சேற்றில் மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 20, 2024
பார்வையிட்டோர்: 907 
 
 

(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்.)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம்-10

வீரமங்கலத்துக்குச் சென்று உடையார் வீட்டில் விசாரித்துவிட்டு வடிவு திரும்புகிறான். காந்தி அங்கு வரவேயில்லையாம்.

பொழுது சாய்ந்து இருள் பரவிக் கொண்டிருக்கிறது. சாலையை விட்டு வரப்பில் இறங்கி அவன் விரைந்து நடக்கிறான்.

அவனுடைய கண்களுக்குச் சட்டென்று மின்னி நெளியும் அரவம் தென்பட்டு விட்டது. அதே மின்னல் வேகந்தான், கையில் வால் சிக்க, பிடித்துக் கரகரவென்று ஒர் அசுர வேகத்துடன் சுழற்றுகிறான். அந்த வேகத்தில் அது நஞ்சைக் கக்கும். சுழற்றிக் கொண்டே வரப்பில் அடித்தால் பத்தாது. மடைப்பக்கம் கல்லில் போட்டு அறைகிறான். சுழற்றல், அறைதல். பாம்பு தன் வீரியத்தை இழந்துவிட்டது. காடா விளக்கினடியில் பஞ்சமி மிளகாய் அரைக்கிறாள். மாரியம்மா பிள்ளையை மடியில் போட்டுக்கொண்டு மெல்லிய குரலில் பாடித் தட்டுகிறாள்.

இவன் உள்ளே செல்கிறான். விளக்கை வைத்துக்கொண்டு, பின் முற்றத்தில் அதைப் பரிசீலனை செய்தவாறு வளைந்த சிறு கூரிய கத்தி கொண்டு சீராகக் கிழித்து நினத்தை வேறாக்குகிறான்.

நல்ல பாம்பு, அவ்வளவு பருமனில்லை. என்றாலும் நீளமாக மூன்றடிக்கு மேல் இருக்கும்.

மண்வெட்டியை எடுத்துக் குழிதோண்டி நினத்தைப் புதைத்து முடிவிட்டு, தோலைக் குளத்துப்பக்கம் கொண்டு செல்கிறான்.

நன்றாகக் கழுவிக் கொண்டு வந்து, உப்பைச் சீராகத் தடவி கயிற்றில் தொங்க விடும் நேரத்தில் வீட்டில் அப்பன் வந்துவிடுகிறான்.

“ஏண்டால, அந்த… யா மவன் கெரு வச்சிட்டிருக்கிறான். நீ இப்ப இத்த அடிச்சிக் கொண்டாந்த?”

சாம்பார் சாராயம் குடித்தாலும் நிதானமே இழக்க மாட்டான்.

“ஏழெட்டு ரூபாக்கிப் போவும். அவங் கெடக்கிறான். காலடில வந்து சுத்திச்சி. நான் புடிக்கப் போனனா?”

“காந்திப் பொண்ணக் காணமுன்னு சொன்னாங்க?”

“அதா வீரமங்கலம் உடயார் வூட்டுக்குப் போய் விசாரிச்சிட்டு வரச்சொன்னாங்க. அங்கொண்ணும் வரலியாம்.”

“பொட்ட புள்ளகள வக்கிறாப்பல வக்கணும். ஒண்ணும் போற போக்கு செரியில்ல. இந்த விருத்தாலம் பய கூட மூலைப்பயலுமில்ல சேந்திட்டுத் திரிகிறான்? வீரபத்திரன் சொல்லிட்டிருக்கிறான், அம்பது ரூபா குடுக்கிறானுவளாம் அஞ்சு, நிமிட்டில அல்லாம் பேத்திட்டுப் போயிடணுமாம்! களுதப் பயலுவ, வரிக்கல்லத் தூக்கி அப்பால போடுறாப்பல நினைச்சிட்டானா?”
“முதலாளி கம்முனு இருக்கிற வரய்க்கும் நமக்கு ஒண்ணும் பயமில்ல, அதெல்லாம் கைய வய்க்கமுடியாது.”

மீசையைப் பல்லில் கடித்துக் கொண்டவாறு பொங்கும் மகிழ்ச்சியை வடிவு அடக்கிக் கொள்கிறான். அம்சுவே அவனுக்குச் சொந்தமாகிறாள்.

அவருக்குத் தெரியாதா? சாடை மாடையாக லட்சுமியக்காளும் புரிந்து கொண்டிருப்பாள்.

“நாளக்கி சம்பா ஒழவு இருக்குதாம். வீரபத்திரஞ் சொன்னான். நம்ம பக்கம் எதும் செல்லல. இங்கியும் சம்பாச் சீரெடுக்கணும். அது ஒரு ரெண்டேக்கரிருக்கு. ஆனா மொதலாளி ஒடம்பு சரியில்ல. நாளக்கி மாட்ட ஓட்டிட்டு வாரேன். கருக்கல்லன்னே…”

ஆவி பரக்க வடித்த சோற்றைத் தட்டில் போட்டுப் பரப்புகிறாள் தங்கச்சி. வண்டியோட்டிச் சென்ற பழனிப் பயல் அசுரப் பசியுடன் வந்துவிட்டான்.

சாட்டைக் குச்சியைக் கூரையில் பத்திரமாகச் செருகி விட்டுத் தலைத்துணியை உதறிக்கொண்டு, “சோறு வைக்கா? என்று ஆணையிடுகிறான்.

சாராயம் குடித்திருக்கிறான். “ஏண்டால, நீ மத்தியானம் என்ன சொல்லிட்டுப் போன?”

“என்னா சொன்னே?”

“குடுரா காச சாங்காலம் அஞ்சு ரூபாயாக் கொண்டாந்து தாரேன்னு அரிசி வாங்க வச்சிருந்த காசத் தூக்கிட்டுப் போயிட்டா!”

“நா என்ன இப்ப தரமாட்டேன்னா சொன்னே?…”

வேட்டி இடுப்பில் கைவிட்டு கசங்கிய ஒரு ரூபாய் நோட்டை எறிகிறான்.

“ஏண்டா, இதானா காசு!”

“நாளக்கி மிச்சம் தாரேன்! சோறு… சோறு…!”

“இந்தப் பய, நெல்லு மிசின்ல மூட்ட தூக்கிப் போட்டு நாலு அஞ்சி சம்பாரிச்சி இப்பிடிக் குடிச்சித் தொலக்கிறான். குடிசய வேற பேத்துட்டுப் போவணும்ங்கறானுவ… இன்னக்கிப் பூர ஒரு வேலையுமில்ல. ஒருமா நடவுக்கு அஞ்சாளுன்னு கணக்கு. முப்பத்தஞ்சு ரூபா கூலிக்கு பன்னண்டாளுன்னு மேச் சாதிக்காரியல்லாம் மினுக்குச் சேல கட்டிட்டு நடவுக்கு எறங்கிடறாளுவ… நா என்னாத்த அரிசி வாங்க, எண்ண வாங்க, புளி வாங்க?…”

இதெல்லாம் யார் காதிலும்விழுவதில்லை. பழனிப் பயல் படுத்ததும் தூங்கிவிடுவான். குப்பன் பீடி குடித்துக் கொண்டு பொன்னனிடம் கொஞ்சம் குந்திப் பேசிவிட்டு வருவான். வடிவு பீடியை வாயில் வைத்துக்கொண்டு குளத்தைச் சுற்றிக்கொண்டு வெளியே போவான். மடை பார்க்கும் பொறுப்பு அவனுக்குத் தான். சில சமயம் கருக்கலில் போய்விட்டு வருவான். இரவில் முதலாளியைப் பார்த்து, சங்க சமாச்சாரம், ஊர்சேதி பொது நிலவரம் பேசி வருவான்.

முதலாளி வீட்டுத் திண்ணையில் விளக்கெரிகிறது.

“ஏண்டா? நீ போயி எந்நேரம் வந்து சேதிசொல்லுற? என்னாடா இருக்காளா இல்லையா. செறுக்கிமவ?…”

வசைகள் கட்டுக்கடங்காமல் பொல பொலக்கின்றன.

“இல்ல மொதலாளி. நா அப்பமே வரணுந்தா பொறப் பட்டே… அதுக்குள்ளாற…” தலையைச் சொறிகிறான். பொய் எதுவும் கைகொடுக்க வரவில்லை.

“உடயாரு மருமவ இல்ல. அவுங்கல்லாம் புதுக்குடிக்கு சினிமா பாக்க போயிருக்காவளாம். அங்க என்னமோ புதுசா படம் வந்திருக்கில்ல…”

“…யா மவ; ஐயா காலு வீங்கிக் கிடக்காருன்னு ஒரு அச்சம், கூச்சம் எதுனாலும் இருந்தா போவாளா? இவபாட்டுக்கு சினிமாக்கா போறா? வரட்டும் சொல்ற, தெருவுல நிக்க வச்சி செருப்பாலடிக்க…”

“என்னாத்துக்கு அவன வச்சிட்டுக் கத்துறிய? சரோஜா கூட்டிருப்பா. சினிமான்னு போயிருக்கா போல. அப்படி எப்பவும் போமாட்டாளே அவ?”

“ஏண்டால, நிசந்தாஞ் சொல்லுறியா? காந்தி வந்திச்சாமா அங்க?”

இப்போ அவள் வரவில்லை என்று சொன்னால் அவன் மீது கோபம் பாயும்.

“அதுதாங் கேட்டேன் மொதலாளி. ஒடயாரு அவங்கல்லாம் சினிமாவுக்குப் போயிருக்காடா, போன்னிட்டாரு.”

“ஏண்டா, பெரியம்மா கூடவா போயிருக்கு?”

“வூட்ட யாரும் இல்ல…”

“சினிமான்னா, ராத்திரிவருவாகளா? அவங்க சித்தாமு வீட்டில தங்குவாங்க காலம வருவாங்க. இவ ஏம் போறா, அறிவு கெட்டவ? நீங்க ரொம்பத் தகிரியம் குடுத்துத்தா அவ இத்தினி துணிச்சலாப் போறா!”

அவள் அவர் சந்தேகப்பட்டபடி, ஆறுமுகத்தின் வீட்டை நாடிப் போயிருக்கவில்லை என்று சம்முகத்துக்குச் சற்றே ஆறுதலாக இருந்தாலும் இரவு தங்க வாய்ப்பெடுத்ததில் சொல்லொணாத கோபம் வருகிறது.

“காலம வந்து சேருவா. படிச்ச பொண்ணு. அவங்க கேட்டிருப்பாங்க. இவ என்ன இப்ப ஆருவூட்டுக்கோ போயிட்டாளா? மரியாதி தெரிஞ்ச சிநேதிதங்க, ஏம் போட்டுக் கத்துற?..” என்று பாட்டியும் கூறுகிறாள்.

“அதென்னமோ, காலம அவ மொவத்தில நா முழிக்க மாட்டே… அந்தக் கழுத வந்ததும் உள்ள தள்ளிக் கதவச் சாத்தி வையி. கடனோ உடனோ வாங்கி, கட்டிக் குடுத்துத் தொலக்கணும். வடிவு! காலம எங்கூட புதுக்குடி வாடால. முத பஸ்ஸில போயிட்டு இந்தக் காலையும் டாக்டர்கிட்ட காட்டிட்டு, இவ விசயம் தோது பண்ணிட்டு வாரே. இப்பிடி செறுக்கிமவ ராத்தங்கிட்டு வாரான்னா எவ்வளவு கேவலமா எல்லாம் பேசமாட்டானுவ? நாம பேசல? அவ இவ ஒழுங்கில்லன்னு நம்மகிட்ட பஞ்சாயத்துப் பண்ணவரப்ப, நாமே இப்பிடி ஒளுங்கில்லாம போயிட்டா எந்த மயிரா மதிப்பா? ஒரு நாயமில்ல?”

வடிவு ஒன்றும் பேசவில்லை. அவன் தங்கச்சியை ஐயனார் குளத்தில் கட்டிக்கொடுத்து மூன்று வருஷம் வாழவில்லை. கையில் குழந்தையுடன் திரும்பிவிட்டாள். அவள் புருசன் ஒரு பொட்டப் பயல், காசை வாங்கிக்கொண்டு புதுக்குடி ஆசுபத்திரியில் போய் ஆபரேசன் பண்ணிக்கொண்டு வந்திருக்கிறானாம். பெண்சாதியை வாழவைக்கத் துப்பில்லாத பயல், யாருக்கடி கருப்பமானேன்னு அடித்து இம்சைப்படுத்தியிருக்கிறான். இவள் இங்கே வந்திருக்கிறாள். பிள்ளை பெற்று ஆறு மாசமாகிறது. மாமியார் சாவுக்கும் இவள் போகவில்லை. எந்தப் பஞ்சாயத்துத் தீர்ப்பும் இல்லாமல் இவள் இங்கே இருக்கிறாள்.

அம்சுவை அவன் கட்டிக்கொள்ள பஞ்சமி இங்கு இருப்பது கூட ஒரு தடையாகப் பேசக்கூடும். கிழவி மிகவும் கருவக்காரி.

வரப்பும் மேடும் பள்ளமும் அவன் பிறவி எடுத்த நாட்களாகப் பழகிய தாய்ப்பூமி. இப்போதும் அந்தப் புளியமரம் அங்கு இருக்கிறது. முறுக்கேறிய கைவிரல்களால் அழுந்தப் பூமியைப் பற்றிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் ஓர் அரக்கனைப் போல் இருக்கிறது. பக்கத்தில் ஓர் இலுப்பை மரம் முன்பு இருந்தது. இப்போது வெட்டிவிட்டார்கள். அதில் தான் ஏனை கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். அவனும் அப்படித் தொங்கியிருப்பான். அம்கவும் அப்படித் தொங்கியிருப்பாள். நாளைக்கு அவர்களுக்குக் குழந்தை பிறந்தாலும் அந்த வயல் வெளிகளில் தான் ஓடியாடி வளரும். வரப்போரப் பொந்துகளில் நண்டைப் பிடித்து முதுகோட்டை வகிர்ந்து குடித்து விளையாடுவார்கள். மாட்டின் வாலை முறுக்கி ஓட்டிக் கூச்சல் போட்டுக்கொண்டு களிப்பார்கள். ஆற்றிலே முக்குளி இட்டுத் துளைவார்கள். குளத்தில் முங்கிச்சென்று அல்லிப் பூப்பறித்து வருவார்கள். அவன் பிள்ளையும் விடமுள்ள பாம்பைப் பிடித்துக் கரகர வென்று சுழற்றி அதை மாய்க்கக் கற்றுக்கொள்வான். இப்படியே அவன் பிள்ளை, அவன் பிள்ளை, அவன் பிள்ளை என்று இந்த வயற்காட்டில்…

மடை பார்த்துவிட்டு வீடு திரும்பியவன் சிறிதுநேரம் கூடக் கண்ணயரவில்லை.

கோயில் பூசாரியின் குரல் கேட்கிறது.

“மத்தியானத்துக்குள்ளார ஆளுகளெல்லாம் வாராங்க. செங்க வண்டி மண்ணு வண்டி வரும். மரியாதியா எல்லாம் காலி பண்ணிடுங்க.”

வடிவு துள்ளினாற்போல் எழுந்து உட்காருகிறான்.

“காலி பண்ணலன்னா என்ன செய்திடுவீங்க?”

“ஏண்டா? எத்தினி திமிரு உனக்கு, பன்னிப்பயலே? மூஞ்சி முகரை பேந்துபோகும்! கோயில் எடத்த காலிபண்ணிட்டுப் போங்கன்னு ஆறுமாசமா சொல்லிருக்கு என்ன வெள்ளாட்டா டா?”

“யார்ரா வெள்ளாடுறாங்க. நீ மருவாதி வக்கணும்!”

“வடிவு சும்மாரு!… பூசாரியய்யா, நாங்க கேட்டிருக்கிறம். ஒரு நாலஞ்சு நா. இப்பதான் எதோ கூலி எங்கக்கு வரும்? வார அமாசின்னிக்குக் காலி பண்ணிடறம்…”

“நீ சும்மாரு. இவனுகளுக்கிருக்கிற ரயிட் நமக்கு என்ன இல்ல இப்ப?”

“என்னடா ரயிட்டுனு பேசற? அம்மங்கோயில் வளவில உக்காந்திட்டு அசிங்கம் பண்ணிறிய..?”

குப்பன் சாம்பார் மகனை விலக்கி விடுகிறான். “எல, உன்ன கருக்கல்ல மொதலாளி வரச் சொன்னாரில்ல? நீயே இங்க இப்ப நிக்கிற? போடா…” மகனைப் பற்றிக் குளம் சுற்றி அப்பால் தள்ளிவிட்டு வருகிறான் சாம்பார்.

ஏதோ கைமாறிப்போன ஏமாற்றம் நேரிட்டாற்போன்று வடிவுக்குக் கோபம் வருகிறது. “திருட்டுப் பயலுவ, பத்து வருச்மா கோயில் சொத்தக் கொள்ளையடிச்சி வீடு வாசல் அது இது கட்டிக்கிட்டாங்க. இப்ப இவனுவ சாமி கும்புடறானுவளா..”

பூமணி ஆற்றில் தண்ணிர் படி முழுக ஓடுகிறது. முகத்தைக் கழுவிக் கொள்கிறான். தொண்டையைக் காறி உமிழ்ந்து கொப்புளிக்கிறான். பளாரென்று விடிந்து பறவையினங்கள் வானில் பறந்து செல்கின்றன. அதைப் பார்த்துக் கொண்டே நிற்கின்றான்.

மனிசனுக்குத்தான் எல்லாக் கட்டுக்காவல் சங்கடங்களும் என்று தோன்றுகிறது. கிளியும் குருவியும் தன்னிச்சையாகத் தேடித் தின்னுகின்றன. ஆண் பெண் கூடிக் குஞ்சுபொரித்துச் சந்தோசமாக இருக்கின்றன.

ஒரு மரத்தில் கிளியும் மைனாவும் குருவியும் ஓணானும் மரங்கொத்தியும் காகமும் சொந்தம் கொண்டாடி இரைதேடிக் கூடுகட்டுகின்றன.

கிளியும் குருவியும் சண்டை போடுவதில்லை. ஓணானும் மரங்கொத்தியும் சண்டை போடுவதில்லை. மனிசன் மட்டும் ஒருத்தருக்கொருத்தர் என்று இருப்பதில்லை. புதிய ஞானோதயம் வந்துவிட்டாற்போல் பூரித்துப் போகிறான். இதை அம்சுவிடம் சொல்லவேண்டும். அம்சுவிடம் எத்தனையோ பேசவேண்டும் போல் பரபரப்பாக இருக்கிறது. ஆனால்…

வாயிலில் கிழவன், கிழவி அரண் இருக்கிறார்கள்.

சம்முகம் கொல்லைப்பக்கம் போசி வெந்நீரில் காலை வைத்துக்கொண்டு படியில் உட்கார்ந்திருக்கிறார்.

மாடுகளை அவிழ்த்து, படலைக்கு வெளியே முளையில் கட்டுகிறான்.

“இன்னிக்கு ஒழவோட்ட போறமான்னு கேட்டுட்டு வாரச் சொன்னாரு அப்பா.”

“இருக்கட்டும், சம்பாச்சீரு, முதல்ல நாளு இன்னிக்கு நல்லால்ல. கால பஸ்ஸுக்குப் புதுக்குடி போய்ட்டு வருவம். ராமலிங்கம் வண்டி தாரேன்னாரு மாட்டக்கட்டி ஓட்டிட்டுப் போவலாம். மாட்ட ஓட்டிட்டுப்போ…”

சம்முகம் உடல் நலிவினால் மட்டுமில்லை, இந்தப் பத்துப் பதினைந்து நாட்களில் ஆடிப் போய்விட்டார். கண்கள் சோர்ந்து, சவரம் செய்யாத முகமும், தளர்ந்து தொங்கும் கழுத்துமாகப் பரிதாபத்துக்குரியவராக இருக்கிறார்.

“அடியுரமும் யூரியாவும் வாங்க வச்சிருந்த காசை எடுத்துச் செலவழிக்க வேண்டியிருக்கு. குண்டான் ஓட்டயாயிடிச்சி. இங்க வந்தா ரெண்டு ரூவா மேல சொல்றா. கடயில பாத்து வாங்கிட்டு வரணும்னிருந்தேன்…”

லட்சுமி முணுமுணுத்துக்கொண்டு ரூபாய் நோட்டை எண்ணிப் பையில்போட்டுக் கொடுக்கிறாள்.

“இப்ப அதும் இதும் முணுமுணுக்காத, அந்த நாய் வந்தா இந்த ரூமில வச்சிப் பூட்டி வை! நான் டாக்டரிட்டக் காட்டிட்டு சங்கத்துக்குப் போயி பொன்னுவைப் பாத்துப் பேசிட்டு. முடிஞ்சா, அவம்மாளையும் பாத்திட்டுத்தா வருவேன். அவன் அப்படி மேல மேல எகிறுற புள்ளயில்ல. இன்னிராவில வரலன்னா, நாளக்கித்தான் வருவேன். காபந்தா இருந்துக்குங்க…”

வெண்மையான வேட்டியும் சட்டையும் அணிந்து கொள்கிறார்.

வடிவு வெள்ளாழத் தெருவுக்குச் சென்று ராமலிங்கத்தின் வண்டியை ஓட்டிக்கொண்டு வருகிறான். அதற்கு முன் குடிசைக்குள் சென்று சட்டையணிந்து வேறு வேட்டியை உதறி உடுத்திக்கொண்டு, பாம்புத் தோலை ஒரு சாக்குச் சுருணையில் பத்திரமாகச் சுற்றி வைத்துக் கொள்கிறான்.

நடவுக்குச் செல்லும் பெண்கள் வண்டியில் சம்முகம் ஏறச் சிரமப்படுவதைப் பார்த்து நிற்கின்றனர். “எங்க போறாவ? ஆசுபத்திரிக்கா?… தஞ்சாவூருக்கா?… ஒடம்பு ரொம்ப லேவடியாப் போயிட்டாரே?”

“புதுக்குடிக்குத்தாம் போறாரு…”

“பத்துப் பதுனஞ்சி நாளாச்சி கண்ணிலியே காணம்.”

“ஒண்ணுக்கும் கவலப்படாத, ஆத்தாள நினைச்சி பாரத்த போட்டுருக்கிறம். சரியாப்பூடும்..” என்று கிழவி தைரியம் சொல்கிறாள்.

“சம்முவம், வண்டிலியா போற? நா வாரண்டால…!”

கிழவர் தலைதுாக்கும்போது கிழவி தொட்டமுக்குகிறாள்.

“உனக்கென்ன இப்ப? இனி அங்கிட்டுப் போயி கள்ளக் குடிச்சிட்டு ஆடிட்டு வரணுமாக்கும்! கெட சும்மா!”

“வாரேன் லட்சுமி. எங்கடா பழனிப்பய வந்தானா?”

“ஆமா முதலாளி. கீச்சுக் குரலில் கூறித் தாவி ஏறி அமர்ந்துகொள்கிறான் பழனி, “மருள் நீக்கில பஸ் ஏத்திவிட்டுப் போட்டு மாட்ட ஓட்டிட்டுப் போற முதலாளி.”

“சரி, சரி.” ஏரைத் தூக்கிக்கொண்டு சின்னமயான் எதிரே வருகிறான். பழனி சாட்டையால் வீறி மாடுகளை முடுக்குகிறான். நல்ல பாதை இல்லை. ஆற்றுமேட்டுக்குக் கீழே கிழக்கே சென்று ஆற்றைக் கடக்கவேண்டும். உள்ளூரில் அவரால் நடந்து சென்று பஸ் ஏறுவது கடினம். மேலும் பலரும் பலதும் கேட்பார்கள் என்று சம்முகம் அஞ்சினார்.

வண்டி குலுங்கி, ஆடிப் பத்தடி கடக்கவில்லை. நாகு ஓட்டமாக ஓடி வருவது தெரிகிறது. “இந்தப் பயல ஆரு துறந்துவுட்டது? எல நிறுத்துடா வண்டிய வடிவு, அவனக் கூட்டிட்டுப் போயி கதவச் சாத்திட்டு வா!”

அதற்குள் நாகு நாக்குழம்ப எச்சில் ஒழுக வண்டியைப் பிடிக்க வந்து விடுகிறான். “நா… நா…ம். ஹை ஹை… நம்…”

“போடா வீட்டுக்கு! போ! எடுறா கைய!”

பழனி வண்டியை நிறுத்த, வடிவு அவனை இழுத்துப் பார்க்கிறான். ஆனால் இந்தப் பேய்ப் பயலுக்கு எத்தனை வலிமை!

“தூக்கி ஆத்துல கடாசுடா! அடிச்சிட்டுப் போவட்டும்?”

“நா… நாவு… நாம்… ஹைஹை…”

ஹை ஹை என்று தான் வண்டியில் போகவேண்டும் என்று கபடமில்லாத ஆசையை அவன் வெளியிடுகிறான். ஆனால் யாருக்கும் அது உகப்பாக இல்லை. இதற்குள் லட்சுமியும் விரைந்து வருகிறாள். இருவருமாக அவன் ஊளையிட, இழுத்துக்கொண்டு செல்கின்றனர்.

‘மாடு மேய்க்கக்கூட லாயக்கில்லாமல் ஒரு பயல வச்சிட்டு இப்படி வாழ்க்கையை இழுத்திட்டுப் போகவேண்டிருக்கே…’ என்று நெற்றியில் அடித்துக் கொள்கிறார்.

அத்தியாயம்-11

புதுக்குடியில் காலையில் மழை பெய்திருக்கிறது போலிருக்கிறது. இரண்டு துாற்றல் விழுந்தால் போதும், சாலை கசகசவென்று கால் வைக்கத் தகுதியில்லாமலாகி விடும். பஸ் நிறுத்தம் கசகசப்பின் உச்சம்.

சாதாரண நாளாக இருந்தால் சம்முகம் விசுவநாதன் வீட்டுக்கு நடந்து சென்றுவிடுவார். டவுன் பஸ் ஏதோ போகிறது. ஆனால் அதற்குக் காத்திருந்து, அது நிற்கும் இடத்திலிருந்து மீண்டும் நடப்பது பிரயாசையாக இருக்கும்.

வடிவு ஒரு ரிக்ஷாக்காரனிடம் பேரம் செய்து, மூன்று ரூபாயிலிருந்து ஒன்றே கால் ரூபாயில் இறங்கி, அவரை உட்காரச் செய்கிறான்.

“நீங்க போயிட்டு வாங்க முதலாளி. நா பின்னோடையே வாரேன்.”

“வீடு தெரியுமில்ல?”

“ஏந் தெரியாது?”

கையில் சாக்குச் சுருணை, வீச்சம் இரண்டும் அவன் இரகசியத்தை அம்பலப்படுத்துகின்றன.

‘…ப்பயல், பாம்பு கொன்றிருக்கிறான். விருத்தாசலம் பிள்ளை சொன்னது சரியாகத்தானிருக்கிறது!”

பெரிய வீதி தாண்டி, மண்டபம் கடந்து ரிக்ஷா செல்கிறது.

வெயில் விரைவாக உச்சிக்கு ஏறுகிறது. மணி பதினொன்றிருக்கும் என்று தோன்றுகிறது.

வழக்கம்போல் விசுவநாதன் மேல் திண்ணையில் உட்கார்ந்திருக்கவில்லை.

வண்டிக்கு ஒன்றேகால் ரூபாயைக் கொடுத்துவிட்டு மெள்ளப் படி ஏறுகிறார். உள்ளிருந்து பெரிய கண்களும் தாழம்பூச் சிவப்புமாக அவர் பெண்தான் வருகிறாள்.

“அப்பா இருக்கிறாராம்மா?”

“…குளிச்சிட்டிருக்காங்க. நீங்க ஆரைப் பாக்க வந்தீங்க?” அவள் கண்கள் அவருடைய பற்றுப் போட்ட காலின் மீது படிகிறது.

“அப்பாரைத்தா, விசுவநாதன். கிளியந்துறை சம்முகம்னாத் தெரியும்.”

சற்றைக்கெல்லாம் நெற்றியில் துளி நீருடன் மேலே பனியனைப் போட்டுக்கொண்டு விசுவநாதன் வருகிறார்.

“என்னப்பா சம்முகம்? இரண்டாயிரம் ரூபாய் கிடைச்சிடிச்சா?” சிரிக்கிறார்.

சம்முகத்துக்குச் சிரிப்பு வரவில்லை. மனதில் ஏதேதோ தலைகால் புரியாத ஆத்திரங்கள். அந்தச் சிறுக்கி நேத்துக் காலம ஓடிட்டா என்று அழவேண்டும் போலிருக்கிறது. அவள் உடையார் வீட்டுப் பெண்ணுடன் சினிமாவுக்குச் சென்றிருக்க வில்லை என்று ஏதோ மனக்குறளி கூறுகிறது. ஏனெனில் அவள் ஒரு தீர்மானமில்லாமல் ராத்தங்கி இருக்கமாட்டாள்.

“நேத்துக்காலம அந்தச் சிறுக்கி வீட்ட விட்டுப் போனவ திரும்பி வர இல்ல, சாமி. ஒடயார் வீட்டுக்குப் போறேன்னு போனவ வரல. அங்க தலையாரிப் பயல அனுப்பிச்சேன். இல்ல, சினிமாவுக்குப் போயிருக்காங்கிறான். எனக்கு சமுசயம் ஏன்னா, அந்தத் தேவுடியா-மவன், இங்க அன்னிக்குக் காரில வந்தானே, அவன எங்க வீட்டுக் கோடரிக்காம்பு வீட்டுக்கே கூட்டியாந்தான். தெருத் திண்னயில உட்காந்து எங்காது கேக்க, இந்தச் சிறுக்கிகிட்ட எங்கூட்டுக்கு வந்து அப்பாரப் பாரு, உனக்கு சீட் கிடைக்கும்னு குழயடிச்சான்… இப்ப எங்கிட்ட சிநேகிதி கிட்டப் போறேன்னு காதுகுத்திட்டு ஓடிட்டா… சாமி… படிக்க வச்ச ரெண்டு நாய்களும் இப்பிடித் துரோகம் பண்ணிடுச்சே?”

அவர் கடகடவென்று சிரிக்கிறார்.

“நீ ஏண்டா சம்முகம் பிரலாபிக்கிற? இதெல்லாம் உன்னாலும் என்னாலும் தடுத்து நிறுத்த முடியுமா? பள்ளம் கண்ட எடம் தண்ணி பாயிது!”

“என்ன சாமி, இப்பிடிச் சொல்றீங்க? சேத்துப் புழுக்களா இருந்தவங்க இன்னிக்கு இந்த அளவுக்கு வர எத்தினி அடியும் மிதியும் பட்டோம்? குடும்பம் எப்படிப் பஞ்சிப் பிசிறுகளாச்சி? இன்னும் ஒரு மூக்கறைப் பிண்டத்தை வச்சிச் சுமை இழுத்திட்டிருக்கிறோம். இப்ப கண்ணு முழிச்ச இந்த நாய்களுக்கு நன்னி இல்லாம போயிடிச்சே? கோட்டைன்னு நினைச்சி இறுமாப்பு வச்சிட்டிருக்காதேன்னு மூஞ்சிலடிச்சிட்டுப் போனாப்பல…”

“அட ஏண்டா பொலம்பிச் சாகற? படிச்ச பொண்ணு. உங்காலத்துப் பிரச்னை வேற; இப்ப அதுங்க கண்ணோட்டம் வேற, ஏம் விருதாவா சங்கடப்பட்டுட்டிருக்கே? விட்டுத்தள்ளு!”

“எப்படிங்க விட்டுத் தள்ளுவது? எங்க தாய் தகப்பனுக்கு இருந்திராத சவுரியம் எங்களுக்கிருக்கு, எங்களுக்கில்லாத சவுரியம் எங்க மக்களுக்குன்னு அவங்கள கோபுரத்தில ஏத்தி வைக்கணும்னு பாடுபட்டேன். பையன் கட்டிக்கிட்ட வேட்டிய நா உடுத்துவேன். பொண்ணு… அவள சமீன்வீட்டுப் புள்ள மாதிரி நடத்தினேன்…”

அவர் அருகில் வந்து தோளைப் பற்றுகிறார். “என்னடா இவ்வளவு திராபையா இருக்கிற பொண்ணாவது புள்ளயாவது; ஏதோ உன் கடமை, நீ செஞ்சே. அவங்கவங்க கரும பலனை அவங்கவங்க அநுபவிச்சிட்டுப் போறாங்க…” திடுக்கிட்டாற்போல் சம்முகம் குலுங்குகிறார்.

“வெந்ததத் தின்னு விதி வந்தாச் சாவோம், நாம சாணிப் புழுக்களப் போல இருக்கத்தான் பிறவி எடுத்தோம்ங்கறது அறியாமை. எழுந்திருங்கடா” என்று ஆவேசப்பிரசங்கம் செய்த விசுவநாதனா இவர்?

“என்ன சாமி! நீங்களே இப்ப கருமம் அது இதுன்னு பேசுறீங்க? இன்னும் எங்க குடிகள்ள ஒரு சிலரத் தவுர எல்லாம் சேத்தில உழச்சிட்டு, கள்ளக் குடிச்சிட்டு, பொண்டு பிள்ளைகளைப் பராரியா நிக்கவச்சிட்டிருக்காங்க. நினைச்சிப் பாத்தா ஒரு முன்னேத்தமில்ல. சுடுகாட்டுக்குப் போக வழி குடுக்க மாட்டேங்கறாங்க. அன்னிக்கு சாமி கும்பிடாதியன்னும் வள்ளிக்கும் முருகனுக்கும் திரட்சிக் கல்யாணம்னும், ஊர் மேயுற திருட்டுச் சாமிகளை ஏண்டா கொண்டாடணும்னும் அசிங்க அசிங்கமா பேசினானுவ, நோட்டீசு போட்டு ஒட்டினானுவ. எங்க பொண்டுவ திருட்டுத் தனமா சாமி கும்புடப் போவாங்க. இப்ப இன்னிக்கு திடீர்னு சாமி கும்பிடணும், கோயில் சீர் பண்ணனும், இப்ப குடிசயக் காலி பண்ணுன்னு கிட்டிய வக்கிறான்.”

“ஆர்ராது?…”

“அதா விருத்தாலம்புள்ள, இன்னும் ஊரில இருக்கிறவங்க அல்லாந்தா.”

“இப்ப ரொம்ப செழிப்போ?…”

“கோயில் சொத்தெல்லா அவங்கய்யில தான இருக்கு? பத்து வருசமா கொள்ளையடிச்சிருக்கானில்ல?”

“திருட்டுப் பயலுவகதா சாமி பூதம்னு வேசம் போடுறானுவ. அவனுவகளுக்குத்தான பயம்?”

“… சாமி, என் காலப் பாருங்க! இது வேற ரோதன. அன்னிக்கிப்போன பிறகு நடமாட்டமே இல்ல…” குதிகாலைத் திருப்பிக் காட்டுகிறார். பாத முழுவதுமே வீங்கி இருக்கிறது. அவர் கைவிரலால் வீக்கத்தை அழுத்திப் பார்க்கிறார். பிறகு உள்ளே சென்று சட்டையை மாட்டிக்கொண்டு திரும்புகிறார். அவரால் காலைக் கீழே ஊன்றி வைக்க முடியவில்லை. மெள்ள சுவரைப் பற்றிக்கொண்டு நொண்டினாற்போன்று அடுத்த வீட்டுப்படி ஏறுகின்றனர்.

வாயில்மேல் திண்ணையில் கைக்குழந்தைக்காரிகள், சளி, இருமல், தலைக்கட்டு என்று ஒரு நோய்க் கூட்டம் காத்திருக்கிறது. கடந்து உள்ளே செல்கின்றனர். இடைகழிக்கப்பால் பெரிய கூடத்தின் ஓர் ஓரத்தில் திரை இருக்கிறது. ஒரு வெள்ளைச்சேலை நர்சும், இன்னும் சில நோயாளிகளும், டாக்டர் உள்ளே பார்க்கிறார் என்பதை அறிவிக்கின்றனர். பெஞ்சி ஒன்றில் அவனுடன் அமர்ந்து கொள்கிறார். உள்ளிருந்தவர் வந்ததும் இவர்களை முதலாக விடுகிறாள்.

“அட… வாங்க சித்தப்பா, எனக்குச் சொல்லி அனுப்பக் கூடாது? நான் வருவேனே?”

சம்முகம் பின் தொடருவதைப் பிறகே கவனிக்கிறாள்.

“நம்ம பழைய நாளைய தோஸ்த், கீதா. கிளியந்துறை. நடையா நடப்பான். காலைப்பாரு…”

சம்முகம் நாற்காலியில் அமர்ந்து சிறு ஸ்டுலில் காலை வைத்துக் காட்டுகிறார்.

பட்டுத்துணிபோல் மினுமினுக்கும் முடி… ராஜகளை. மொழுமொழுவென்ற கைவிரலினால் தொட்டுப் பார்க்கிறாள்.

முன்னுக்கு வரும் தன்மை எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் முடங்கி விடுவதில்லை. இப்படி அவர்கள் குடியில் பிறந்தவர்கள் நூற்றில் ஒருவரேனும் வரமுடிகிறதா? எங்கோ ஆயிரத்தில் ஒன்று. இத்தனை சலுகைகளைப் பற்றித் தம்பட்டம்போடும் காலத்தில்!

கையைக் கழுவிக்கொண்டு வந்து வயசு அது இது எல்லா விவரங்களும் கேட்கிறாள்.

நீர், இரத்தம் எல்லாம் பரிசோதனை செய்ய வேணுமாம். எல்லாம் அங்கேயே செய்து கொள்ளலாமாம். இப்போது ஓர் ஊசி போட்டபின், அடுத்த நாள் பரிசோதனை முடிந்து விவரம் தெரிந்தபின் மருந்து கொடுப்பார்களாம். அது அமுங்குவது நல்லதல்ல. இரண்டொரு நாள் பாத்து கிழித்துவிடலாம். சரியாகப் போய்விடும். ஒன்றும் பயப்படுவதற்கில்லை.

“அப்ப, நீ இன்னிக்கு எதுக்குடா ஊருக்குத் திரும்பிப் போகணும்? பேசாம இங்கியே தங்கிடு!…”

சம்முகத்துக்கு அது உகப்பாகப் படுகிறது. ஆனால், அவரால் நடந்துபோக இயலாத நிலையில் காபி, சாப்பாடு என்று இவர் வீட்டில் தங்குவது சரியா?

“இப்ப… இத தெருக் கோடிதான். நம்ம சாவித்திரி கூடப் படிச்ச பொண்ணு அவப்பாதான், இந்த பரிசோதனை பண்றாங்க நீ போயிச் சீட்டைக் காட்டி எல்லாம் குடுத்திட்டு வந்துடு. நானும் வரட்டுமாடா?”

“வானாம் சாமி. நீங்க போங்க. நம்மபய, குப்பன் மகன் வடிவு வருவான். இருக்கச் சொல்லுங்க, வரேன்…”

டாக்டரிடம் காட்டி ஒன்றுமில்லை என்று கேட்டபின், ஊசி போட்டபின், சிறிது மன இறுக்கம் குறைகிறது. பரிசீலனைக்கு ஆறு ரூபாய் கேட்கிறார்கள். நீரும் இரத்தமும் கொடுத்துவிட்டுத் திரும்புகையில் களைப்பாக இருக்கிறது. வடிவு வந்தால் மறுபடியும் இரண்டு ரூபாய் செலவு பண்ணிக்கொண்டு சங்க அலுவலகத்துக்குப் போய்விடலாம்.

இவனுக்காக ஐயர் சாப்பிடாமல் காத்திருக்கிறாரோ?…

அவருடைய குடும்ப நிலைமையை உணர்ந்துகொண்ட பின் அங்கு தங்குவது சரியாகப்படவில்லை.

வடிவு இந்த வழியாகத்தான் போக வேண்டும் என்பதை எதிர்பார்த்து, அங்கேயே திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார். காலை நேரத்தின் வரையறை முடிந்து கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டு அங்கிருந்த ஆள் போகிறான்.

இவர் வெற்றுத் திண்ணையில் பொருந்தாமல் அவன் வரும் வழி நோக்கி இருக்கையில் வடிவு சிரித்துக்கொண்டே மறுபுறம் இருந்து குரல் கொடுக்கிறான்.

“என்ன மொதலாளி, இங்க உக்காந்திருக்கீங்க?”

“…வடிவு, ஒரு ரிச்சா கூட்டிட்டு வா, சங்க ஆபீசுக்குப் போயிருவம். இங்கியே தங்கிப் பார்க்கணும்னு சொன்னாங்க…”

“அப்ப…?”

“நீ என்னக் கொண்டுவிட்டுப் போட்டு, ஊருக்குப்போ, நாளக்கிச் சம்பா ஒழவு ஆரம்பிச்சிடணும்னிருந்தேன்.”

“அதெல்லாம் நாம்பாத்துக்கிற முதலாளி. நீங்க நல்லா கவனிச்சிட்டு வாங்க. ஊசி போட்டாங்களா?”

“ஆமா. ஒண்ணும் பயமில்ல. இரண்டு முணு நாளில நல்லாயிடும்னாங்க. ஐயிரு அண்ணம் மக தானே? நல்லபடியா கவனிக்கிறாங்க. இது ஒரு வயசுக்குளந்த, தேரு பாக்க வரும். இப்ப. எத்தினி உசரம் போயிட்டாங்க.”

“ஐயிரப் பாத்துச் சொல்லிட்டுப் போகலாம்!…”

வடிவு அவரை வண்டியில் ஏற்றிவிட்டு, ஒட்டலில் சென்று எலுமிச்சைச் சோறும் தோசையும் பொட்டலமாக வாங்கிக் கொண்டு போய் அலுவலகத்தில் கொடுக்கிறான். அலுவலகத்தில் பொன்னடியானில்லை. அவன் எங்கோ வகுப்பெடுக்கச் சென்றிருக்கிறானாம். காவலாக ஒரே ஒரு ஆள் மட்டும் இருக்கிறான். விசாலமான கூடம் இருக்கிறது. சுருட்டி வைத்திருக்கும் பாயொன்றை எடுத்துப்போட்டு அமர்ந்து கொள்கிறார் சம்முகம்.

“அம்மாட்ட சொல்லு. மடைபாத்துத் தண்ணிவுடு. போறப்ப, பன்னண்டு ருவாக்கி, இருக்கல்ல, பூச்சி மருந்து டப்பி, அத்த ஒண்ணு வாங்கிட்டுப் போ. நா நாள மறுநாளக்கிக் கண்டிப்பா வந்திடுவேன். ஒழவத் தள்ளிப் போடாதீங்க. பூசாரியோ விருத்தாலமோ வந்து மெரட்டினாங்கன்னா, நா. வந்து பேசிக்கிறேன்னு சொல்லுங்க. குடிசய இப்ப பிரிக்கிறதாத் தயங்க வாணாம்…”

அடுக்கிக்கொண்டே போகிறார். ஆனால் முக்கியமான முள்ளிருக்கும் இடம் தவிர்க்கிறார். திரும்பிச் செல்லு முன் அவள் வீட்டுக்கு வந்திருப்பாள். இவரும் இங்கே தங்கும் வாய்ப்பில் பொன்னடியானைக் கண்டு பேசி, இன்னும் ஒரிரு தலைவர்களையும் வைத்துக் கொண்டு எல்லாம் தீர்மானம் செய்துவிடலாம். ஐப்பசியில் கட்டிவிடவேண்டும். இவள் கைவிட்டுப் போய்விடக்கூடாது.

வடிவு அவரை விட்டபின், ஓட்டலில் வந்து மூன்று ரூபாய்க்கு நன்றாகச் சாப்பிடுகிறான். சம்முகம் அவன் செலவுக்கு ஐந்து ரூபாய் கொடுத்திருக்கிறார். பூச்சி மருந்து பன்னிரண்டு ரூபாய். அது தவிர, பாம்புத் தோலுக்காக ஆறுருபாய் கிடைத்திருக்கிறது.

விடுதலை மகிழ்ச்சியில சினிமாக் கொட்டகையில் வந்து உட்காருகிறான். ராஜா ராணி, தேர், குதிரை, யானை, பூதம், நாகலோகம் எல்லாம் வரும் படம். ராஜகுமாரியும் ராஜகுமாரனும் பூங்காவில் காதல் செய்யும்போது, அம்சு அருகில் இருப்பதாகவே கற்பனையில் மிதக்கிறான்.

வாய்மடை, வடிமடை, வரப்பு, வெட்டு, குடிசைகளின் உறுதியில்லா நிலைமை – எல்லாமே அப்போதைக்கு அவன் உலகைவிட்டு அப்பால் போகின்றன. சூனியக்காரி ராஜகுமாரியைக் கிளியாக்கிக் கூண்டில் அடைத்து விடுகிறாள். ராஜகுமாரன் பூதத்தின் துணைகொண்டு அந்தக் கிளியைத் தேடிப் புறப்படுகிறான். வழியில் நாகலோகம். நாககுமாரி காதல் பெரிய பெரிய விடம் கக்கும் நாகங்கள் சாதுவாக இருக்கின்றன. நாககுமாரி அவற்றை ஒதுக்கி வைத்துக் கொண்டு அரசகுமாரனை உபசரிக்கிறாள்.

‘இத்தினி பாம்பையும் எப்படி வச்சிப் படம் புடிக்கிறானுவ! எல்லாத்துக்கும் பல்லைப் புடுங்கிருப்பா. ஆனாலும்… ஒருக்க மட்றாசுக்குப் போயி, படம் புடிக்கிறது. ஷூட்டிங்காமே, அதைப் பாக்கணும்…’ என்ற ஆசை கபடம் இல்லாமல் முகிழ்த்து வருகிறது.

அத்தியாயம்-12

சினிமா முடிந்து வருகையில் இலேசாகத் தூற்றல் விழுகிறது.

பஸ் நிறுத்தத்தில் வந்து ஒரு டீ குடித்துவிட்டு, மிட்டாய்க் கடையில் சேவும் அல்வாவும் வாங்கிக்கொள்கிறான். மீதி நான்கு ரூபாயை மடித்துப் பையில் தனியாக வைத்துக்கொண்டு பஸ்ஸுக்காகக் காத்து நிற்கிறான்.

“எங்க இந்தப் பக்கம்? வடிவு?…”

தேவுதான் நிற்கிறான்! சர்ட்டு சராய் போட்டுக்கொண்டு, கையில் ஒரு தோல் பையுடன்… “ஆ…மாங்க. தலவருக்கு உடம்பு சரியில்ல. கால்ல… வீக்கம், கூட்டியாந்து ஆசுபத்திரில காட்டிட்டு வூட்டுக்குப் போறேன்…”

“பஸ் ஆறு மணிக்கு வரணும்.”

“நீங்க ஊருக்குத் தானா சாரு!”

தேவு சிரிக்கிறான். “என்னப் போயி சாருமோருங்கற. நீயும் நானும் ஒண்ணாப் படிச்ச தோழர்கள் தானே, தேவுன்னு கூப்பிடறது.”

“அதெப்படிங்க, நீங்க ஒசரத்துக்குப் போயிட்டீங்க. நாந்தா படிக்காம ஏரப் புடிச்சிட்டேன்!”

வடிவுடன் அவனும் சிரிக்கிறான். “அப்ப நீதான் உசத்தி. ஏரின் பின்னால் தான் உலகமே. உங்களைப் போன்ற தொழிலாளிக இல்லன்னா, ஏது மத்த வளமை எல்லாம்?”

“அது சரி, அது உளுமதா. ஆனா யாருங்க அதெல்லாம் ஒத்துக்கிறாங்க? படிச்சி அழுக்கு ஒட்டாம வேலை செய்யிறவங்க ஆருங்க எங்களை மதிக்கிறாங்க?…”

“அது யாரோட தப்புன்னு நினைக்கிற? உங்க தப்புத் தான்…”

“எங்க தப்பா?…”

“ஆமாம். வெறும கூலி உசத்திட்டாங்கன்னா கம்முனு பேசாம இருந்திடறீங்க…”

“பின்னென்ன செய்யிறது?”

“பாரு, பாரு உங்களுக்கு இன்னும் என்ன இல்லைங்கறது கூட பிறத்தியான் சொல்ல வேண்டியிருக்கு… அது சரி, உன் தலைவரு மகளக் கூட்டிட்டுப் போனாரே அன்னிக்கு, ஸீட் கிடச்சிச் சேந்தாச்சா?”

வடிவு உதட்டைப் பிதுக்குறான். “எங்கங்க. அதென்னமோ ரெண்டாயிரம் கட்டணும்னாங்களாம். உள்ளுக்குள்ள ஏதோ கரசபுரசலு. அவருக்கும் கால்ல ஏதோ குத்தி காச்சல் கடுப்பு. எந்திருக்கிறதுக்கில்ல. இந்தப் பொண்ணு பாருங்க..” குரலைத் தாழ்த்திக் கொண்டு சுற்று முற்றும் பார்க்கிறான்.

“நேத்து காலம எங்கோ ஓடிட்டது. ஒடயாரு வீட்டுக்குப் போச்சின்னாங்க. என்னப்போயி வீரமங்கலத்துல விசாரிக்கச் சொன்னாங்க. அங்க இல்ல. நமுக்கேங்க வம்பு. அவங்க சினிமாக்குப் போயிட்டாங்கன்னு சொன்னேங்க. ஆக பொண்ணு இப்ப வந்திருக்குதோ என்னமோ…?”

அவன் புருவங்களை நெரித்துக்கொண்டு நிற்கிறான்.

“அவரு மகன் மட்ராசில இருக்காரில்ல…? அங்க போயிருக்குமா இருக்கும்?”

“அதென்னன்னு தெரியல மகங்கூட செரியில்லிங்க.” இதற்குள் பஸ் வருவது தெரிகிறது. இருவரும் ஓடிப்போய் இடம் பிடிக்கிறார்கள். முன் வரிசையில் கெளரவமான தேவுவின் அருகில் அமரும்போது வடிவுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இவன் கையை அமர்த்திவிட்டு அவனே சீட்டெடுக்கிறான்.

“என்னாத்துக்குங்க நீங்க, சீட்டெடுக்கிறது?”

“பரவாயில்ல, நான் உனக்குச் சீட்டெடுக்கலாம். எல்லாம் செய்யலாம்…”

புன்னகை.

கறுப்புக்கூட உதிர்ந்து பயல் எப்படி இருக்கிறான்! படிச்சவன் தன் இனத்தானை ஒதுக்குவதைத் தான் வடிவு கண்டறிந்திருக்கிறான். கோபு, நின்ற இடத்தில் கூட நிற்காமல் போவான். வாடா போடா என்று எவ்வளவு துச்சமாகப் பேசுவான்? ஏன், சட்டக்கூலி கொடுக்கக்கூடாது என்று நின்றான்! மருள் நீக்கி வரும்வரை அவன் எதுவும் பேசவில்லை. அங்கே இறங்கி நடக்கின்றனர். வரப்பின் குறுக்கே நடக்கையில் திடீரென்று “ஆமா, அந்த ஐயனார் கொள வெவகாரம், அதற்கு ஒண்ணும் பண்ணலியா?” என்று கேட்கிறான்.

“…என்ன பண்ணுறதுங்க? அவனுவ பக்கம் அல்லாக்கட்டும் ஆளுகளும் இருக்காங்க. கொடி புடிச்சிட்டுக் கூச்சப்போடுவம். போலீசு வந்து அடிச்சி உள்ள தள்ளு வா. ஒண்ணும் இல்லமலேயே இவனுவ சந்தேகம்னு புடிச்சிட்டுப் போயி வாக்கரிசி வாங்கிக்கறாங்க…”

“உங்க சங்கம் பின்ன என்னதா செஞ்சிட்டிருக்கு?”

“போன வருசத்துக்கு இந்த வருஷம் கூலி உசந்திருக்கில்ல?”

“அது சரிதா. இருந்தாலும் பல உரிமைகளை விட்டுக் குடுக்கிறோம். சின்னச் சின்னப் பிரச்னைபோல தெரிஞ்சாலும் எல்லாரையும் கூட்ட அதுதான் உதவி செய்யும்.”

“அது சரிதாங்க. இப்பக் கூட, காலம குடிசயப் பேத்திடுவோம்னு பூசாரி பயமுறுத்திட்டுப் போறான். முதலாளி புதுக்குடில படுத்திட்டாரு…”

குபீரென்று தேவு சிரிக்கத் தொடங்கி அடக்கிக் கொள்கிறான்.

“என்னங்க…?”

“இல்ல, நீ முதலாளின்னதும் சிரிப்பு வந்தது…” இவனுக்கும் வெட்கமாக இருக்கிறது.

“முதலாளின்னு கூப்பிட்டுப் பழக்கமாயிடிச்சிங்க. நம்ம எனத்துல, சொந்தமா அஞ்சுமா வச்சிட்டு ஒரு தலவரா இருக்கிறவர நாம முதலாளின்னு கூப்பிடுறது கவுரததானுங்களே?”

“…இப்பத்தா எனக்கு நல்லாப் புரியுது. நம்ம சனங்களுக்கு தாங்க ஒரு முதலாளியா, மிராசா, சமீனா இருக்கணும், நமக்குக்கீழ நாலுமனுசன் கைகட்டி சேவுகம் பண்ணனும்ங்கற உணர்வு ரெத்தத்தோட ஊறிப்போயிருக்கு. பொது உடமைச் சித்தாந்தமெல்லாம் பேசி ஊறினாக் கூட, தனக்குன்னு வாரப்ப, எந்த மனுசனும் பொஞ்சாதியையேனும் குறைஞ்சபட்சம் அடிமைன்னு நினைச்சி அதிகாரம் பண்ணாம இருக்கிறதில்ல. தாங்க ஒரு உடமைக்காரராக இல்லாத நிலையிலதான் சித்தாந்தம், வேதாந்தம், எல்லாம்…”

தலைவனை விமரிசனம் செய்வது என்பது ஒத்துக்கொள்ள முடியாத வரம்பாக ஊறிப் போயிருக்கிறது. எனவே வடிவு அவன் பேச்சை ஏற்றுக்கொள்ளவில்லை.

“நீங்களும் எத்தினி வருசமா உழைக்கிறீங்க? உங்கப்பாரும் அடிதடி, சிறைவாசம்னு எத்தினி கஷ்டப்பட்டிருக்காரு. இன்னும் ஒரு சாண் நிலம் சொந்தமாக வச்சிக்க முடியல. இவங்க கோயில்ல சாமில்லன்னு சொல்றப்ப நீங்க கும்பிடக்கூடாது; ஏத்துக்கணும். இவங்க சாமி கும்பிடணும்னு சொல்றப்ப நீங்க குடிசயத் தூக்கிட்டு நடுவீதில நிக்கணும்! அது சரி, முன்ன ஸ்கூல் கட்டணும்னு உங்களக் குடிசங்களத் தூக்கிட்டுப்போயி, கோயிலுக்குப் பக்கத்தில அவங்கதா போட்டுக்கச் சொன்னாங்க. அப்ப, வெள்ளாழத் தெருப் பக்கத்திலோ, அக்கிரகாரத்துக்குப் பக்கத்திலோ உங்க நாலஞ்சு பேருக்கு எடம் குடுக்கக் கூடாதா? பரப்பயல்னா, ஊருக்கு வெளியே இருக்கணும்னுதா இப்பவும் நினைக்கிறாங்க இல்லியா? இத்தக் கேக்க உங்களுக்குத் தெரியலியே?”

வடிவு ஒரு வியப்புடன் தேவுவின் சொற்களை ஏற்கிறான்.

“நாயந்தான். இப்பக்கூட, அக்கிரகாரத்தில பல வீடும் பாழடஞ்சி கிடக்கு. ஆத்தோரம் வரயிலும் எத்தினி கொல்லை நீண்டு பாழாக்கிடக்கு? அங்க போயிக் குடிசைகளைப் போட்டுக்க எடம் குடுப்பாங்களா? மறுபடியும் ஊருக்கு வெளியே இன்னும் தள்ளி ஆத்துக்கு அக்கரையில சட்டியத் தூக்கிட்டு ஓடணும்னு தான சொல்றாங்க…” வடிவு வெளிப்படையாகக் கேட்கவில்லை. ஆனால் உள்ளே சலனமடைகிறான்.

“என்ன பேசாமலிருக்கிற வடிவு? புரட்சியக் கொண்டாரோம்னு எங்கப்பன் உங்கப்பன் உங்க தலைவரோட அப்பன் எல்லாம் அடிபட்டாங்க. சாவுக்கும் அஞ்சல. அம்மாமாருகளெல்லாம் போலீசுக்காரனும் அவனும் இவனும் மானம் குலச்சிச் சுமை சுமக்க வச்சதையும் பொறுத்தாங்க. ஆனா எல்லாம் அடங்கிப் போச்சு. குடுத்த விலையெல்லாம் வெத்துக்கருக்காய்க்குன்னு ஆச்சி. நினைச்சிப் பாரு…”

வடிவுக்குச் சுருக்கென்று உரைக்கிறது.

‘புரட்சி’ என்ற சொல்லைப் பற்றி வடிவு நிறையக் கேட்டிருக்கிறான்.

அவர்கள் சங்கத்துக் கோஷமே அந்த உயிர்ச் சொல்தான். உச்சவரம்புப் போராட்டம், கூலி உயர்வுப் போராட்டம், விலைவாசிப் போராட்டம், நிலப் பட்டாப் போராட்டம் என்று எத்தனையோ போராட்டங்களில் அவனுடைய அப்பன், ஏன், அம்மாவும் கூடக் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றிருக்கிறார்கள். ஆறுமாசம், நான்கு மாசம் என்று போவதும், வக்கீல், கோர்ட்டு என்று அலைவதும், அவனுக்கு வாழ்க்கையில் சாதாரணமாகப் பழகியவை. ஆனால் அவன் பெரும்பாலும் அந்த சமயங்களில் நிலத்தைப் பார்த்துக் கொள்ளத் தங்கிவிடுவான். இப்போது சில நாட்களாகத்தான் சில்லறை சச்சரவுகளில் சிக்கிக் கொண்டு காவல் நிலையங்களைப் பார்த்து வருகிறான். சில மாசங்களுக்கு முன்பு இப்படித்தான் ஒரு நாள் சாயங்காலம் குடித்துவிட்டுத் தெம்மாங்கு பாடிக்கொண்டு போனான். நடவு, உழவு எதுவும் இல்லாத நாட்கள். உளுந்து பயிறு பிடுங்கிய பின் தரிசாகக் கிடந்தன. இவனுக்கு அன்று கையில் கொஞ்சம் காசு கிடைத்திருந்தது. லீவுக்கு வந்திருந்த ஐயர் மகன் கொடுத்திருந்தான். அஸ்தமங்கலத்துக்குச் சினிமாவுக்குப் போவதாக எண்ணிக்கொண்டு புறக்காவல் நிலையத்துக்கு முன் சென்று கொண்டிருந்தான். ஐயர் மகன் சிவப்புக் கட்டம்போட்ட புதிய தேங்காய்ப் பூத்துவாலை ஒன்றும் அவனுக்குக் கொடுத்திருந்தான். அதைத் தலையில் சுற்றிக் கொண்டிருந்தான்.

ஏட்டையா அவனைக் கைக்குச்சியால் ஒரு தட்டுத் தட்டினார். “ஏண்டால? என்னா சமாசாரம்?… எங்கடா வந்து ஆட்டம்போடுற?” என்றார்.

அப்போது இம்மாதிரி பப்ளிக்காக கள்ளுக்கடைகள் திறந்திருக்கவில்லை. தோப்பில் தான் ஊறல் விற்பார்கள். ஆனால் எல்லோரும் குடிப்பதுதான் அப்போது அவனைப் பிடித்ததற்கு காரணம் என்று நினைத்தான்.

“இல்ல… சாரு…” என்று குழறினான்.

ஏட்டு அவன் தலைத்துண்டைப் பற்றி இழுத்தார்.

“இன்னாடா சேப்புத் துண்டு போட்டிருக்கிற?. கம்னாட்டிப் பயலே.” என்று திட்டி முதுகில் நான்கு சாத்தினார்.

“ஐயோ… இல்லீங்க..”

“குடிச்சிட்டு வந்து டேசன் முன்ன ஆட்டம் போடுறான். இன்னாடா தயிரியம்?…”

“இல்லிங்க சாரு இல்லிங்க தெரியாம வந்திட்டேன்.”

“ஏண்டால, சேப்புத் துண்டு போட்டிருக்கிறியே, புரட்சின்னா இன்னான்னு தெரியுமாடா?”

“தெரியும் சாரு புரட்சின்னா சாஸ்தி கூலி வரும். நல்லா இருப்போம். அதுக்குத்தான் போராடுறம்…”

“அட போடா முட்டாப்பயல? போயி உந் தலவரிட்டக் கேளு!” என்று புதிய துண்டை உருவிக்கொண்டு அவனை விட்டார். அன்று வந்ததும் முதல் வேலையாகச் சம்முகத்திடம் “புரட்சின்னா என்ன முதலாளி? சரியாச் சொல்லுங்க!” என்று கேட்டான்.

சம்முகம் நடந்த விவரங்களைக் கேட்டுவிட்டு அவனுடைய கபடமற்ற தன்மைக்குச் சிரித்துக்கொண்டார். “நீ முதலாளின்னு கூப்பிடக்கூடாது, முதல்ல!”

‘புரட்சி என்றால் என்ன?’ என்று தலைப்பிட்ட ஒரு சிறு புத்தகத்தைக் கொடுத்தார்.

“எளிமையா எழுதிருக்கு பாரு, படிச்சித் தெரிஞ்சிக்க, நா வந்து கேப்பேன், சொல்லனும்!” என்றார்.

இவனுக்குப் படிக்க வணங்குவதில்லை. எழுத்துக் கூட்டி அந்தச் சிறு பிரசுரத்தில் நான்கு பக்கங்கள் படித்தான். பிறகு அப்படியே போட்டு விட்டான். அது மறந்தே போயிற்று.

தேவு அவன் வழிக்குப் பிரிந்துபோகிறான்.

வடிவு முதலாளியின் வீட்டுக்கு வருகிறான். வீடே ஓய்ந்து கிடக்கிறது. அம்சுவும் லட்சுமியும் கன்னத்தில் கைவைத்த வண்ணம் உட்கார்ந்திருக்கின்றனர். கிழவன் படுத்துக் கிடக்கிறான். கிழவியைக் காணவில்லை. பைத்தியக்காரப்பயல் உள்ளே கதவைத் தட்டி ஊளையிடுகிறான்.

“…காந்தி வரலிங்களா?”

“ஆரு? வடிவா? முதலாளி வரல?…”

“அவங்க ரெண்டு நா தங்கி ஊசி போட்டுக்கிடணுமா. நீர், ரத்தம் பரிசோதனை பண்ணிருக்காவ. இந்தாங்க, பூச்சி மருந்து, உள்ளாற வாங்கி வையுங்க…”

சட்டைப்பையில் கைவிட்டு அவர் கொடுத்த பணத்தில் மீதிச் சில்லறையையும் பூச்சி மருந்து – பில்லையும் எடுத்துக் கொடுக்கிறான்.

“ஐயிரு வீட்டுக்குப் போனாங்களா, சருக்காராசுபத்திரிக்குப் போனாங்களா?”

“ஐயிரு வீட்டுக்குத்தா…”

“ஏண்டா, புதுக்குடிக்கு சினிமாக்குப் போனதாவா ஒடயாரு சொன்னாரு?”

“ஆமா…”

“நீ காந்தி வந்திச்சான்னு கேக்கலியா?”

“நா எல்லாம் எங்கன்னே. சினிமா போயிருக்காங்கன்னு சொன்னாரு. சரி, காந்தியும் போயிருக்கும்னு சொன்னே…”

“மக்குப் பயல்ங்கறது சரியாயிருக்கு…”

லட்சுமி முணமுணத்துக்கொண்டு உள்ளே போகிறாள்.

சொல்லத் தெரியாமல் சங்கடம் செய்கிறது. இந்தப் பெண், அத்துமீறி ஓடிவிட்டாளா?

வடிவு அங்கே பிறகு தாமதிக்கவில்லை.

நிலவு எழும்பும் காலம்தான். எனினும் நீர்ச்சாரல் விசிறும் மேக மூட்டத்தில் நிலவின் கவர்ச்சியில்லை. எதிரே வருபவர் முகம் விளங்காத மங்கல் மருதனும் பொன்னனும் குடித்துவிட்டு அதே குரலில் கூலிப்பிரிவில் சச்சரவு செய்வது கேட்கிறது. அவன் விரைந்து குளம் சுற்றிப் போகிறான். ஏதோ நடவாதது நடந்திருப்பது தெரிகிறது. அங்கே ஒரு பஞ்சாயத்து விளக்குண்டு. கோயில் வாசலில் மணல் இறங்கியிருக்கிறது. சவுக்குத்தடிகள் இறங்கியிருக்கின்றன. இடுப்பில் பட்டை வேட்டியும் கழுத்தில் உருத்திராட்சமுமாகப் பூசாரி நிற்கிறான். மணியகாரர், மூலையான்… பின்னே… ஐயோ? அவர்கள் வீடு… குடிசை என்ன ஆச்சு? முட்டுமுட்டாக அரைச்சுவர்கள் மட்டுமே மானங் குலைக்கப்பட்ட நற்குடிப் பெண்கள்போல் நிற்கின்றன. பஞ்சமி செய்வதறியாது நிற்கிறாள். அவளுடைய தாய் காளியாயி மாரியாயி எல்லாரையும் கூவி அழைத்து அக்கிரமத்தைப் பார்க்கச் சொல்லி முறையிடுகிறாள். போலீசை வைத்துக்கொண்டு பிரிக்கச் சொன்னார்களாம்.

அப்பன் மூங்கில்கள், பொடிந்த கீற்று எல்லாவற்றையும் பிரித்துக் கொண்டிருக்கிறான். அமாவாசி கட்டாகக் கட்டித் தூக்கிச் செல்கிறான். குஞ்சு குழந்தைகள், ஆடு, கோழி நாய், சட்டி பானை, முறம், உரல், உலக்கை எல்லாம் அவன் முன் அநாதைகளாக நிற்கின்றன. தூங்கும் எரிமலையை ஏற்கெனவே தேவு தொட்டுப் பார்த்திருக்கிறான். இப்போது அது புகையையும் குழம்பையும் கக்குகிறது. வசையும் குரலும் மூர்க்கமாகப் பாய்கின்றன.

“யார்ராவன் தேவடியாமவன் எங்க வூட்டப் பிரிச்சது?”

கொடியேறிய அவரை தரையில் வீழ்ந்து புலம்புகிறது. படல்கட்டு இவர்கள் குடிசையைச் சுற்றிப் புதிதாக வளைத்திருந்தார்கள். அதை அகற்றவில்லை இன்னமும். உடம்பிலிருக்கும் சாரமனைத்தும் நடந்தும் ஓடியும் வெட்டியும் கொட்டியும் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் நிம்மதியாகப் படுக்க, உட்கார்ந்து பசியாற, அடிநிலம் சொந்தமில்லை, உரிமையில்லை என்று உரைத்துச் சொல்கிறார்கள். இந்த மண்ணைத் தவிர அவர்களுக்கு வேறு பாத்தியதை கொண்டாட எதுவும் நெருக்கமில்லை.

பல்லைக் குத்திக்கொண்டு விருத்தாசலம் பிள்ளையும் நிற்கிறார்.

“ஏங்க, இது நாயமா உங்களுக்கு? வாழுறவங்க வூட்டப் பிரிச்சிப்போட்டு சாமி உங்களக் கும்பிடச் சொல்லிச்சா! அந்த சாமிக்குக் கண்ணில்ல?”

“யார்ராது? வடிவுப் பய வந்திட்டானா? என்னாடா… பேச்சு தடிக்கிது?”

“ஆமா, தடிக்கத்தா தடிக்கும். வாழுறவங்க குடிசயப்பேத்து மானங்குலக்கச் சொல்லிச்சா ஒங்க சாமின்னு கேட்டேன்?”

“பறப்பயலுக்கு வந்த திமிரப் பாத்தீங்களா? ஏண்டா நீங்க கோயில் நிலத்தில் இருந்துகிட்டுக் கண்ட மாமிசத்தையும் உரிச்சிப் போட்டுக்கிட்டு அக்கிரமம் பண்ணது மில்லாம, நாக்குமேல பல்லப்போட்டு எதித்துக் கேக்க வந்திட்ட! போனாப் போகுதுன்னு இத்தினி நா வுட்டதுக்கு எங்க புத்தியதா சொல்லணும்?”

“நடவு வேலயெல்லா ஆனபெறகு நாங்க போயிடறோம்னு தான சொல்லிட்டிருந்தோம்? அதுக்கின்னு இப்ப பிள்ளையும் குட்டியுமா நிக்க வச்சிட்டு வூட்டப் பிரிச்சது நாயமான்னு கேக்குறேன். நாங்களும் உங்களப்போல மனிசங்கதானே? உங்கூட்ட இப்படிப் பிரிச்சிப் போட்டா சும்மா இருப்பீங்களா?”

“கேட்டிங்களா இந்தத் திமிர் பிடிச்சவன், வாதாடுறத? ஏண்டா? உங்க தலைவன் கிட்ட ஆறுமாசத்துக்கு முன்ன நோட்டீசு குடுத்து, அப்பப்ப சொல்லிட்டே வந்தேன். மரியாதையா பிரிச்சிட்டுப் போனிங்களா? சாமிக்கு விழா எடுக்கணும்னா அததுக்கு நாளு நட்சத்திரம் இல்லியா? உங்க இட்டத்துக்குத் தள்ளி வச்சிக்கிறதாடா? முட்டாப்பயல?”

“பத்து வருசமா ஒண்னுமே செய்யாம தள்ளிப் போட்டீங்களே? ஆரக் கேட்டீங்க அதுக்கு?”

“எதித்து எதித்துக் கேக்கற நீ? மூஞ்சி முகர பேந்து பூடும்! என்னடா துள்ளுற? நீ சொல்லியாடா நாங்க சாமி கும்புடணும்?”

குப்பன் வந்து மகனைப் பின்னுக்குத் தள்ளுகிறான்.

“நாங்க காலி பண்ண மாட்டமின்னா சொன்னம்? முதலாளிக்கு உடம்பு சரியில்லாம ஆசுபத்திரிக்குக் கொண்டு போயிருக்கு. இப்ப நடவு ஒழவுன்னு போனாதா எங்களுக்கு ரெண்டுகாசு கிடக்கிம்னு நாயமாச் சொன்னோம். நீங்க இப்படி நெருபிடியாப் பிரிக்க வச்சிட்டீங்க.”

“ஆமா, அப்படிச் சொல்லலன்னா நீங்க பிரிப்பீங்களா? அல்லாருமாச் சேந்து கொடியத் தூக்கிட்டுப் போராட்டம் கிளம்புவீங்க? எலே, நீங்க என்னிக்கு நாயமா நடந்தீங்க? வெட்டுறதும் குத்துறதும் அள்ளுறதும் துள்ளுறதுமா ஊரையே நாசம் பண்ணிப்போடுறீங்க. உங்களுக்கே நாயமில்ல, இங்க நாயம் கேக்க வரீங்க. போங்கடா..” இதைக் கேட்டதும் வடிவு திமிருகிறான்.

“எல, சும்மாருடா. அவங்க கை இப்ப மேலுக்கு இருக்கு. இப்ப எதும் கோபத்தில செஞ்சிட்டா, இவனுவளே நாலு வக்கப் படப்பக் கொளுத்திட்டு நம்ம செயில்ல கொண்டு வைப்பான். இப்ப நாம ராவிக்கு முதலாளி வூட்டில போயி ஒண்டிட்டுப் பொழுது விடிஞ்சி எதானும் பண்ணுவம்…”

அமாவாசியின் மனைவி கர்ப்பிணி, மற்றவர்கள் காலையிலேயே இந்த நெருக்கடி வந்ததும் கூட்டைப் பிரித்துக்கொண்டு ஆற்றுக்கு அக்கரையில் சேர்த்துவிட்டார்கள். குப்பன் உழவுக்குப் போய்விட்டுப் பிற்பகலில்தான் திரும்பியிருந்தான். பஞ்சமியைக் கண்டபடி ஏசினானாம். சீலையைப் பிடித்து இழுத்தானாம் ரங்கன் பயல்.

வடிவு உண்மையாகவே அவர்கள் கொல்லைகளை நாசமாக்கிவிடத் துடிக்கிறான். சம்முகம் இருந்திருந்தால் ஒரு படைதிரட்டி விடுவான் என்றே இவர்கள் அவர் இல்லாத நேரத்தில் இந்த அக்கிரமச் செயலைச் செய்திருக்கிறார்கள்.

“எல்லாம் மொதலாளி வீட்டுப் பக்கம் போயிருங்க, காலம பேசிக்கலாம்.”

பழனி சோற்றுக்கான பசியுடன் அப்போதுதான் ஓடி வருகிறான்.

அவன் தலையிலும் சுமையை வைத்து அனுப்புகிறான் குப்பன்.

வாசற்படியில் கிழவி குந்தி இருக்கிறாள். வீட்டினுள் சிம்னி விளக்கு எரிவதுகூடத் தெரியாமல் மங்கலாக இருக்கிறது.

“யம்மோ..!”

இடுப்பில் பிள்ளையும் தலையில் பாய்ச்சுருட்டும் கோணியுமாகப் பஞ்சமி…

“வீட்டெல்லாம் போல்சு வந்து பிரிக்கச் சொல்லிட்டாங்கம்மா!…”

லட்சுமி குரல் கேட்டு வெளிவருகிறாள். அம்சுவும் எட்டிப் பார்க்கிறாள்.

குப்பன் எல்லாவற்றையும் விவரிக்கிறான்.

“கேடு வந்திச்சின்னா ஒரே முட்டாத்தான் வரும். என்னாத்துக்குன்னு அழுவ?”

வடிவு வரிக்கம்பு, ஓலை எல்லாவற்றையும் கட்டி எடுத்து வந்து வீட்டுப் பின்புறத்தில் வைக்கிறான். இரண்டு ஆடுகள், ஒரு கோழி, எல்லாம் பின் தாழ்வாரத்தில் இடம் பெறுகின்றன.

அன்று லட்சுமி அடுப்பு மூட்டிச் சோறு பொங்கியிருக்கவில்லை. இப்போது இந்த எதிர்பாரா விருந்தைச் சாக்காக்கி அம்சு அடுப்பைப் பற்றவைத்து உலை போடுகிறாள். திண்ணை ஓரமிருந்த கலப்பை, சாக்கு போன்ற சாமான்களைப் பின்புறம் கொண்டு வைத்து வாயிலின் மறு திண்ணையில் குப்பன், மாரியம்மா, பஞ்சமி எல்லோருக்கும் இடம் ஒதுக்குகிறாள். வீட்டில் நிலவிய சோர்வையும், சங்கடமான அமைதியையும் இந்த இடையீடு நீக்குகிறது.

நாகு பஞ்சமியின் குழந்தையைப் பார்த்துவிட்டுக் குதிக்கிறான்.

“ஐயா… பா.ப்பா… கொழ்ழா…” என்று கையை நீட்டி ஆர்ப்பரிக்கிறான்.

“ஆமா. புள்ள ஒண்னுதா கொறச்ச…”

கிழவி முணுமுணுத்தாலும் பஞ்சமி அவன் மடியில் குழந்தையை வைக்கிறாள்.

சூடுபரக்க எல்லோருக்கும் அம்சுதான் சோறும் குழம்பும் வைத்துத் திண்ணையில் கொண்டு கொடுக்கிறாள். அவளுடைய பாட்டன் விருத்தாசலம் பிள்ளை வகையறாக்களை வசை பொழிந்து கொண்டே சோறுண்ணுகிறார்.

லட்சுமிக்கு ஒரு கவளம் எடுக்கக்கூட மனமிறங்கவில்லை.

“காலமேந்து ஒரு பருக்கயில்லாம இருக்கிற, என்னம்மா இது?”

கடிந்துகொண்டு இரண்டு வாய் உண்ணச் செய்கிறாள் மகள்.

குப்பன் சாம்பாருக்குச் சோறு வைத்துக் கொடுக்கையில் வடிவு இன்னமும் சுமை சுமந்து வருகிறான். பனந்துண்டம், குந்தாணி, எரு முட்டை என்று தட்டுமுட்டுக்கள் வீடு குலைந்ததும் வளர்ந்து வருவதுபோல் நீளுகின்றன.

இறுதியாகக் காத்திருந்து அம்சு அவனுக்குச் சிறு விளக்கை வைத்துச் சோறு படைக்கிறாள்.

அந்த இடிபாடுகளின் இடையிலும் அம்சுவின் முகம் எதிர்கால நம்பிக்கையாக உணர்வூட்டுகிறது.

“போதும், போதும்…” என்று அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவன் மொழிந்தாலும், கைகளும் மனமும் வேறொரு கோணத்தில் பரபரக்கின்றன.

பின் தாழ்வரையில் ஆடு, கோழிக் கூண்டு, எருமுட்டை, அடுக்கு ஆகிய தட்டுமுட்டுக்களுக்கிடையில் பீடி குடித்துக் கொண்டு அவன் உட்காருகிறான். துாற்றல் விழுகிறது.

உழவுமாடுகள், ஒரு கறவை வற்றிய மாடு, கரைந்துவிட்ட சிறு வைக்கோற்போர், அப்பால் எருக்கிடங்கு என்று கொல்லையில் ஒவ்வொரு சதுர அடியும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

நாகு அறைக்குள் செல்ல மறுக்கிறான். லட்சுமி சிறிது நேரம் போராடிவிட்டுக் கோடியில் அவன் அறைக்குள் தள்ளிக் கதவைச் சாத்துகிறாள்.

பின்னர் நடுவீட்டுக் கதவையும் சாத்திவிட்டு அம்சுவும், லட்சுமியும் படுத்துக் கொள்கின்றனர்.

“ராத்திரி காபந்தா இருக்கணும். இந்தப் பயலுவ மாட்டப் பத்திட்டுப்போனாலும் போவானுவ. வேற என்னமே அடாவடியாச் செஞ்சாலும் செய்வானுவ.”

தெருத்திண்ணையில் முடங்க இருக்கும் அப்பனைத் தட்டி எழுப்பி, “பின்னால போயி இரு. நா வயப்பக்கம் ஒரு சுத்துப் போயிவார. வேணுமின்னு மாட்ட ஆட்ட வுட்டு மேயச் சொல்லுவானுவ!”

அம்சுவுக்கு உறக்கம் கொள்ளவில்லை. இந்த மழையிலும் தூற்றலிலும், கொழுந்து விட்டெரியும் மேற்குடிப்பகையிலும் அவன் இருட்டில் ஏன் போகவேண்டும் என்றிருக்கிறது.

“யம்மோ..! அத்த இப்பப் போவாணாம்னு சொல்லு…!”

“உனக்கென்னடி அத்தினி கரிசனம் அவனவனப் பத்தி? அவனவன் கவலப்பட மாட்டானா?”

“இல்லம்மா, ஊரு கெட்டுக்கிடக்கயில, இந்தாளும் கோவத்தில எதானும் அடாவடியாப் பழி பாவத்துக்கு ஆளாறாப்பல எதேனும் செஞ்சிட்டா?”

லட்சுமிக்குச் சுருக்கென்று தைக்கிறது. நேரம் பற்றாமலிருக்கிறது. இவன் தன் கோபத்தைக்காட்ட அவர்களுடைய வயல்களில் மாட்டை விட்டோ, மடையை அடைத்தோ, வைக்கோலை நாசம் செய்தோ பழிக்காளாகலாம் இல்லையா? தேனிக் கூட்டில் தீயை வைத்து ஒட்டித் தேனைக் கவர்ந்து கொள்ளும் ஆதிக்க மனிதனைப்போல் அவர்கள் ஆள்கட்டு, அதிகாரம் எல்லாம் உடையவர்களாக இருக்கின்றனர். இந்தக் குடிசை பெயர்த்தல், பிணம் தூக்க இடம் கொடுக்க மாட்டோம் என்று மறுத்தது, எல்லாம் கவனிக்கப்படாமல் போகாது. வரும் மாசம் சங்கத்தின் பெரிய கூட்டம் இருப்பதாகவும், பல பிரச்னைகளை முன்வைத்துப் பெரிய போராட்டம் நடத்த இருப்பதாகவும் சம்முகம் சொல்லியிருக்கிறார். எனவே, எதிராளி பலமறியாமல் இவன் எதையேனும் செய்துவிட்டு, நமது ஒற்றுமைப் பலம் சிதறிவிட வாய்ப்பு வரக்கூடாதே?…

லட்சுமி கதவைத் திறக்கிறாள்.

“வடிவு…? எல வடிவு…?”

சிம்னி விளக்கைப் பெரிதாக்கிப் பார்க்கிறாள். குப்பன் சாம்பார்தான் கோழிக்கூட்டுக்கும் வறட்டிக் குவியலுக்கும் நடுவே, சாக்கு விரிப்பில் சுருண்டு குறட்டை விடுகிறான். வாயிற் கதவைத் திறந்து திண்ணையில் பார்க்கிறாள்.

“என்னாடி?…”

“வடிவுப் பயல வெளியில எங்கும் ராவுல போவானாம்னு சொல்லத்தா.”

“அவ ஆயிப்பனுக்கு இல்லாத அக்குசு ஒனக்கென்னடி? தென்ன மரத்துல தேளு கொட்டி பன மரத்துல நெறி ஏறிச்சாம்? பெரும்பண்ண, மிராசுன்னு அந்தச் செறுக்கி நினைப்பு. கமுக்கமா கதவச் சாத்திட்டுப் படுங்க போயி…”

கிழவியின் எரிச்சல் புரிகிறது. இவர்களுக்கு இடம் கொடுத்தது மட்டுமில்லை, அம்சு சோறு வடித்துப் போட்டது பிடிக்கவில்லை.

பொழுது உறக்கமில்லாமலே கழிகிறது.

– தொடரும்…

– பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்.

– சேற்றில் மனிதர்கள் (நாவல்), முதற் பதிப்பு: 1982, தாகம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *