்பித்தார்கள். ரகுபதியின் மனம் ஒரேயடியாக இருண்டு கிடந்தது. வான வீதியில் எண்ணற்ற தாரகைகள் பளிச்சிட்டன. வளர்பிறை ஆதலால் மூளிச் சந்திரன் மங்கலாகப் பிரகாசித்துக்கொண்டிருந்தான். தங்கம் அவன் அருகிலேயே வந்து கொண்டிருந்தாள். அவள் தலையில் சூட்டி இருந்த முல்லைப் புஷ்பங்களின் மணம் ‘கம்’ மென்று வீசியது. தொலைவில் ஊரின் ஆலய கோபுரம் தெரிந்தது. சோர்ந்த மனத்துடன், ரகுபதி எதுவும் பேசாமல் விரைவாக நடந்தான். வீட்டிலே பெரியவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்து தங்கமும் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

விரைவில் கோயிலுக்கு முன்பாக இருவரும் வந்துவிட்டார்கள். கோயிலின் வாயிற் கதவு திறந்திருந்தது. மூலஸ்தானத்தில் கோதண்டத்துடன் நிற்கும் ஸ்ரீ ராமபிரானின் உருவம் கம்பீரமாகத் தெரிந்தது. பக்கத்திலே என்றும் எப்பொழுதும் இணை பிரியாமல் வசிக்கும் சீதா தேவியைப் பார்த்தான் ரகுபதி. “ஹே பிரபு! என் மனத்தில் ஏற்பட்டிருக்கும் மாசுமருக்களைத் துடைத்துவிடு. பாபத்தில் ஆழ்ந்துவிடுவேனோ என்னவோ பகவானே!’ என்று உள்ளம் உருக வேண்டிக்கொண்டான் அவன். வீட்டை அடைந்ததும் மனத்தின் பாரம் குறையாமல் போகவே, ரகுபதி தளர்ச்சியுடன் நேராக மாடியில் தன் அறைக்குச் சென்று படுக்கையில் சாய்ந்துகொண்டான்.

“உடம்பு சரியில்லையா என்ன, ரகு?”” என்று சுடச்சுட பாலைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு ஸ்வர்ணம் மகனின் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தாள். சில்லென்று இருக்கும் ஐப்பசி மாத்த்து இரவில் ரகுபதியின் நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பி இருந்தன. பாலைத் தாயின் கையிலிருந்து வாங்கி மேஜைமீது வைத்துவிட்டு, அவள் கரங்களைச் சேர்த்துத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டான் ரகுபதி.

“அம்மா! என்னால் நீ ஒருவித சந்தோஷத்தையும் அநுபவிக்கவில்லையே. உன்னைப் பலவிதத்திலும் நான் ஏமாற்றி விட்டேன் அம்மா. என்னை மன்னித்துவிடு” என்றான்.

“அசட்டுப் பிள்ளையாக இருக்கிறாயே ரகு? உன் மனசில் இருப்பது எனக்குத் தெரியாதா? தலை தீபாவளிக்கு ஊருக்குப் போய் வந்தால் எல்லாம் சரியாகிவிடும். பாலைச் சாப்பிட்டு விட்டுத் தூங்கு” என்று அன்புடன் கூறிவிட்டு ஸ்வர்ணம் கம்பளிப் போர்வையை உதறி ரகுபதிக்குப் போர்த்திவிட்டாள்.

24. முள்ளின் வேதனை

பரிவுடன் மகனுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டுக் கீழே சென்ற ஸ்வர்ணத்திற்கு வருத்தம் தாங்கவில்லை. சங்கீத விழாவுக்கு நாட்டுப்பெண் வராத விஷயம் ஊராருக்குத் தெரியும். நல்லதோ கெட்டதோ எதுவும் ஊராருடைய அபிப் பிராயத்துக்கு இணங்கித்தான் நடக்க வேண்டியிருக்கிறது. இது உலக இயல்பு. ”இருந்து, இருந்து ஒரே பிள்ளை. வீட்டிலே லக்ஷணமாக நாட்டுப்பெண் இராமல், வந்ததும் வராததுமாகப் பிறந்த வீட்டில் போய் மாசக் கணக்கில் உட்கார்ந்து கொண்டிருப்பது அழகாக இருக்கிறது!” என்று நாத்தனார் அலமு வேறு எப்போதும் ஸ்வர்ணத்திடம் கூறி அவள் மனத்தை வாட்டிக்கொண்டிருந்தாள்.

சாவித்திரி வருவதற்கு முன்பாவது வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் நிலவி இருந்தன. தினம் தவறாமல் ஸரஸ்வதி விடியற்காலமும், சாயந்தரமும் பாட்டைச் சாதகம் செய்து வந்தாள். இப்பொழுதெல்லாம் எப்பொழுதோ அத்தி பூத்தாற் போல் பாடுவது என்று வைத்துக்கொண்டுவிட்டாள் ஸரஸ்வதி. பூஜை அறையை மெழுகும்போதும், கோலம் போடும் போதும், இறைவனுக்கு மாலை கட்டும்போதும் மட்டும் மெதுவாக மனதுக்குள் பாடிக்கொள்வாள். பிறவியிலேயே அவளுடன் கலந்து விட்ட அந்த இசை இன்பம் அவள் மனத்தைவிட்டு ஒரு கணமும் அகலவில்லை. வாயைத் திறந்து பாடினால் தான், பாட்டா? ஊர் ஊராகச் சென்று கச்சேரிகள் செய்தால்தான் சங்கீதமா? நித்திரையிலும் விழிப்பிலும் அவள் மனம் இசை இன்பத்தை அநுபவித்துக்கொண்டே யிருந்தது.

ஸரஸ்வதியின் பரந்த மனத்திலும் ஒருவிதத் துயர் குடிகொண்டிருந்தது. அவளால்தான் வீட்டில் இவ்வளவு சச்சரவுகளும் நேர்ந்துவிட்டதாகக் கருதினாள். இசை விழாவின்போது, தான் கச்சேரி செய்ய ஒப்புக்கொண்டதே தவறு என்று நினைத்தாள். சாவித்திரியின் ஊருக்குச் சென்று அவளை அழைத்துவந்து ரகுபதியிடம் சேர்த்து விடுவது என்று கூட யோசித்துப் பார்த்தாள். ஆனால், அங்கு அவளுக்கு எந்த விதமான வரவேற்பு கிடைக்குமோ? இதற்குள் ஊர் வதந்திகள் ஒன்றுக்குப் பத்தாக இறக்கை கட்டிக்கொண்டு எப்படி எல்லாம் பறந்து சென்றிருக்கின்றனவோ? அத்தான் ரகுபதி கல்யாணம் பண்ணிக் கொண்டவுடனேயே அவள் அந்த வீட்டிலிருந்து விலகிச் சென்றிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யப் புகுந்த கதையாக இப்பொழுது நினைத்து வருந்துவதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது? இவ்விதம் நினைத்து வருந்திக்கொண்டே ஸரஸ்வதி, ரகுபதி கச்சேரியிலிருந்து வீடு திரும்புவதற்கு முன்பே தன் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டு விட்டாள். ரகுபதி வந்ததும், அவன் யாருடனும் அதிகம் பேசாமல் மாடிக்குச் சென்று படுத்துக் கொண்டதையும் அறிவாள். ஸ்வர்ணம் மாடியிலிருந்து கீழே வந்ததும் வருத்தம் தாங்காமல் கண்ணீர் பெருக ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள். எவ்வளவோ சகிப்புத் தன்மையை அடைந்திருந்த அத்தை அழுவதைப் பார்த்து ஸரஸ்வதி கவலையுடன் அவள் அருகில் வந்து உட்கார்ந்து, “ஏன் அழுகிறாய் அத்தை? அத்தானுக்கு உடம்பு ஒன்றும் இல்லையே?” என்று விசாரித்தாள்.

இதற்குள்ளாக அலமு ஊருக்குப் புறப்படுவதற்காக மூட்டைகளைக் கட்டிவைத்துவிட்டு, “அவசரப்பட்டுக்கொண்டு முன்னே பின்னே விசாரியாமல் புது சம்பந்தம் செய்தாயே மன்னி; இப்பொழுது படுகிறாய் சேர்த்துவைத்து!” என்று ஆத்திரத்துடன் இரைந்து பேசினாள். ஸ்வர்ணத்துக்கு அடங்கி இருந்த துக்கமெல்லாம் பொங்கி வந்தது.

“இந்தாடி அம்மா! பெண்ணை நான் மட்டும் போய்ப் பார்த்துவிட்டு வரவில்லை. உன் மருமானும் தான் வந்தான். அவன் மனசுக்குப் பிடித்திருக்கிறது என்று தெரிந்துதான் கல்யாணம் நடந்தது.”

“அந்தச் சவரணைதான் தெரிறெதே!” என்றாள் அலமு.

மறுபடியும் ஏதாவது சண்டை ஆரம்பித்துவிடப்போகிறது என்று நினைத்த ஸரஸ்வதி, அதட்டும் குரலில், “அத்தை! அத்தானுக்கு ஒரே தலைவலி என்றானே. அவன் தூங்குகிற சமயமாக நீங்கள் இங்கே சண்டைக்கு ஆரம்பிக்கிறீர்களே. பாவம், அவனைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. போதும்; உங்கள் பேச்சை நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, ‘விர்’ ரென்று எழுந்து கூடத்தில் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்துவிட்டுத் தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

கூடத்து மூலையில் மங்கலாக எரியும் சிறு விளக்கின் வெளிச்சத்தில், அதற்கு மேல் பேச்சை வளர்த்த இஷ்டப்படாமல், அலமு கோபத்துடன் படுக்கையில் ‘பொத்’ தென்று சாய்ந்து படுத்துக்கொண்டுவிட்டாள்.

மாடியில் படுத்திருந்த ரகுபதிக்கு மனப்பாரம் சற்றுக் குறைந்தது. நிசப்தமான இரவில் நீல வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே வெகுநேரம் வெளியில் நின்றிருந்தான் அவன். மறுபடியும் தன் அறைக்கு வந்து அவன் படுக்கும் போது ஸரஸ்வதியின் அறையைக் கவனித்தான். லேசாக வீசும் நிலவொளியில் ஸரஸ்வதிக்கு அருகாமையில் தங்கம் படுத்திருந்தாள். அவளுடைய அழகிய கைகள் ஸரஸ்வதியின் கழுத்தை வளைத்துக் கட்டிக்கொண்டிருந்தன. மங்கிய வெளிச் சத்தில் தங்கம் நன்றாக விழித்துக்கொண்டு படுத்திருப்பது தெரிந்தது. ‘ஆமாம்… ஸரஸ்வதியும் விழித்துக் கொண்டுதான் இருக்கிறாள். மெல்லிய குரலில் இருவரும் ஏதோ பேசுகிறார்கள். தங்கம் இவ்வளவு அந்தரங்கமாக என்ன பேசப்போகிறாள்? அன்று மாலை கச்சேரியிலிருந்து திரும்பும்போது நான் அசட்டுப் பிசட்டென்று அவளிடம் நடந்துகொண்டதை ஸரஸ்வதியிடம் வெளி யிடுகிறாளோ? பொழுது விடிந்தால் தங்கம் ஊருக்குப் போய் விடுவாள். ஆனால், ஸரஸ்வதிக்கு என் அசட்டுத்தனம் தெரிந்த பிறகு. அவளிடம் . எதிரில் நின்று பேசவே வெட்கமாக இருக்குமே!’ என்று நினைத்து ரகுபதி வெட்கமடைந்தான். ஸரஸ்வதி பேசுவதைக் கேட்டுவிட்டுத் தங்கம் அந்த நள்ளிரவிலும் ‘கலீ’ரென்று சிரித்தாள்.

“போடி அசடே! அத்தை விழித்துக்கொண்டுவிடப் போகிறாள். கதையைக் கேட்டுவிட்டு இப்படியா சிரிப்பார்கள்?” என்று தங்கத்தை அதட்டிவிட்டு ஸரஸ்வதி திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

ரகுபதி நீண்ட பெருமூச்சு விட்டான். ‘நல்லவேளை! கதை பேசிக்கொள்கிறார்களா? என்னவோ என்று பயந்து போனேனே’ என்று மெதுவாகத் தனக்குள் சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்றான்.

இரவு தூங்குவதற்கு நேரமாகவே ரகுபதி விடியற்காலம் அயர்ந்து தூங்கிவிட்டான். அவன் எழுந்திருக்கும்போது பொழுது நன்றாக விடிந்துவிட்டது. சமையலறையில் ஸரஸ்வதி, ஸ்வர்ணத்துக்கு உதவியாக வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். தோட்டத்தைச் சுற்றிச் சுற்றிவரும் தங்கமும், அலமுவும் விடியற்காலையிலேயே ஊருக்குப் போய்விட்டதால் வீடு வெறிச்சோடிக் கிடந்தது. கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து தன் மேலாக்கு பறக்க வீசி வீசி ஊஞ்சலாடும் தங்கம், அவனிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் ஊருக்குப் போய்விட்டாள்.

“அத்தானிடம் சொல்லிவிட்டு வருகிறேன்” என்று வேகமாக மாடிப்படிகளில் ஏறிய தங்கத்தின் கைகளை ஸரஸ்வதி பற்றி இழுத்தாள்.

“இந்தாடி அசடே! கொஞ்சங்கூட நாகரிகமே தெரிய வில்லையே உனக்கு? நீ இன்று ஊருக்குப் போவதைத்தான் ஆயிரம் தரம் சொல்லியாயிற்றே. நேற்றெல்லாம் உடம்பு சரியில்லையே அவனுக்கு. இப்போது போய் அவனைத் தொந்தரவு செய்வானேன்?” என்று உரிமையுடன் அதட்டி அவள் மாடிக்குப் போவதைத் தடுத்தவள் ஸரஸ்வதிதான்.

“எனக்குப் பதிலாக நீயே சொல்லிவிடு , அக்கா” என்று தங்கம் சிரித்துக்கொண்டே கூறிச் சென்றிருந்தாள்.

ரகுபதி தீவிரமாக யோசித்தான். ‘கொத்துக் கொத்தாக ரோஜாச்செடியில் மலர்கள் குலுங்குகின்றன. ‘பறிக்கவேண்டும்; முகர்ந்து பார்க்கவேண்டும்; அதன் மெல்லிய இதழ்களை வருடவேண்டும்’ என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுவது இயற்கைதான். அதுபோல் அழகிய தங்கம் வந்தாள். முல்லைச் சிரிப்பால் என் மூடிய மனதை மலர வைத்தாள். பட்டுப் பூச்சி வர்ண ஜாலங்களை வீசுவதைப்போல், நொடிக்கொரு பேச்சும், நாழிக் கொரு வார்த்தையுமாக வளைய வந்தாள். மலர் செறிந்த ரோஜாச் செடியில் மலரைக் கிள்ளும்போது, ‘சுரீர்’ என்று தைக்கும் முள்ளைப்போல, ‘ஊருக்குப் போகிறேன்’ என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் மனதைக் குத்திவிட்டு ஓடிப்போய்விட்டாள். மலரின் மென்மையை மெச்சுவதுபோல் முள்ளின் வேதனையையும் மெச்சித்தான், ‘சபாஷ்’ போடவேண்டும். நேற்று இரவு ஸ்ரீராமபிரான் கோவில் முன்பு கைகூப்பி வணங்கி வேண்டிக் கொண்டதை யெல்லாம் மனம் மறந்துவிட்டது. மறுபடியும், ‘தங்கம், தங்கம்’ என்று ஜபிக்க ஆரம்பித்துவிட்டதே! இது என்னடா, தொந்தரவு?’ என்று ரகுபதி மண்டையைக் குழப்பிக் கொண்டான்.

சமையலறையிலிருந்து ஸரஸ்வதி கூடத்துக்கு வந்தாள். கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு பித்துப் பிடித்தவன் போல் நிற்கும் ரகுபதியைப் பார்த்து, “அத்தான்! தலைவலி எப்படி இருக்கிறது? கீழே வந்து பல் தேய்த்துவிட்டுக் காப்பி சாப்பிடுகிறாயா? இல்லை, மாடிக்கே நான் வெந்நீரும், காப்பியும் கொண்டு வரட்டுமா?” என்று விசாரித்தாள்.

“வேண்டாம் ஸரஸு! நானே வருகிறேன். அலமு அத்தையும், தங்கமும் ஊருக்குப் போய்விட்டார்களா? நன்றாகத்தான் தூங்கிவிட்டேன் போல் இருக்கிறது. என்னை எழுப்பக்கூடாதோ?” என்று கேட்டான் ரகுபதி,

“தங்கம் உன்னிடம் சொல்வதற்குத்தான் மாடிக்கு வந்தாள். நான் தான் உன்னைத் தொந்தரவு செய்யக்கூடா தென்று தடுத்துவிட்டேன். பாவம்! கபடமில்லாத பெண் அவள். அவள் இல்லாமல் எனக்குக்கூட பொழுது போகாதுபோல் இருக் கிறது” என்றாள் ஸரஸ்வதி.

ரகுபதி மாடிப்படிகளில் மன நிம்மதியுடன் இறங்கினான். “தங்கம் என்னிடம் சொல்லிவிட்டுப் போகத்தான் நினைத்தாள்”: இது அவனுக்கு எவ்வளவோ ஆறுதலை அளித்தது. தங்கம் மாடிக்கு வந்து என்னை எழுப்பி இருந்தால் தொந்தரவு ஏற்பட்டுவிடும் என்று ஸரஸ்வதி தடுத்துவிட்டாளாமே? இது என்ன விந்தை! விந்தைதான்! கட்டவிழ்த்துவிட்ட குதிரை மாதிரி மனதுக்கு, ‘எது நல்லது. எது கெட்டது’ என்பதைத் தெரிய வைக்க ஸரஸ்வதியைப்போன்ற ஒருத்தி தேவைதான்! தங்கம் மாடிக்கு வந்திருந்தால் நிஜமாகவே ஏதாவது தொந்தரவு ஏற்பட்டிருக்கலாம்.’ – விவேகியான ரகுபதியின் மனம் ஸரஸ்வதிக்கு மானசிகமாகத் தன் நன்றியைச் செலுத்தியது.

25. மங்களத்தின் நம்பிக்கை

சாவித்திரியின் பிறந்தகத்தில் முன்னைப்போல உற்சாகமும், மகிழ்ச்சியும் பொங்கவில்லை. சிந்தனையும் கவலையும் உருவாக மங்களம் அவ்வீட்டுக் கூடத்தில் படுத்த படுக்கையாகக் கிடந்தாள். கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் அவள் உள்ளம் சோர்ந்து நைந்து போய்விட்டது. தளிர்த்துச் செழித்து வளரும் மரத்தைக் கோடறி கொண்டு வெட்டுவதுபோல் தழைத்துப் பெருக வேண்டிய குடும்பத்திற்குத் தடங்கலாகப் புக்ககத்தில் வாழாமல் பிறந்தகம் வந்திருக்கும் சாவித்திரியைப் பற்றியும், அவள் வருங்காலத்தைப் பற்றியும் – எல்லோரும் கவலை அடைந்தார்கள். வழக்கமாகக் காணப்படும் இரைச்சலோ, உற்சாகமோ அந்த வீட்டில் அப்பொழுது நிலவவில்லை. குடும்பத்துக்கு வேண்டியவற்றைக் கவனித்துச் செய்வதற்கு அக்கறை உள்ளவர்கள் யார் இருக்கிறார்கள்? சீதாவுக்கு அவ்வளவு அநுபவம் போதாது. விளையாட்டுச் சுபாவம் படைத்த அவள் தான் தற்சமயம் குடும்பப் பொறுப்பை நிர்வகித்து வந்தாள். வீட்டில் உள்ளவர்கள் அத்தனை பேரும் தன் பேரில் பழி சொல்வதாக நினைத்து சாவித்திரி, அதை அந்நிய இடமாகவே பாவித்தாள். இஷ்டமிருந்தால் யாருடனாவது பேசுவாள், இல்லாவிடில் அதுவும் இல்லாமல் தன் அறையிலேயே அடைபட்டுக் கிடப்பாள் அவள்.

தேக வலிமையும், சலியாமல் உழைக்கும் திறனுமுடைய தன் தாயார் உடல் மெலிந்து படுத்த படுக்கையில் கிடப்பதைப் பார்த்த சந்துரு. தன் சகோதரியை மனத்துக்குள் வெறுத்தான். மனைவியின் தேக நிலையைக் கண்ணுற்ற ராஜமையருக்கு மாப் பிள்ளை ரகுபதியின் மீதே கோபம் அதிகமாயிற்று.

மங்களம் தன் பெண்ணின் பிடிவாத குணத்தைக் கண்டு ஆறாத் துயரத்தை அடைந்தாள். சிறு வயதிலிருந்தே பரம சாதுவாகவும், யார் எதைச் சொன்னாலும் சகித்துக்கொள்ளும் சாமர்த்தியமும் பெற்றிருந்த அவளுக்கு சாவித்திரியின் மனப்போக்கு ஒரு புதிராகவே இருந்தது. சீதாவுக்கும் கல்யாண வயது நெருங்கிக் கொண்டிருந்தது. அடுத்தாற்போல் சந்துரு வுக்கும் கல்யாணம் பண்ண வேண்டியதுதான். ஆனால், புக்ககத்தில் வாழவேண்டிய பெண் கோபித்துக்கொண்டு. பிறந்தகத்தில் இருக்கிறாள் என்பதை நினைக்கையில், சீதாவுக்கு வரன் தேடவோ, சந்துருவுக்குப் பெண் கொள்ளவோ யாருக்கும் தைரியம் ஏற்படவில்லை.

படுக்கையில் கவலையே உருவமாகப் படுத்திருக்கும் தாயிடம் சந்துரு வந்து உட்கார்ந்தான். அன்புடன் அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்து விட்டு, ”அம்மா! உனக்கு வியாதியே ஒன்றுமில்லையாம். மன நிம்மதி இல்லாமல் உடம்பு கெட்டுப் போயிருப்பதாக டாக்டர் சொல்லுகிறார். உற்சாகமான மனம், அதற்கேற்ற சூழ்நிலை அமையவேண்டும் என்று அவர் கருதுகிறார். நீயோ கொஞ்சமாவது மனசுக்கு ஆறுதலைத் தேடிக்கொள்ள மாட்டேன் என்கிறாய். சதா கவலையும் கண்ணீருமாக இருந்தால் உன் உடம்பு எப்படியம்மா சரியாகும்?” என்று ஆசையுடன் விசாரித்தான் தாயை.

“கவலைப்படாமல் எப்படியப்பா இருக்கமுடியும்; மானத்தோடு கௌரவமாக வாழ்ந்த குடும்பம் ஆயிற்றே, நம் குடும்பம்? ஏதாவது பேச்சை ஆரம்பித்தால் உன் அப்பா சீறி விழுகிறார். பெண்ணை ‘நர்ஸு’கள் பள்ளியில் சேர்க்கப்போகிறாராம்! * படித்து விட்டு உத்தியோகம் செய்து சாப்பிடுகிறாள்! அவள் ஒருத்தரிடமும் கைகட்டி நிற்க வேண்டாம்’ என்கிறாரே. இந்த நாளில் இது ஒரு வழக்கம் ஆரம்பித்து இருக்கிறதே!” என்று கூறிவிட்டு, வியாதியால் மெலிந்து வெளுத்துப்போன உதடுகளை நெளித்து வரண்ட சிரிப்பொன்றை உதிர்த்தாள், மங்களம்.

சந்துரு அலட்சியத்துடன் ‘ஹும்’ என்றுவிட்டு, “இவளுக்கு இருக்கிற பொறுமைக்கு ‘நர்ஸ்’ உத்தியோகம் ஒன்றுதான் குறைச்சலாக இருக்கிறது. பொறுமையிலே சாக்ஷாத் பூமிதேவி தான் நம் சாவித்திரி” என்றான்.

“மாப்பிள்ளையாகட்டும், அவன் அம்மாவாகட்டும் பரம சாதுக்கள். இவள்தான் புருஷனுக்கும் மாமியாருக்கும் சற்றுப் பணிந்து நடந்தால் என்ன? பணிவதால் என்ன முழுகியா விடும்?” என்றாள் மங்களம்.

பணிவைப்பற்றியும், அடக்கத்தைப்பற்றியும் ஓயாமல் பேசி அவ்விதமே பல வருஷங்கள் நடந்து கொண்ட மங்களத்தினாலேயே மகளின் மனத்தைப் பணியவைக்க முடியவில்லை என்றால் பிறகு யாரால் முடியப்போகிறது? சந்துரு யோசித்து விட்டு, “ஏனம்மா! தீபாவளிப் பண்டிகைக்குப் பத்துத் தினங்கள் கூட இல்லையே. தலை தீபாவளியாயிற்றே. மாப்பிள்ளையை அழைக்கவேண்டாமா? அப்பா, ரகுபதிக்கு ஏதாவது கடிதம் போடுவதாகச் சொன்னாரா?” எனக் கேட்டான்.

மங்களம் வருத்தத்துடன் தலையை அசைத்துவிட்டு, “அதையெல்லாம் அவர் காதிலே போட்டுக்கொள்வதே யில்லை. நான் சொன்னதற்குத் ‘தலையும் இல்லை காலும் இல்லை’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். சந்துரு! நீதான் மாப்பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதேன். அதிலே என்ன தவறு இருக் கிறது? அவசியம் தீபாவளிக்கு வரவேண்டும் என்று எழுதப்பா, அவர் கட்டாயம் வருவதானால் நான் எப்படியாவது சமாளித்து சீர்வரிசைகள் செய்துவிடுகிறேன்” என்றாள் குரல் தழுதழுக்க. நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் மங்களம் கேட்பதைச் சந்துருவால் தட்ட முடியவில்லை. ‘மனைவி ஊரிலிருந்து வந்த பிறகு ஒருவரி கடிதம் கூடப் போடவில்லை. மாமனார் ஏனோ தானோ வென்று ஒன்றும் தெரியாதவர்போல் இருக்கிறார். மைத்துனன் அழைப்பு அனுப்பி மாப்பிள்ளை தலை தீபாவளிக்கு வந்த மாதிரிதான்’ என்று நினைத்த சந்துரு, தாயைத் திருப்தி செய்யவேண்டி, காகிதமும், பேனாவும் எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தான்.

சோர்ந்துபோயிருந்த மங்களத்தின் மனத்தில் நம்பிக்கை ஊற்றெடுத்தது. ரகசியமாகப் பிள்ளையின் காதில், “சந்துரு! குடும்பச் செலவிலிருந்து சேர்த்த பணம் நூறு ரூபாய்க்குமேல் பெட்டியில் இருக்கிறது. சரிகை வேஷ்டியும், புடைவையும் வாங்கி வந்து உன் பெட்டியில் வைத்து வை. அப்பாவுக்கு இதெல்லாம் தெரியவேண்டாம்” என்றாள்.

‘ஆகட்டும்’ என்று தலையை அசைத்துவிட்டு கையிலிருந்த காகிதத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு யோசனையுடன் உட்கார்ந்திருந்தான் சந்துரு. ‘தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை மட்டும் வருவது சம்பிரதாயமில்லை அல்லவா? ரகுபதியுடன் வரக்கூடியவர்கள் அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்? ஸரஸ்வதி வருவாளா? இதற்குள்ளாக அவள் மனம் நம்மைப்பற்றியும், நம் குடும்பத்தைப்பற்றியும் என்ன அபிப்பிராயம் கொண்டு விட்டதோ? அவசியம் ஸரஸ்வதியையும் அழைத்து வரச்சொல்லி எழுதுகிறேன். தவறாக இருந்தாலும் இருக்கட்டும். சரியாக இருந்தாலும் இருக்கட்டும்’ என்று துணிவுடன் கடிதத்தை எழுதி முடித்தான். அவன் சாவித்திரியைப் புக்ககத்துக்கு அழைத்துப் போனபோது ஸரஸ்வதியுடன் பேசுவதற்குப் பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டான். சுருக்கமாகவும் நிதானமாகவும் இரண்டொரு வார்த்தைகளில் ஸரஸ்வதி பதிலளித்துவிட்டுச் சென்று விடுவாள்.

அவன் அங்கிருந்த நான்கு தினங்களில் ஒரு தினம், அதி காலையில் ஸரஸ்வதி தோட்டத்தில் பூஜைக்காக மலர்கள் பறிக்கும்போது சந்துருவும் அங்கிருந்தான். ரோஜாச் செடியிலிருந்து மலரைப் பறிக்கையில் அருகிலிருந்த முள் ஒன்று அவள் விரலில், ‘சுரீர்’ என்று குத்தவே, முத்துப்போல், அந்த இடத்தில் செக்கச் செவேல்’ என்று ஒரு பொட்டு ரத்தம் கசிந்தது. ஸரஸ்வதி கையை உதறிக்கொண்டாள். “த்ஸொ … த்ஸொ … முள் குத்திவிட்டதுபோல் இருக்கிறதே. ஆழமாகக் குத்திவிட்டதா என்ன?” என்று கவலையுடன் விசாரித்தான் சந்துரு. அவள் பட்டுப்போன்ற கையைப் பார்த்துக்கொண்டே. “இல்லை…..ஆமாம் குத்திவிட்டது. கொஞ்ச நேரத்தில் சரியாகப் போய்விடும்” என்றாள் ஸரஸ்வதி.

மேலே என்ன கேட்பது, எதைப்பற்றிக் கேட்பது என்று புரியாமல் சிறிது நேரம் அவள் முகத்தையே ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தான் சந்துரு. ஸரஸ்வதி ‘சர சர’ வென்று மலர்களைப் பறித்துக் கூடையில் நிரப்பிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.

மறுபடியும் அன்று மாலையே ஒரு சந்திப்பு. மங்களம் வெகுவாகக் கேட்டுக் கொண்டதன் பேரில் ஸரஸ்வதி பாடுவதற்கு உட்கார்ந்தாள். சில பாட்டுகளைப் பாடிய பிறகு, ஸரஸ்வதி வீணையை உறையிலிடுவதற்கு ஆரம்பித்தபோது மங்களம் அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள்:

“ஷண்முகப் பிரியா” ராகத்தை நீ வாசித்தால் அற்புதமாக இருக்கிறது. கல்யாணத்தின் போது வாசித்தது என் மனத்தை விட்டு அகலவே இல்லை. மறுபடியும் இன்று அதைக் கேட்க ஆசைப்படுகிறேன், ஸரஸ்வதி” என்று முறுவலுடன் கேட்டுக் கொண்டான் சந்துரு.

உறையிலிட்ட வீணையை வெளியே எடுத்து, ‘ஷண்முகப் பிரியா’வை அழகாக வாசித்தாள் ஸரஸ்வதி. ஆவலுடன் அவளையே கவனிக்கும் சந்துருவை அவள் ஒரு முறைகூட ஏறிட்டுப் பார்க்கவில்லை.’

பழைய சம்பவங்களை நினைத்துப் பெருமூச்சுவிட்டான் சந்துரு. ஸரஸ்வதியின் மனம் ஒரு புதிர். வாக்தேவியின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரமாக இருக்கும் அந்தப் பெண், ஒரு தெய்விகப் பிறவி என்பதாக நினைத்துச் சந்துரு வியப்பும், மகிழ்ச்சியும் எய்தினான். கடிதத்தை உறையிலிட்டு நிறைந்த மனத்தினனாக அதைத் தபாலில் அன்றே சேர்த்து விட்டான்.

– தொடரும்…

– இருளும் ஒளியும் (நாவல்), முதற்பதிப்பு: செப்டம்பர் 1956, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *