லெட்சுமி

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2024
பார்வையிட்டோர்: 1,483 
 
 

(படம் பார்த்து எழுதப்பட்ட சிறுகதை)

“ஏலே….தனம்ம்… லட்சுமி வந்திருச்சா? ‌கொஞ்சம் தண்ணி காட்டி, வைக்கோலை அள்ளிப் போடு… கண்ணுக் குட்டி செத்ததுல இருந்து அது நல்லாவே இல்ல… எதுவும் திங்காமக் கிடக்கு… பாரேன்.”

“சரிங்க… அத்தை…”

தனம், லெட்சுமியை மாட்டுக் கொட்டகையில் கட்டி, வைக்கோலை அள்ளிப் போட்டாள். பின்னர் புண்ணாக்கு ஊறிய தண்ணியை காட்டினாள். ஒரு வாய் கூட வைக்கோலைத் திங்கலை. தண்ணிய லேசா குடிச்சுட்டு அப்படியே நிக்குது. கண்ணில் இருந்து மட்டும், தாரை தாரையாய் கண்ணீர் கொட்டுகிறது. இதுக்கும் மனிதர்களுக்கு போல தானே மனசு.

காத்தாயிக்கு, லட்சுமியை பார்க்கப் பார்க்க மனதிற்குள் என்னவோ செய்தது. அதுவும் உயிர் தானே. மாடுனா அதுக்கும் தாய்ப்பாசம் இருக்குமில்ல!

கன்றை இழந்த தவிப்பு அதன் கண்களில் தெரியுத…என்ன செய்ய…!

ம்ம்…நாளாக நாளாக சரியாயிடும்…

முனியாண்டியிடம் சொல்லியபடியே ,அவன் ஒரு வைக்கோல் கன்று குட்டியை ரெடி பண்ணி கொண்டுவந்து, வைத்துவிட்டு போனான். (வைக்கோலில் கன்றுக்குட்டி போல் செய்து, மாட்டுத் தோல் போர்த்திய உயிரற்ற பொம்மை அது.)

அதை தினமும் காலையில், பால் கறக்கும் முன், லெட்சுமியின் முன் வைத்தவுடன், தெரிந்தோ தெரியாமலோ, அதை லெட்சுமி நக்கத் தொடங்கியவுடன், பால் சுரக்க ஆரம்பித்துவிடும். காத்தாயி பாலைக் கறந்தாள். இப்படியே நாட்கள் நகர்ந்தன.

“குழந்தை, மலரை கவனமா பாத்துக்கணும் தனம்ம். அடிக்கடி தெருவுக்கு ஓடுகிறாள். கால் முளைச்சுசிருச்சு இல்ல. ஒரு வருஷம் ஆச்சு. ரொம்ப கவனமா இருக்கணும். நடக்கப் பழகிட்டா. கண்கொத்திப் பாம்பா பார்த்துக்கணும் தனம். எங்கேயாவது பூச்சி பொட்டு கிடக்கும்.”

“மலர் குட்டிக்கு முதல்ல பருப்பு சோத்த ஊட்டி, தூங்க வச்சுட்டு, அப்புறம் வேலையை பாரு தனம்” என மருமகளிடம் அங்கலாய்த்தாள் காத்தாயி.

நாட்கள் ஓடின. அன்றைக்கு மேயப் போன லெட்சுமி , மாலை மூணு மணி ஆகியும் வரவில்லை என நினைத்திருந்த வேலையிலே, இருளாயி ஓடிவந்தாள்.

“காத்தாயி… காத்தாயி ஓடிவா, ஓடிவா… உங் லெட்சுமிமி மலர் குட்டிய வா.. வா…” என கூறி அழைத்தாள்.

படபடப்புடன் வந்தவள் அதே வேகத்துடன் திரும்பினாள்.

“என்ன இருளாகி, எனனாச்சு….” படபடத்தாள் காத்தாயி.

அறைக்குள் இருந்த தனம் அதைவிட பதறினாள்.

“அத்தை மலரை காணோம்… வா வா…” சொல்லிக்கொண்டே ஓடினாள் காத்தாயி.

லெட்சுமி, ‌‌மலர்க் குட்டியை முட்டி விட்டதோ காயம்பட்டு விட்டதோ. ஆயிரம் நினைவுகள்.

இருளாகி கூப்பிட்டவுடன் எதிர் தெருவை நோக்கி ஓடினாள் காத்தாயி. அங்கே பார்த்தால் ஒரே கூட்டம். நெஞ்சு படபடத்தது. கூட்டத்தை விலக்கிக் கொண்டு எட்டிப் பார்த்தாள் காத்தாயி.

அங்கே கண்ட காட்சி… பிரமிக்க வைத்தது. காத்தாயிக்கு கண்கள் கலங்கின. தன் குழந்தை மலரை கண்டவுடன் மகிழ்ந்து போனாள்…

அனைவரும் ஆச்சரியத்தில் மெய்மறந்து, கன்னத்தில் கைவைத்து நின்றனர்.

கன்றுக்குட்டியை இழந்த சோகம் லெட்சுமியின் கண்களில் சற்று மறைந்திருந்தது. மலர் குட்டி, சிரித்து கொண்டிருந்தது.

அங்கே கண்ட கண்கொள்ளாக் காட்சி…

லெட்சுமியின், இரு கொம்புகளுக்கிடையே, முகத்தைப் பதித்து கொண்டு, சுகமாய் மலர்குட்டி, லட்சுமியின் மீது படுத்திருந்தாள்!

– ஆகஸ்ட் 2023, வண்ணக் கதிர் (தீக்கதிர் நாளிதழ்).

Print Friendly, PDF & Email

3 thoughts on “லெட்சுமி

  1. இக் கதையில் வரும் வைக்கோல் கன்றுகுட்டி, என் சிறு வயதில், நான் பார்த்த நினைவை ஞாபகப்படுத்தி விட்டது. கதாசிரியரின், கண்கொத்திப் பாம்பா பார்த்துக்கணும், அங்கலாய்த்தாள் காத்தாயி, போன்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. கிராமத்து மக்களின் பேச்சு வழக்கினை நன்கு கையாண்டு இருக்கிறார். சிறப்பான கதை. வாழ்த்துக்கள்.

  2. படம் பார்த்து எழுதப்பட்ட கதை ..லெஷ்மி.. கதை படத்திற்கு கச்சிதமாய் பொருந்தி வந்துள்ளது. பசுவிற்கும் மனிதர்களைப் போலத் தானே மனசு… மாடுன்னா.. அதுக்கும் தாய் பாசம் இருக்கும் தானே… அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *