கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 22, 2024
பார்வையிட்டோர்: 1,050 
 
 

(2015ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

16 – ஹரிபாபுவின் விளம்பரம்

காலை மணி பத்திருக்கும். ளங்கோ படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். அறை நண்பர்களனைவரும் வேலைக்குப் போய் விட்டிருந்தார்கள். அருள்ராசாவும் ஏதோ அலுவலாக வெளியில் சென்று விட்டிருந்தான். அன்று இளங்கோவின் மனநிலை எங்கும் செல்வதற்கு இடம் கொடுக்கவில்லை. அன்றையைப் பொழுதினைத் தன்னிருப்பிடத்திலேயே ஓய்வெடுத்துக் கழிப்பதற்கு அவன் மனம் விரும்பியது. கடந்த சில வாரங்களாக அலைந்த அலைச்சலில் உடம்பு முறிந்து போய் விட்டிருந்தது. ஓய்வை உடலும் உள்ளமும் நாடின. படுத்திருந்தபடியே சிந்திப்பதிலுமொரு சுகமிருக்கத்தான் செய்தது. அவனது சிந்தனை ஒரு கணம் குடை வியாபாரத்தில் பதிந்து மீண்டது. இலேசாக இளநகையொன்று கோடிழுத்தது. நியூயார்க்கில் குடை வியாபாரம்… நல்லதொரு அனுபவம். முதலுக்கு நிச்சயம் நட்டமில்லாமல் அவர்களது குடை வியாபாரம் அமைந்திருந்தது நல்லதொரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக அமைந்திருந்தது. அவன் அன்று எட்டுக் குடைகளை நாற்பது டாலர்களுக்கு விற்றிருந்தான். அருள்ராசா ஏழு குடைகளை முப்பத்தைந்து டாலர்களுக்கு விற்றிருந்தான். அவனுக்கு இருபது டாலர்கள் இலாபமும், நான்கு குடைகள் மீதியுமாகக் கிடைத்திருந்தன. சொந்தத் தொழில் செய்வதில் உண்மையில் இன்பமிருக்கத்தான் செய்கிறது. யாரிடமும் கையேந்தாமல், தன் தலைவிதியினைத் தானே நிர்ணயிப்பதிலுள்ள சுகமே தனிதானென்று பட்டது. 

யாரோ நடந்து வருமோசை கேட்டது. வந்தது திருமதி பத்மா அஜித். அவளது கைகளிலொரு வான் கடிதம் கிடைத்தது. இளங்கோ படுக்கையிலிருந்து எழுந்தமர்த்தான். பத்மா அஜித் அவனிடம் கடிதத்தைத் தந்தவாறு கூறினாள்: “இக்கடிதம் உனக்குத்தான் இளங்கோ?” 

“நன்றி” என்றவாறு கடித்ததை வாங்கிக் கொண்டான். ஊரிலிருந்து அம்மா எழுதியிருந்தாள். 

அவனருகில் சற்றுத் தள்ளி அமர்ந்தவளாகத் திருமதி பத்மா அஜித் கேட்டாள்: “இளங்கோ எவ்விதம் உனது வேலை தேடும் படலம் போகிறது? 

“எல்லா வழிகளிலும் நானும் முயற்சி செய்து கொண்டுதானிருக்கிறேன். இதுவரையில் ஒன்றும் பெரிதாக வந்தமையவில்லை. 

“இந்தியா எப்ரோட் பத்திரிகையில் விற்பனை முகவனுக்குரிய விளம்பரமொன்று வந்திருந்தது. உடனடியாகத் தேவையாம். அன்றாடம் கைகளில் ஊதியம் வழங்கப்படுமாம். அதைப் பார்த்ததும் உன் ஞாபகம்தான் வந்தது. அந்த விளம்பரத்தை மட்டும் கத்தரித்து வைத்துள்ளேன் உனக்குத் தேவைப்பட்டாலுமென்று.. விருப்பமென்றால் சொல்லு. எடுத்துத் தருகிறேன்” 

இளங்கோவுக்கு மீண்டும் குடை வியாபார நினைப்பு வந்தது. சிரித்துக் கொண்டான். 

“என்ன சிரிக்கிறாய் உனக்குள்ளேயே இளங்கோ” என்றாள் திருமதி பத்மா அஜித். 

“ஒன்றுமில்லை. குடை விற்ற கதை ஞாபகத்திற்கு வந்தது? 

“அதென்ன புதுக்கதை. குடை வியாபாரம் செய்தாயா? எங்கே?”

இவ்விதம் திருமதி பத்மா அஜித் கேட்கவும் இளங்கோ அவளுக்குத் தாங்கள் செய்த குடை வியாபாரம் பற்றி விரிவாக எடுத்துரைத்தான். அதனைக் கேட்டதும் திருமதி பத்மா அஜித் விழுந்து விழுந்து சிரித்தாள். அத்துடன் கூறினாள்: ” நீ பிழைத்துக் கொள்வாய். உனக்கு எந்தச் சூழலையும் எதிர்த்து நின்று போராடும் ஆற்றல் நிறையவே உள்ளது. உன்னை மாதிரியெல்லாம் என்னால் செய்து பார்க்கவே முடியாது.” 

“பார்த்தீர்களா குடை வியாபாரம் கூட இப்பொழுது ஒருவகையில் எனக்கு உதவப் போகிறதை..”

“குடை வியாபாரம் உதவப் போகிறதா?” 

“நீங்கள் கூறிய விற்பனை முகவன் வேலைக்கு இப்பொழுதே எனக்கு அமெரிக்க விற்பனை முகவன் அனுபவம் குடை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்து விட்டதல்லவா? இந்த அமெரிக்க அனுபவத்தை மூலதனமாக வைத்து அடுத்த வேலை எடுக்க முடிகிறதல்லவா.” 

“பார்த்தாயா இளங்கோ. எந்தச் செயலுமே வீணாகப் போவதில்லை. ஏதோ ஒருவகையில் உதவத்தான் செய்கிறது இல்லையா? குடை வியாபாரம் உனக்கு நட்டத்தைத் தரவில்லை. அதே சமயம் அமெரிக்க அனுபவத்தையுமல்லவா தந்துள்ளது. எதற்கும் அந்த விளம்பரத்தைக் கொண்டு வந்து காட்டுகிறேன். வாசித்துப் பார். பிடித்திருந்தால் சென்று முயன்று பார். சில நேரம் அதிருஷ்ட்டம்கூட அடிக்கலாம் யார் கண்டது?” 

இவ்விதம் கூறிய திருமதி பத்மா அஜித் கீழே சென்று சில நிமிடங்களிலேயே அந்த விளம்பரத்துடன் திரும்பி வந்தாள். அந்த விளம்பரத்தை வாங்கி வாசித்தான் இளங்கோ. அதில் பின்வருமாறு சுருக்கமாக எழுதப்பட்டிருந்தது: 

‘உடனடியாக இரு விற்பனை முகவர்கள் தேவை. மணித்தியாலத்திற்கு நான்கு டாலர்கள் ஊதியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் ஹரிபாபுவை ‘மேற்கு நான்காம் தெருவும், அமெரிக்கா அவென்யுவும் சந்திக்குமிடத்தில் (வடமேற்கில்) வந்து சந்திக்கவும்.’ 

அந்த விளம்பரம் அவனுக்குச் சிறிது விசித்திரமாகப் பட்டது. 

“இந்த விளம்பரம் எனக்கு நூதனமாகப் படுகிறது. வித்தியாசமான விளம்பரம்!” 

“ஏன் அப்படிச் சொல்கிறாய் இளங்கோ?” 

“விற்பனை முகவர்களுக்கான விளம்பரம். ஆனால் வீதியின் மூலையொன்றில் சந்திக்கும்படி கூறப்பட்டுள்ளதே. விநோதமாக உங்களுக்குப் படவில்லையா?” 

அப்பொழுதுதான் அந்த விடயமே திருமதி பத்மா அஜித்துக்கும் உறைத்தது. 

“நீ சொல்லுவதும் சரிதான் இளங்கோ. நான் அந்த விடயத்தைப் பெரிதாகக் கவனிக்கவில்லை. நீ சொல்லிய பின்புதான் தண்ணொளியில் கவனித்துப் பார்க்கின்றேன். உண்மைதான். விநோதமான விளம்பரம்தான். ஒருவேளை…” 

“ஒருவேளை.. என்ன திருமதி பத்மா அஜித் அவர்களே!” 

“ஒருவேளை ஹரிபாபு நடைபாதை வியாபாரியோ. எதற்கும் ஒருமுறை அவனைப் போய்ப் பார்ப்பதுதான் சரியாகப் படுகிறது. சிலவேளை..’ 

“என்ன சிலவேளை… பத்மா அஜித் அவர்களே!” 

“சிலவேளை அந்நியர்களுக்குத் தன்னிருப்பிடத்தைக் காட்ட அவன் விரும்பவில்லையோ என்னவோ” 

“நீங்கள் கூறுவதும் சரிதான். முதல்வேளையாக ஹரிபாபுவைச் சென்று சந்திக்க வேண்டியதுதான். அவனிடமே வேலை என்னவென்று கேட்டுத் தெரிந்து கொள்வதுதான் சரியான நடைமுறை. அதற்குமுதல் வீணாக ஏனிந்தக் கற்பனை. தேவையற்ற மன உளைச்சல்.” 

இதற்குள் திருமதி பத்மா அஜித் எழுந்து கொண்டாள்: “இளங்கோ. மீண்டும் கூறுகிறேன். என்னுடைய ஆலோசனையென்னவென்றால்… நீங்கள் கூறியபடியே அவனை, ஹரிபாபுவை, சந்திக்க வேண்டியதுதான்” 

இளங்கோவுக்கும் திருமதி பத்மா அஜித், கூறுவதே சரியாகப்பட்டது. 

அந்திச் சூரியனின் தண்ணொளியில் பூமிப்பெண் குளித்துக் கொண்டிருந்தாள். பகல் முழுவதும் நகரில் அலைந்து திரிந்துவிட்டு அருள்ராசா மெதுவாக வந்து சேர்ந்தான். 

“அருள். உனக்கொரு விசயம் தெரியுமே?” 

“என்ன…” 

“திருமதி பத்மா அஜித் ஒரு விளம்பரப் பிரதியினைத் தந்தவர். அதில் விற்பனை முகவர்கள் தேவையெனப் போட்டுள்ளதாம். ஆனால்…” 

“ஆனால்… என்ன இளங்கோ?” 

“எனக்கென்றால் அந்த விளம்பரத்திலெங்கோவொரு குறை இருப்பதுபோல் படுகிறது” 

“உனக்கெப்பவுமே இப்படித்தான். ஏதாவதொன்றிலை குறை கண்டுபிடிக்காவிட்டால் உனக்குப் பொழுதே விடியாதே!” 

“பின்னே…விற்பனை முகவர்கள் தேவையென்று விளம்பரம். ஆனால் நடைபாதையில் சந்திப்பும், நேர்முக வர்ணனையுமாம். இது எப்படியிருக்கு?” 

“இளங்கோ! எதற்குமொருமுறை அந்த விளம்பரத்தை மீண்டும் படித்துப் பார். சில சமயங்களில் ண்மைகூட நித்திரை கொள்வதுண்டு. 

“சரி சரி அருள். சுற்றி வலைத்துப் பேசாமல் விசயத்திற்கு வா. இப்பொழுது நான் என்ன செய்யவேண்டுமென நீ நினைக்கிறாய்?” 

“நாமிருவரும் அந்த விளம்பரத்திலுள்ளவாறே நாளைக் காலை ஹரிபாபுவை அவன் குறிப்பிட்ட இடத்திலேயே சென்று சந்திப்போம். அவன் குறிப்பிடும் வேலை பற்றி மேலுமதிகத் தகவல்களை அச்சந்திப்பின் மூலம் பெற்றுக் கொள்ளமுடியும். பிடித்திருந்தால் செய்கிறோம். பிடிக்காவிட்டால் திரும்பி விடுவோம்.குடியா முழுகி விடப் போகிறது. நீ என்ன சொல்லுகிறாய்?” 

இளங்கோவுக்கும் அருள் கூறுவதே சரியாகப் பட்டது. 

“அருள் நீ கூறுவதே சரி. அவ்விதமே நாளைக் காலைப் பொழுதினைக் ஹரிபாபுவுடம் கழித்து விடுவோம்.’ 

இவ்வாறு நண்பர்களிருவரும் அன்றிரவு நீண்ட நேரம் இவ்விடயம் பற்றியயே கதைத்துக் கொண்டிருந்துவிட்டுத் தூங்கிப் போனார்கள். தூங்கப் போவதற்கு முன் இளங்கோ தாயாரின் கடிதத்தை எழுத்து வாசித்தான். அதில் பின்வருமாறு சுருக்கமாக எழுதப்பட்டிருந்தது: 

“இளங்கோ! நீ அங்கு நல்ல சுகமாக இருப்பாயென நினைக்கிறேன்; வேண்டுகிறோம். புது இடம். கொஞ்சம் கவனமாக இருக்கப் பழகு. இங்கு நாங்கள் அனைவரும் சுகமே. இங்கு சூழ்நிலையொன்றும் அவ்வளவு சரியாக இல்லை. எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம். பார்வதி நேற்றும் வந்து போனவ. அவ மட்டும் அவசரத்துக்கு உதவியிருக்காவிட்டால் நீ வெளியிலை போயிருக்க முடியாது. பாவம் அவள். உன் நிலையும் எனக்கு விளங்குது. இவ்வளவு நாளும் உள்ளுக்குள்ளை உன்னை வைச்சிருந்தாங்கள். இப்பத்தான் வெளியிலை விட்டிருக்கிறான்கள். கெதியிலை உழைக்கப்பார். அப்ப அப்ப கொஞ்சம் கொஞ்சமாவது அனுப்பி வைச்சாயென்றால் உதவியாகவிருக்கும்.”

17 – ஹரிபாபுவின் நடைபாதை வியாபாரம் 

அன்றிரவு முழுவதும் இளங்கோவுக்கு மறுநாள் சந்திக்கவுள்ள ஹரிபாபு பற்றியும் அவனது தொழில் என்னவாகவிருக்கக் கூடுமென்பது பற்றியுமே சிந்தனையாகவிருந்தது. அவனது விளம்பரத்தைப் போல் அவனும் புதிரானவனாகயிருப்பானோ என்றொரு எண்ணமும் அவ்வப்போது எழுந்தோடியது. எது எப்படியோ இந்த வேலை மட்டும் கிடைத்து விட்டால் அதுவும் நிலையானதாகவிருந்து விட்டால் நல்லதென்று பட்டது. தாயாரின் கடிதம் கூட அவனுக்கு உடனடியாக வேலையொன்றினை எடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தியது. அவனுக்கு அப்பொழுது ஆச்சி அடிக்கடி கூறுமொரு பொன்மொழி ஞாபகத்துக்கு வந்தது. ‘பாவி போன இடமெல்லாம் பள்ளமும் திட்டியும்’ என்பதுதானது. அந்தப் பழமொழி அவனுக்காகவே உருவானதுபோல் பட்டது. ஆச்சியைப் பற்றி நினைத்ததும் அவனுக்கு எப்பொழுதுமே பெரும் பிரமிப்புத்தான் ஏற்படுவது வழக்கம். ஆச்சி அன்றைய காலத்து மனுசி. ஏட்டுக் கல்வியைவிட அதிகளவு அனுபவ அறிவு மிக்கவளவள். எந்த நேரமும் சிரித்த முகமும், மகிழ்ச்சியுமாகவும் காணப்படுவாள். ஒருநாளாவது ஆச்சி கோபப்பட்டு அவன் பார்த்தே கிடையாது. ‘மகராசனாய்ப் போயிட்டு வா’ வென்று அவள் அடிக்கடி வாழ்த்தி அனுப்பும்போது ஒவ்வொரு முறையும் அவனும் அவனது நண்பர்களும் உற்சாகத்துடன் கூடிய மகிழ்ச்சியினையே அடைவது வழக்கம். ஆச்சியின் சமையல் மாதிரி இதுவரையில் வேறெங்கும் அவன் கண்டதில்லை. அவளது முளைக்கீரையும், குழம்பும், தயிரும் எத்தனை தடவைகள் உண்டாலும் அலுக்காதவை. உடல், உள்ளமிரண்டிலும் உறுதி மிக்கவளவள். ஆச்சியின் இன்னுமொரு விஷேசம் அவள் வாயிலிருந்து அவ்வப்போது உதிரும் வார்த்தைகள். சொற்களை வைத்து ஜாலம் காட்டுவதில் வல்லவளவள். எழுபதுகளில் அவன் ‘பெல்பாட்டமும்’ நீண்ட தலைமுடியுமாய்த் திரிந்து கொள்ளும்போது காணுகையில் ‘வாடா பீத்தல் பறங்கி” என்று வரவேற்பாள். அடிக்கடி சைக்கிள் செயினில் சிக்கிக் கொழுப்புப் படிந்து கிடக்கும் பெல்பாட்டத்துடன் பீத்தல் பறங்கியாக நுழையுமவன் அசடு வழியச் சிரிப்பான். 

அன்றிரவு கோஷிடமும் அடுத்த நாள் ஹரிபாபுவைச் சந்திப்பது பற்றி இளங்கோ குறிப்பிட்டான். கோஷுக்கும் சிறிது ஆச்சரியமாகவிருந்தது. ஹரிபாபு ஆச்சரியமான பேர்வழியாக இருக்கிறானே!” என்று சிறிதளவு வியந்தானவன். அத்துடன் கூறினான்: “பெயரினைப் பார்த்தால் மராத்திக்காரன் போலிருக்கிறான். எதற்கும் நாளைக் காலை அவனைச் சென்று பார்த்துவிட்டு வந்து எங்களுக்குக் கதையினைக் கூறு. கேட்பதற்கு ஆவலாகவிருக்கிறோம். 

“கோஷ்.அதெப்படி அவ்வளவு தீர்மானமாகக் கூறுகிறாய் அவன் மராத்திக்காரனென்று..” 

இதற்கு கோஷ் ஒருமுறை இலேசாகச் சிரித்தான். “ஹரிபாபு நாராயண் என்றொரு பிரபலமான மராத்திக்காரனின் ‘நான்’ என்றொரு நாவலை இந்திய சாகித்திய அக்கடமியால் பதிப்பிக்கப்பட்டது; வாசித்திருக்கின்றேன். நல்லதொரு நாவல். தகழியின் ‘ஏணிப்படிகள்’ வாசுதேவநாயரின் ‘காலம்’ போன்று நல்லதொரு நாவலது. அதனால்தான் நீ ஹரிபாபு வென்றதும் மராத்திக்கரனாகவிருப்பானோ என்று சந்தேகப்பட்டேன். எதற்கும் அவனைப் போய் நேரிலேயே பார். அப்பொழுதுதான் சரியான நிலை புரியும்” 

இளங்கோவுக்கும் அவன் கூறுவதே சரியாகப் பட்டது. “இந்த வேலை மட்டும் கிடைத்து விட்டால் திருமதி பத்மா அஜித்துக்குத்தான் நன்றி கூறவேண்டும். 

இதற்குக் கோஷ் சிரித்தான். “இளங்கோ, அளவுக்கதிகமாக அவளைப் புகழாதே. எல்லாம் காரியத்துடன்தான். நீ வேலை செய்தால்தானே ஒழுங்காக அவளுக்கு வாடகை கிடைக்கும். அந்தக் கரிசனைதான் காரணம். வேறொன்றுமல்ல. 

“எனக்கென்றால் அவளை அவ்வளவு குறைத்து மதிப்பிடுவது சரியாகப் படவில்லை. இருந்தாலும் உனது பேச்சுரிமையினை மதிக்கிறேன்” என்றான் இளங்கோ. அருள்ராசாவுக்கு இளங்கோ கூறுவதே சரியாகப் பட்டது. 

அன்றிரவும் ஒருவாறு கழிந்து மீண்டுமொருமுறை பொழுது புலர்ந்தது. இளங்கோவினதும், அருள்ராசாவினதும் வேலை தேடும் படலம் ஆரம்பமாகியது. அதற்கு முதற்படியாகக் ஹரிபாபுவைச் சந்திப்பதற்காக நான்காம் தெரு மேற்கு நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார்கள். அவன் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த சந்திக்குச் சென்றபொழுது காலை பத்துமணியினைத் தாண்டி விட்டிருந்தது. நான்காவது வீதி மேற்கும், ஆறாவது அவென்யுவும் சந்திக்குமிடத்தில், வடமேற்குப் புறத்தில் அவன் கண்டது ஓர் இந்தியத் தம்பதியினரின் நடைபாதை வியாபாரத்தினைத்தான். ஆணுக்குச் சிறிது வயதாகியிருந்தது. ஆனால் அந்த இந்தியப் பெண்மணியோ வயதில் மிகவும் இளமையுடன் காணப்பட்டாள். பார்ப்பதற்குச் சங்கராபரணத்தில் நடித்த மஞ்சு பார்கவி போலிருந்தாள். உண்மையைச் சொல்லப்போனால் அவன் கூட அத்திரைப்படத்தில் நடித்த சங்கீத வித்வானைப் போல் முதுமையான தோற்றத்துடனிருந்தாலும், உடலமைப்பைப் பொறுத்தவரையில் திடகாத்திரமாகக் காணப்பட்டான். அவர்களுடன் இன்னுமொரு வெள்ளையினத்து யுவதியும் ‘ஜீன்ஸும், டீசேர்ட்டுமாக’க் காணப்பட்டாள். 

அத்தம்பதியினரை அண்மித்த இளங்கோ “என் பெயர் இளங்கோ..” என்று வார்த்தைகளை முடிக்கவில்லை அவர்களில் அந்த ஆண் “அது நீதானா? நல்லதாகப் போய் விட்டது. நான்தான் விளம்பரம் கொடுத்திருந்த ஹரிபாபு. நீ சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறாய்” இவ்விதம் இளங்கோவையும் அருள்ராசாவையும் பார்த்துக் கூறிய ஹரிபாபு அந்தப் பெண்மணிபக்கம் திரும்பி “இந்திரா! நான் இவர்களுடன் சிறிது கதைத்து விட்டு வருகிறேன். அதுவரை வியாபாரத்தைச் சிறிது கவனித்துக் கொள்” என்றான். அத்துடன் அந்த வெள்ளையினத்து யுவதியினைப் பார்த்து விசேசம் அவள் ” இங்கிரிட், இந்திராவுடன் துணையாகச் சிறிது நேரம் இருந்து கொள். உடனேயே வாயிலிருந்து வந்து விடுகிறேன்” என்றான். 

பதிலுக்கு இந்திரா என்னும் அந்தப் பெண்மணிக்கு வணக்கம் கூறிவிட்டு இளங்கோவும், அருள்ராசாவும் ஹரிபாபுவைத் தொடர்ந்து சென்றனர். ஹரிபாபு அவர்களை அருலிருந்த தேநீர்க்கடையொன்றுக்கு அழைத்துச் சென்றான். “நீங்கள் இருவரும் என்னை வந்து சந்தித்ததற்கு மகிழ்ச்சி. ஜாலம் காட்டுவதில் ஆறுதலாகத் தேநீர் அருந்தியபடி எல்லாவற்றையும் விபரமாகக் கூறுகிறேன். உங்களுக்கும் பிடித்திருந்தால், எனக்கும் உங்களைப் பிடித்திருந்தால் நாம் இணைந்து பணியாற்றலாம்.” என்று செல்லும் வழியில் ஹரிபாபு கூறினான். அவன் தொடர்ந்தும் விபரிக்கப் போகும் வேலைவாய்ப்பு தலைமுடியுமாயத் பற்றிய விபரங்கள் எததகையதாகவிருக்கக் கூடுமென்று எண்ணியபடியே அவன் கூறுவதையு ம் செவிமடுத்தபடி அவனைத் தொடர்ந்தனர் அவர்கள். அவனுடன் அவ்விதம் செல்கையிலேயே அவனுடன் இணைந்து பணியாற்றுவதில் ” எந்தவித ஆட்சேபனையுமேற்படப் போவதில்லையென்று பட்டது. 

அத்தேநீர்க்கடையின் ஒரு மூலையில் சென்றமர்ந்தனர். ஹரிபாபுவே அனைவருக்கும் தேநீர் வாங்கி வந்தான். தேநீரைச் சிறிது சுவைத்தபடி இப்பொழுது ஓரளவுக்குப் புரிந்திருக்குமே” என்றான். இதற்கு இளங்கோவே முதலில் பதிலிறுத்தான்: 

“நடைமுறையினைப் பார்க்கும்பொழுது ஓரளவு ஊகிக்க முடிகிறது. பத்திரிகையில் விற்பனையாளர்கள் தேவையென்று விளம்பரம் செய்திருந்தீர்கள். ஆக, உங்களுக்குத் துணையாக நாங்கள் விற்பதற்கு உதவப் போகின்றோமென்று படுகிறது..” 

இப்பொழுது ஹரிபாபு இடைமறித்துப் பின்வருமாறு கூறினான்: “சரியாகக் கூறினாய். நீ கெட்டிக்காரன். நான் உடனடியாக விஷயத்திற்கே வருகிறேன். விசயம் இதுதான். இப்பொழுது நாங்கள் அதுதான் நானும் என் மனைவியும் அந்த வெள்ளைக்காரியும் நடைபாதையில் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறோம். இன்னுமொருவன் ஹென்றி. அவனொரு எஸ்கிமோ இனத்தைச் சேர்ந்தவன், எங்களுக்காக அடுத்த சந்தியிலிருந்து விற்றுக் கொண்டிருக்கிறான். எங்கள் வியாபாரத்தை இன்னுமொரு சந்திக்கு விஸ்தரிக்க வேண்டியிருக்கிறது. இப்பொழுது வியாபாரம் சுறுசுறுப்பாகவிருக்கிறது. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள் வேண்டியதுதானே. அதுதான் எங்களது திட்டம். அதற்காகத்தான் விளம்பரம் செய்திருந்தோம். உங்களுக்குப் பிடித்திருந்தால் ஹென்றியைப் போல் நீங்களிருவரும் அந்த விற்பனையினைக் கவனித்துக் கொள்ளலாம். என்ன நினைக்கிறீர்கள்? பிடித்திருக்கிறதா? உங்களால் சமாளிக்க முடியுமென்று நினைக்கிறீர்களா?” 

இப்பொழுது அருள்ராசா வினாத் தொடுத்தான்: “அது சரி, எவற்றையெல்லாம் நாம் விற்க வேண்டும்? 

இதற்குக் ஹரிபாபு இவ்விதம் பதிலளித்தான்: “சரியான கேள்வி. பிரதானமாக என் ஸ்டோரில் ஏராளமாகவிருக்கும் செப்புச் சிலைகள் போன்ற பல இந்தியப் பொருட்களை நீங்கள் நடைபாதையில் வைத்து விற்கவேண்டும். அத்துடன்…” 

“அத்துடன்…” இவ்விதமிழுத்தது இளங்கோ. 

“அத்துடன் காலநிலைக்கேற்ற ஆடை வகைகள், ஆபரண வகைகள் போன்றவையும் என்னிடம் நிறையவுள்ளன. அவற்றையும் விற்கவேண்டும். நீங்களிருவரும் ஒன்றாக நின்று ஒருவருக்கொருவர் உதவியாகவிருக்கலாம்.” 

“எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும்? எத்தனை மணிக்கு ஆரம்பிக்க வேண்டும்? எத்தனை மணிக்கு முடிக்க வேண்டும்? எவ்வளவு எங்களுக்கு ஊதியமாகக் கிடைக்கும்?” 

இவ்விதம் இளங்கோ படபடவென்று கேள்விகளைத் தொடுக்கவே ஹரிபாபு இலேசாகச் சிரித்தான். அத்துடன் கூறினான்: “காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை வேலை செய்தால் போதுமானது. வியாபாரம் மிகவும் ‘பிசி’யாகக் காணப்பட்டால் நீங்களிருவரும் மேலதிகமாக வேலை செய்ய விரும்பும் பட்சத்தில் வேலை செய்யலாம். அன்றாடம் உங்களது ஊதியம் வழங்கப்படும். என்ன நினைக்கிறீர்கள்? அட மறந்து விட்டேனே.. விளம்பரத்தில் கூறிருந்தபடியே மணித்தியாலத்திற்கு நான்கு டாலர்கள் ஊதியமாக வழங்கப்படும். என்ன சொல்லுகிறீர்கள்?” 

இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் அப்போதிருந்த பொருளியற் சூழலின் விளைவாக எந்தவொரு வேலையினையும் நிராகரிக்கும் மனநிலை இருக்கவில்லை. வலிய வந்த சீதேவியினை யாராவது எட்டி உதைவார்களா? எனவே ஒருமித்த குரலில் கூறினார்கள்: “எங்களுக்குப் பூரண சம்மதமே..” 

அவர்களது அந்தவிதப் பதில் அவனை மகிழ்வித்திருக்க வேண்டும். 

“நல்லது. உங்களிருவரையும் எனக்கும் மிகவும் பிடித்துப் போயுள்ளது. அதற்குமுதல் உங்களிருவரையும் ஹென்றிக்கும் ஒருமுறை அறிமுகம் செய்து வைக்க வேண்டும். உங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவிருக்கும். தேநீர் அருந்தி முடித்ததும் நாம் அனைவரும் ஒருமுறை ஹென்றியைச் சென்று சந்திப்போம். அவனுக்கும் மகிழ்ச்சியினை அளிப்பதாவிருக்கும். சிறிது நேரம் அவனுடன் நீங்களிருவரும் நின்று வியாபாரத்தை நடத்தும் வழிமுறைகள் பற்றி மேலதிகமான தகவல்களையும் பெறமுடியுமல்லவா?” 

இவ்விதமாக அவர்களுக்கிடையில் தொடர்ந்த உரையாடல் தொடர்ந்தது. அனைவரும் தேநீர் அருந்தி முடித்ததும் ஹரிபாபு அவர்களிருவரையும் அழைத்துக் கொண்டு ஹென்றியின் இருப்பிடத்தை நோக்கி நடையைக் கட்டினான். அவர்களும் அவனைத் தொடர்ந்தனர். 

18 – ஹென்றியின் சாமர்த்திய(ம்/மா?) 

நான்காவது வீதி மேற்கு ஏழாவது அவென்யு, கிறிஸ்தோபர் வீதி ஆகிய வீதிகள் சந்திக்கும் சந்திப்பிலுள்ள நடைபாதையொன்றில் நடைபாதை வியாபாரம் செய்து கொண்டிருந்த ஹென்றியை முதலில் ஹரிபாபுதான் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்: 

“இவன்தான் நான் கூறிய ஹென்றி. எஸ்கிமோ ஹென்றி.” அவ்விதம் கூறியபொழுது ஹரிபாபுவின் வதனத்தில் இலேசானதொரு பெருமிதம் கலந்த முறுவலொன்று ஓடி மறைந்ததுபோல் இளங்கோவுக்குப் பட்டது. அந்தப் பெருமிதம் அவனது குரலிலும் தொனித்ததாகவும் பட்டது. ஒருவேளை ‘பார்த்தாயா என் சாமர்த்தியத்தை, மராத்தியனான நான் கண்டம் கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து வந்து, இங்கு இந்த நாட்டின் ஆதிக்குடிகளிலொருவனைக் கட்டி வைத்து வேலை வாங்குகின்றேனே! என்ன நினைத்துக் கொண்டாய் என்னைப் பற்றி..’யென்று அவன் கருவத்துடன் உள்ளூர நினைத்துக் கொண்டிருக்கலாமோவென்று ளங்கோ தனக்குள்ளே எண்ணிக் கொண்டான். அதே சமயம் குள்ளமாகவும், குட்டையான கால்களுடனும் அந்த எஸ்கிமோ இருந்தான். இளங்கோவுக்கு அவனை அங்கு பார்த்ததும் ஆச்சரியமாகவிருந்தது. அந்த ஆச்சரியம் தனது குரலில் தொனிக்க வேடிக்கையாக, “எஸ்கிமோவான உனக்கு இங்கென்ன வேலை. துருவத்தை விட்டு நீயும் புலம்பெயர்ந்து விட்டாயா? உன்னையும் நாகரிக மோகம் பற்றிக் கொண்டு விட்டதாயென்ன?” என்றான். அதைக் கேட்டதும் எஸ்கிமோ ஹென்றியும் இலேசாகச் சிரித்துக் கொண்டான்: “எத்தனை நாள்தான் துருவத்திலேயே சஞ்சரிப்பது. குளிர் அலுத்து விட்டது. துருவம் விட்டுத் துருவமாகப் பறவைகளே வருடா வருடம் இடம்மாறும்போது மனிதனான நான் மாறுவதிலென்ன தப்பு? ஒரு மாறுதலுக்காக இந்த மாநகருக்கு வந்தவனை இந்த ஹரிபாபு இவ்விதம் வளைத்துப் பிடித்துக் கொண்டான்” என்றும் சிறிது மேலதிகமாகத் தகவல்களைப் பகிர்ந்தும் கொண்டான். 

இளங்கோ: “என்ன எஸ்கிமோவுக்குக் குளிர் அலுத்துவிட்டதா? ஆச்சரியமாகவிருக்கிறதே..” 

“இதிலென்ன ஆச்சரியம். என்னைப்போலிங்கு இந்த மாநகரை நோக்கிப் பல எஸ்கிமோக்கள் படையெடுத்திருக்கின்றார்கள். என்ற எஸ்கிமோ ஹென்றியைப் பார்த்து இப்பொழுது அருள்ராசா இடைமறித்திவ்விதம் கேட்டான்: “நானறிந்தவரையில் எஸ்கிமோக்களால் குளிர்பிரதேசங்களைக் கடந்து வேறிடங்களுக்குச் சென்று வாழ அவர்களது உடலமைப்பு இடம் கொடுக்காதென்றல்லவா இதுவரையில் எண்ணியிருந்தேன். உன்னைப் பார்த்தால் அவ்விதம் தெரியவில்லையே” 

இதற்கு ஹென்றியின் பதில் அறிவுபூர்வமானதாகவும், தர்க்கச் சிறப்பு மிக்கதாகவுமிருந்தது: ‘வெப்பமான காலநிலையில் சஞ்சரித்த உன்னால் இந்தக் குளிர்பிரதேசத்திற்கு வந்து வாழ முடியுமென்றால் இந்தக் கண்டத்திலேயே பிறந்து வளர்ந்த எனக்கு இதே கண்டத்தின் இன்னுமொரு பகுதியில் வசிப்பதிலென்ன கஷ்டமிருக்க முடியுமென்று நீ நினைக்கின்றாய்?” 

இப்பொழுது ஹரிபாபு இடைமறித்து உரையாடலினைத் தொடர்ந்தான்: “ஹென்றி நல்ல சுறுசுறுப்பான கடுமையான உழைப்பாளி. இவனுடன் ஒரு சில மணித்தியாலங்கள்வரையில் நீங்களிருவரும் இருந்து இவன எவ்விதம் வியாபாரத்தினை நடத்துகின்றானென்று பார்த்துவிட்டு வாருங்கள். அதன் பின்னர் உங்களுக்கும் இந்த வியாபாரத்தை இவனைப் போல் தனியாக இன்னுமொரு நடைபாதையில் நடத்தலாமென்று நம்பிக்கையேற்பட்டால் உங்களுக்கும் நாளை முதல் இவனைப் போல் இன்னுமொரு இடத்தை ஏற்பாடு செய்து விடுகின்றேன். 

இதன்பின்னர் ஹென்றி பக்கம் திரும்பிய ஹரிபாபு இவ்விதமாகக் கட்டளையிட்டான்: “ஹென்றி, இவர்களிருவருக்கும் நமது வியாபாரத்தைச் சிறிது விளக்கி விடு. நடைபாதையிலிருந்து எல்லோராலும் வியாபாரம் செய்து விட முடியாதல்லவா அதன்பின்னர் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு ஹரிபாபு தன்னிருப்பிடத்துக்குச் சென்று விட்டான். இப்பொழுது இளங்கோவும், அருள்ராசாவும் ஹென்றியுடன் தனித்து விடப்பட்டனர். 

ஹென்றி முக்கியமாக விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களாகப் பித்தளையினாலான பல்வகைச் சிற்பங்கள், பூஜை வழிபாடுகளுக்குரிய குத்து விளக்கு போன்ற உபகரணங்கள், தேநீர் அருந்துவதற்குரிய கிண்ணங்கள் போன்ற பல்வகைச் சமையற் பாத்திரங்கள், இன்னும் பல பித்தளைப் பொருட்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அது தவிர பல்வேறு வகைகளினான குளிர்காலத்துக்குரிய ஆடை வகைகள், மேலும் ஊரில் குறவர்/குறத்தி விற்பார்களே அத்தகைய பாசிமணி, ஊசிமணிமாலை போன்ற ஆபரண வகைகளெனப் பலவகைப் பொருட்கள் அவனிடம் விற்பனைக்கு இருந்தன. நடைவாசிகள் பலர் அவ்வப்போது அவன் விரித்திருந்த கடையை ஆவலுடன் பார்த்தார்கள். சிலர் பேரம்பேசி சில பொருட்களை வாங்கியும் சென்றார்கள். ஒரு பருத்த வெள்ளைக்காரப் பெண்மணி தன் காதலனான ஒரு கறுப்பினத்து வாலிபனுக்கு நல்லாயிருக்குமென ஊசிமணி மாலையொன்றை வாங்கிப் பரிசளித்தாள். அவனும் பல சிணுங்கல்களுக்குப் பின்னர் அவளை முத்தமிட்டுத் தன் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டு அந்த மாலையினை வாங்கியணிந்து கொண்டான். இவ்விதமாகத் தன வியாபாரத்திலும் கவனமாகவிருந்து கொண்டு அவ்வப்போது இவர்களுடனும் உரையாடலினைத் தொடர்ந்து கொண்டிருந்தான் ஹென்றி. இளங்கோ ஹென்றியின் வியாபாரதிறமைகளையும் அவதானித்தான். அவன் தன் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பதற்குக் கையாளும் உரையாடற் தந்திரங்களையும் அவதானித்தான். 

இதே சமயம் அருள்ராசாவும் இளங்கோவும் அவ்வப்போது தமக்குள்ளும் தமிழில் உரையாடினார்கள். அருள்ராசாவுக்கோர் ஐயமேற்பட்டது.இளங்கோ, உன்னாலை இப்படி விற்க முடியுமென்று நினைக்கிறியா?” 

இதற்கு இளங்கோ “விற்கிறதுக்குக்கென்ன. அவ்வளவு கஷ்ட்டமாகத் தெரியேலையே. எனக்கென்றால் செய்யலாம் போலைத்தான் கிடக்கு. நீ என்ன நினைக்கிறாய்?” என்று எதிர்க் கேள்வி கேட்கவும் எனக்கு இங்கென்ன அருள்ராசா “செய்து பார்க்கிறதிலை பிரச்சினையொன்றுமில்லையென்றுதான் படுகுது. செய்து பார்ப்பம். எதுக்கும் முதலிலை இவனிட்டையும் ஏதாவது விசயத்தைக் கறக்கலாமாவென்று பார்ப்போம்” என்றான். 

இவர்கள் தங்களுக்குள் அடிக்கடி பேசிக் விட்டாயா? கொள்வதை அவ்வப்போது அவதானித்த எஸ்கிமோ ஹென்றி “என்ன இவ்விதம் விற்பதற்குப் பயமாகவிருக்கிறதா? என்று கேட்டான். இதற்கு “அப்படியொன்றுமில்லை” என்று பதிலளித்த இளங்கோ “அது சரி. நீ எவ்விதம் ஹரிபாபுவைக் கண்டு பிடித்தாய?’ என்று கேள்வியொன்றினையும் கேட்டு வைத்தான். 

அதற்குச் சிரித்தபடியே ஹென்றி கீழுள்ளவாறு நீண்டதொரு பதிலினையளித்தான்: 

“இந்த ‘கிறீன்விச் கிராமம்’ கலைஞர்களுக்கும். உல்லாசப்பிரயாணிகளுக்கும் பெயர் போனது. மேலும் நியூயார்க் மாகாணப் பல்கலைக்கழகமும் இங்குதானுள்ளது. மாலையென்றால் வாசிங்டன் சதுக்கத்துப் பூங்காவுக்கு அண்மையிலுள்ள நடைபாதைகளில் கோடைகளில் ஓவியர்கள் நடைபாதைவாசிகளை அப்படியே வரைந்து சம்பாதித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். நானும் இந்நகருக்கு வந்ததும் இவ்விதமாக உடனடியாகவே எனது நடைபாதை வியாபாரத்தை ஆரம்பித்து விட்டேன். வாசிங்டன் சதுக்கப் பூங்காவுக்கண்மையிலுள்ள ‘மக்டூகல்’ வீதி நடைபாதையில்தான் ஆடைவகைகளை வைத்து விற்றுக் கொண்டிருந்தேன். அப்போழுதுதான் ஒருநாள் இந்தக் ஹரிபாபுவைக் கண்டேன். இவன் அப்பொழுதுதான் தனது நடைபாதை வியாபாரத்தை ஆரம்பித்திருந்தான். ஒருநாள் இந்தப் பகுதியைச் சுற்றி யார் யாரெல்லாரும் இத்தகைய நடைபாதை வியாபாரங்களையெல்லாம் இங்கே செய்து கொண்டிருக்கிறார்களோவென்பதை அறிவதற்காக வந்து கொண்டிருந்தவன் பார்வையில் நான் தட்டுப்பட்டேன். என்னைக் கண்டதுமே அவனுக்கு என்னைப் பிடித்துப் போய் விட்டது. மேலும் இந்தப் பகுதியில் அவனுக்குப் போட்டியாக நானொருவன் மட்டும்தான் இவ்விதம் அவன் விற்கும் பொருட்களிலொன்றான ஆடைவகைகளை விற்றுக் கொண்டிருந்தேன். எனவே என் பொருட்களை மொத்தமாக விலைபேசி வாங்கி என்னைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டால் நல்ல வேலையாள் கிடைத்ததாகவும் அதே சமயம் வியாபாரத்தில் எதிரியொருவனை ஒழித்ததாகவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கலாமென்பது அவனது கணக்கு. அவ்விதம் அவனடித்த கல்லில் அகப்பட்டவன்தான் இந்த எஸ்கிமோ ஹென்றி. எனக்கென்ன வேலைக்கு வேலையாகவும் ஆயிற்று. என்னிடமிருந்த பொருட்களை விற்றதாகவும் ஆயிற்று” 

“ஆனால் ஹென்றி. சொந்தமாகத் தொழில் செய்யும்பொழுது நீ இன்னும் அதிகமாகச் சம்பாதிக்கலாமல்லவா?. அதையிட்டு நீ கவலைப்படுவதில்லையா?” 

இதற்குச் சிறிது நேரம் அமைதியாகவிருந்த எஸ்கிமோ ஹென்றி மெதுவான குரலில் அவர்களைப் பார்த்துக் கூறினான்: நீங்களிருவரும் யாரிடமும் கூறுவதில்லையென்று. குறிப்பாகக் ஹரிபாபுவிடம் கூறுவதில்லையென்று எனக்குச் சத்தியம் செய்தால் நானொரு உண்மை சொல்வேன்”. 

அவன் இவ்விதம் புதிராகக் கூறவும் இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் அவனிடமிருந்து அந்த இரகசியத்தை எப்படியாவது அறிந்து விட வேண்டுமென்று ஆவல் பொங்கியது. அந்த ஆவல் குரலிலும் தொனிக்க, இருவரும் ஒரே சமயத்தில் “நிச்சயமாக ஒருத்தரிடமும் சொல்ல மாட்டோம். சொல்” என்றார்கள். 

அதற்கு எஸ்கிமோ ஹென்றி கூறினான்: “நீங்கள் கேட்டீர்கள் சொந்தத் தொழிலைக் கைவிட்டது கவலையைத் தரவில்லையாவென்று. யார் சொன்னது நான் என் சொந்தத் தொழிலைக் கை விட்டேனென்று.” 

இளங்கோ: “கை விடாமலென்ன.. இப்பொழுது நீ ஒருவருக்குக் கீழ்தானே வேலை செய்கிறாய்?” 

ஹென்றி: “பார்வைக்கு அவ்விதம் தென்பட்டாலும் நான் இன்னும் என் சொந்தத் தொழிலையும் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன். அதோ பார் அந்த எனது தோற் பையில் கொண்டு வரும் எனது பொருட்களையும் அவ்வப்போது இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் விற்று விடுகின்றேன். பார்த்தாயா என் சாமர்த்தியத்தை” 

சிறிது நேரத்துக்கு முன்தான் ‘பார்த்தாயா என் சாமர்த்தியத்தை ‘யென்று இவனை வேலைக்கு வைத்தவன் பார்வையாலேயே வெளிப்படுத்திச் சென்றதாக எண்ணிக் கொண்டிருந்த இளங்கோவுக்கு குள்ளத்தோற்றத்துடனும் குள்ளக் கால்களுடமிருந்த இந்த எஸ்கிமோவின் இந்த நேரிடையான பதில் சிறியதொரு அதிர்ச்சியினையுமேற்படுத்தியது. எவ்வளவு இயல்பாக இவனால் இன்னொருவனின் முதுகில் குத்துவதை வெளிப்படையாகக் கூற முடிகிறது. 

இவனது அதிர்ச்சியினைப் பார்த்த ஹென்றி கேட்டான்: “என்ன பயந்து விட்டாயா?” 

இளங்கோ: “இல்லை. இவ்விதம் வெளிப்படையாகவே கூறுகின்றாயே. அதுதான் சிறிது அதிர்ச்சி. எல்லோரும் இவ்விதமான விடயங்களைக் களவாகச் செய்வார்கள். நீயோ எம்மில் இவ்வளவு நம்பிக்கை வைத்து வெளிப்படையாகக் கூறுகிறாயே.” 

ஹென்றி: “அதிகமாகப் பாவம் புண்ணியத்தை இங்கு பார்த்து விடாதே. அவ்விதம் பார்ப்பவனானால் உன்னால் இந்த நகரில் எதுவுமே செய்ய முடியாது. நண்பனே! இது நாய் நாயைத் தின்னும் உலகம். மறந்து விடாதே!” 

அச்சமயம் மேலும் சில பாவனையாளர்கள் வந்து விடவே ஹென்றி அவர்களைக் கவனிக்கச் சென்று விட்டான். அச்சமயம் பார்த்து அருள்ராசா இளங்கோவிடம் கூறினான்: “காய் பொல்லாத காய்தான் எமனையே பச்சடி போட்டு விடுவான் போலை”. 

– தொடரும்…

– குடிவரவாளன் (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 2015, ஓவிய பதிப்பகம், பட்லகுண்டு, தமிழ்நாடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *